எங்கள் முகவரி



வணக்கம் தோழர்களே இன்று ...
அரசியல் என்றால் முகம் சுளிப்பவர்கள் உண்டு.பொதுவாக யாரிடம் கேட்டாலும் நமக்கு எதுக்குங்க அரசியலெல்லாம் என்று சொல்லுவார்கள். உண்டான சோலியப் பாக்கவே நமக்கு நேரம் இல்லை. இதிலே எங்கே அரசியலைப்பத்திக் கவலைப் பட?என்பார்கள். தேர்தல் வந்தால் ஓட்டு போடுவோம்; ஆனால் அரசியலில் இருந்து விலகியே நிற்போம் என்று சொல்பவர்கள் உண்டு.பொதுவாகவே ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, நான் உண்டு என் வேலை உண்டு; எனக்கு அரசியல் பிடிக்காது என்று ஒதுங்கி நிற்போர் ஒருவகையில் அரசின் நடவடிக்கையை ஆதரிப்பவராகிவிடுகிறார். நமது வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அரசியல் இரண்டற கலந்து கிடக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திற்கு அரசும் காரணம் என்கிற போது அந்த அரசு பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா?

 இன்னொரு பக்கம்-யாராவது கமுக்கமாகச் சில காரியங்களைச் செய்தால் “ஏ…அவன் பயங்கர பாலிக்ட்டிக்ஸ் பண்றாம்ப்பா” என்போம்.

“உங்க பாலிடிக்ஸ்லே என்னை மாட்டிவிடாதிங்க”
“நாம ஒண்ணும் இங்க பாலிடிக்ஸ் பண்ண வரலே”
என்றெல்லாம் பேசுகிறோம்.இந்த இடத்தில் அரசியல் என்றால் சதி,வஞ்சகம்,சூது என்ற அர்த்தத்தில்தான் பேசுகிறோம்.

இன்னும் ஒரு வாதம் உண்டு . “இப்பெல்லாம் என்ன சார் அரசியல் நடக்கு? கக்கன்,காமராஜ் காலம் மாதிரியா இப்ப இருக்கு? அரசியல்னாலே துட்டு அடிக்கிறதுன்னு ஆகிப்போச்சு. நல்ல தமிழ் பேசி துட்டு அடிக்கப்போறியா இல்லாட்டி கான்வெண்ட் இங்கிலீக்ஷ் பேசித் துட்டு அடிக்கப்போறியாங்கிறது தான் கேள்வி. ஆனால் கக்கன்,காமராஜர் காலத்தில் என்ன பேச்சிருந்ததென்றால் “என்ன சொல்லுங்க வெள்ளக்காரனை மாதிரி நிர்வாகம் பண்ண முடியுமா?”

இன்னொரு பக்கம் லஞ்சம், ஊழல்கூடப் பரவாயில்லை அடிதடி, வெட்டுக்குத்து,சொந்தக் கட்சிக்காரனையே போட்டுத்தள்றது-இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. இதுகெல்லாம் மேலே தலைவர்கள், தலைவிகள் காலில் விழுந்து கும்பிடுகிற அசிங்கம். சேச்சே…மானம் ரோஷம் உள்ளவன் அரசியலுக்குப் போவானா?

ஆனால், இவையே முழு உண்மையும் இல்லை. இது மட்டுமே அரசியல் என்பதும் சரி இல்லை

ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசும் அரசியல் எவ்வளவு புனிதமானது என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல முடிவுகளை எடுப்பது அரசியல் அல்லவா? அதுபற்றி நாம் அக்கறையில்லாமல் இருப்பது எப்படி சரியாகும்?
மாணவர்களிடம் நீ கல்வி முடித்தவுடன் என்ன உத்தியோகம் பார்க்கப்போகிறாய், என்றால் பொறியாளர்,மருத்துவர்,மென்பொருள் நிபுணன் அல்லது பத்திரிக்கையாளன் ஆவேன் என்பார்கள் ஒருபோதும் அரசியல்வாதியாக ஆவேன் என்று சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு நம் சமூகம் அரசியல் என்பதை மக்களிடமிருந்து ஒதுக்கிவைத்துள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்த ஒரு மூலையிலும் வாழும் சகல மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல் தான். நாம் மீடியாக்களின் வாயிலாக சகல செய்திகளையும் அறிந்து கொள்கிறோம், மீடியாவில் வருபவை எல்லாமே நடு நிலையான செய்திகள் என்று கூறமுடியாது.

தினமும் மக்கள் பார்க்கும் செய்திகளில் அவர்கள் விவாதிக்கும் போது அரசியல் என்றாலே சாக்கடை தான், அது காசு பணம் சம்பாதிக்கின்ற தொழில் அல்லது தேர்தல் மட்டுமே அரசியல் என்று தான் பார்க்கிறோம். மேலும் அரசியல்வாதியை குறைசொல்லாத நபரே இல்லை, ஒவ்வொருவரும் எல்லாவற்றிற்கும் அரசியல்வாதியை குறைகூறுகிறோம்,ஆனால் நாம் தவறவிட்ட அதிகாரத்தை கேள்வி கேட்கும் தன்மை இங்கு இல்லை. எல்லா அரசியல் வாதியும் ஒண்ணு தான் என்ற ரீதியில் பேசுவோம். ஆனால் மக்களுக்காக அரசியல் நடத்தும் சில இயக்கங்களை காணத்தவருகிறோம். அரசியலில் தலைமையை நோக்கி கேள்வி கேட்கும் ஜனநாயகத் தன்மை இல்லை தான். தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் இந்த சமூகத்தை யாராவது வந்து மாற்றிவிடமாட்டார்களா என்று தான் உள்ளோமே தவிர நம்முடைய கடமை / பங்கு என்ன என்பதை நாம் செய்வதில்லை.

மனித சமுதாயத்தில் துன்ப, துயரங்களை பற்றி கவலை கொள்ளாதவர்களை மிருகங் கள் என்றார் மாமேதை மார்க்ஸ். அதையே புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொல்லும் பொழுது

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!
 

என்று சீறுகிறார்.

அரசியல் என்றால் என்ன? அதில் நம்முடைய பங்கு என்ன? 
அரசியல் என்பதன் அடிப்படையை -அரசு +இயல் என்பதை தெரிந்துகொண்டால்தான் ஏமாற்றங்களிலிருந்து விடுபடமுடியும். விரக்தியில்லாமல் நமக்கான அரசியலைப் புரிந்துகொள்ளமுடியும்.
எது உண்மையிலேயே நம்ம கட்சி என்று கண்டுபிடிக்கத்தெரியாமல் எல்லாக் கட்சியிலேயும் சேர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது ஒரு கட்சியும் வேண்டாம் எல்லாமே சாக்கடை என்று ஒதுங்கி நிற்கிறார்கள்..

அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு உண்டு .

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும்.
அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பலர் பல கோணங்களிலிருந்து பார்த்து வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். இவ் வரைவிலக்கணங்களுள் சில கீழே தரப்பட்டுள்ளன
 "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
குறிப்பாக, இது "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்"
"என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல்".

ஆனால் நாம் இன்று செய்துகொண்டிருப்பது என்ன என்பதை சற்று சிந்திப்போம், இன்றைய பல இந்திய இளைஞர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்னவென்றால் ஐம்பதாயிரம் சம்பளத்தில் ஒரு வேலை , ஒரு கார் , ஒரு பிளாட் , அழகான ஒரு மனைவி.இதையும் தாண்டி சிந்திப்பவர்கள் , கவிஞர்களாகவும் , எழுத்தாளர்களாகவும் ,  இயகுனர்களாகவும், வலைப்பூவிலும் , முகநூளிலும் ,தன் சிந்தனையை வெளிபடுத்துகிறனர்.புதிய சட்டம் போடணும் ,தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் திட்டணும் வாய்யளவில் பேசிக்கொண்டும் , மனதளவில் எண்ணிக்கொண்டும் இருந்தால் மட்டுமே போதாது , சட்டத்தையும் , திட்டத்தையும் நடைமுறை படுத்த நமக்குள்ளே ஒரு "தீ" வேண்டும் , நாம் தகுதியை வளர்த்துக்கொண்டு , தகுந்த சமூக பொறுப்பை (பதவி) அடையவேண்டும் .மேலும் உள்ளாட்சி பொறுப்பில் இருந்து படிபடியாக சென்றால்தான் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கமுடியும் .

படித்த பலர் மைக்ரோ சாப்டில் வேலை வேண்டும் , ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர பணி வேண்டும் என்றுதான் விரும்புகிறனர் , ஆளும் பொறுப்புக்கு வரவேண்டும் என்று விரும்புவோர் மிகவும் குறைவு , (எல்லோரும் கலக்டர் ஆனால் கம்போண்டர் ஆவது யார் என்று கேட்பது எனக்கு புரிகிறது)      

உண்மையை சொல்லப்போனால் சமூக அக்கறையும் , தொலைநோக்கு பார்வையும் உள்ள வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் சற்று களத்தில் இறங்க முற்படவேண்டும்.
 இன்று வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் எந்தனை பேர் எங்களை போல் கிராமத்தில் வசிக்கிறார்கள் என்று சொல்லுங்கள். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் கிராமத்திற்க்கு உருவாக்கப்படும் திட்டங்களையும் கிராமத்தையும் கிண்டலடிக்கும் மனோபாவம் இன்று நிலவுகிறது .
இதை வாசிக்கும் எத்தனை பேர் கிராமத்தில் வசிக்கின்றனர் என்று எண்ணி பாருங்கள் . இங்கு பின்னுட்டம் எழுதுவதும் , வலை பூ எழுதுவதும் ,ஒரு பெரிய காரியமல்ல , தற்பெருமைக்காக சொல்லவில்லை , நான் M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு எனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த போது அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக  சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டேண். இப்பொழுது சொல்லுங்கள்---( நீ பிழைக்க தெரியாதவள் என்று) ஏன் என்றால் பல படித்தவர்களும் பட்டினதாரும் என்னை பார்த்து சொல்லும் ஒரே வார்த்தை இதுதான் .நாம்  கிராமத்துக்குப்போய் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழிக்க வேண்டும் மூடநம்பிக்கையை அகற்றவேண்டும் ,  நீங்கள் இதை செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது.படிப்பதும் மட்டும் ஒரு மாணவரின் கடமையல்ல. வளமான பாரதத்தை வலுவான பாரதமாக மாற்றுவது, நமது இளைய பாரதங்களின் கையில் தான் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டியது அனைவரும் தான். ,

நமது தேசியத்துக்காக செல்ல வேண்டிய பாதையின் திறவு கோல் எமது போராட்டங்களின் தோல்விகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. ..மானத்தை உயர்வென்றெண்னி.! மரணத்தை துச்சமாக நினைப்பவன் எவனோ.! அவனே தமிழன் 



இன்றைய மக்களிடம் (சுயநலம்) , ஒவ்வொருவரும் தமது நலங்களுக்கே முக்கியதுவம் கொடுத்து செயற்படுவதே  மேலோங்கி இருப்பதால் ஒரு திட்டத்தை நிறைவேற்ற உண்மையான மக்கள் சேவகர்கள் படும் பாடு ....... அய் அய் அய் அய் யோ ...............என்னை பொறுத்த வரை நான் எந்த வேலை செய்தாலும் எனக்கு பிடித்தால் மட்டுமே செய்வேன் அல்லது மற்றவர்களது நன்மைக்காகவும் , மகிழ்ச்சிக்காகவும் செய்வேனே தவிர . கோடி கொடுத்தாலும் காசுக்காக கஷ்டப்பட்டு எதையும் செய்யமாட்டேன், கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்வதை விட  இஷ்டப்பட்டு செய்வதுதான் எனக்கு திருப்தியை தரும் , எனக்கு போராட்டம் மிகவும் பிடிக்கும். காரணம் நாம் பூமியில் வாழுவதற்கு கொடுக்கும் வாடகைதான் நமது சேவை .

என்னை சுற்றி உள்ள அனைவரும் நல்லவர்கள் , நான் செய்கின்ற பணி சிறந்தது என்று வாழ்வதால்தான் என்னால் குடும்பதினருடனும் , கிராம மக்களுடனும் ,மாணவர்களுடனும்,முகநூல் வலைப்பூ நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் தன் கருத்துகளை பரிமாறி என் பனிகளை சிறப்பாக  மேற்கொள்ள முடிகிறது.


பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010,23:27 IST
அவிநாசி :அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவிக்கு, "இளம் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவியாக சாந்தி உள்ளார். திருச்செங்கோட்டில் நடந்த ஜேசீஸ் மண் டல மாநாட்டில், இவருக்கு 2010ம் ஆண்டின் "இளம் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது; ஜேசீஸ் முன் னாள் தேசிய தலைவர் வல்லபதாஸ் வழங்கினார்.ஒன்றிய தலைவி சாந்தி கூறுகையில்,""உலக அளவில் இளைஞர் விழிப்புணர்வு, தனிமனித மேம்பாடு உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிக்கும் ஒரே சங்கம் ஜேசீஸ் மட்டுமே. இன்றைய இளைஞர் கள் அரசியலை பார்த்து பயப்படக்கூடாது; சமூகப் பணியாற்ற கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்,'' என்றார்


                       

சமூக விழிப்புனர்வுக்காக மட்டுமே இப் பதிவு , பெருமைக்காகவோ அல்லது , யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்திலோ அல்ல ,
தவறாக இருந்தால் தயவுகூர்ந்து மனிக்கவும்,

உங்கள் அன்பு சகோதரி :-சாந்திபாபு