Tuesday, March 20, 2018

ரத யாத்திரையா ? ரத்த யாத்திரையா ?

ஆண்டாளை இழுத்து ரோட்டில் விட்டு அவமானப்பட்டும், பெரியார் சிலையில் மோதி மண்டையை உடைத்துக் கொண்டும் வெட்கப்படாத கூட்டம் இப்போது ராமனின் ரதத்தில் ஏறி வந்து ரத்தம் குடிக்கப் பார்க்கிறது.

விசுவ இந்து பரிசத் "ராம ரத யாத்திரை"யை தமிழகத்தில் நடத்தி, இந்து உணர்வை தூண்டலாம் என பார்க்கிறது.

இந்த ரத யாத்திரைக்கு ஓர் வரலாறு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எப்போதும் நீண்ட காலத் திட்டத்தோடு தான் ஒர் காரியத்தில் இறங்கும். அப்படி தான் இந்தியாவை கைபற்றும் திட்டத்தில் அயோத்தியை கையிலெடுத்தது.

அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதியானது, அங்கு ஏற்கனவே இருந்த ராமர் கோவிலை இடித்து கட்டப்பட்டது என அறிவித்தனர். 1980 வாக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான விசுவ இந்து பரிசத் களத்தில் குதித்தது.

பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவோம் என்று அறிவித்தது. இதற்கு துணையாக சங் பரிவார் போர் அறிவித்தது.

இந்த காலக்கட்டத்தில் தான் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது.

யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், காங்கிரஸிற்கு எதிராக வி.பி.சிங் தலைமையில் ஜனதாதள் ஆட்சி அமைக்க  கம்யூனிஸ்ட்களும், பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவளித்தன.

காங்கிரஸ் கட்சியில் உத்தரபிரதேச முதல்வராக, மத்திய நிதியமைச்சராக பணியாற்றிய போதே  நேர்மையான, துணிச்சலான, அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் வி.பி.சிங்.

மத்திய அரசில் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைந்திருந்த, மண்டல் கமிஷன் அறிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது.  இயற்கையாக சமூகநீதியில்  அக்கறை கொண்டவர் வி.பி.சிங். கூட்டணித் தலைவரான கலைஞரின் உத்வேகத்தால், மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக அறிவித்தார் வி.பி.சிங்.

பதறிப் போனது பா.ஜ.கட்சி. வட மாநிலங்களில் ஆதிக்க சாதிகளின் துணையால் அரசியல் அதிகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக கைப்பற்றிக் கொண்டிருந்தது பா.ஜ.க. ஆதிக்க சாதியினர் கோபம் கொழுந்து  விட்டது மண்டல் அறிக்கைக்கு எதிராக. டெல்லியில் ஓர் மாணவர் தீக்குளித்து எதிர்ப்பை தெரிவித்தார்.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தும் வி.பி.சிங் அரசிற்கு ஆதரவளித்தால், தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் நிலை பா.ஜ.கவிற்கு. அதே சமயம் மண்டல் கமிஷனை நேரிடையாக எதிர்த்தால், பிற்பட்ட வகுப்பினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் நிலை.

இந்த இக்கட்டான நிலையில் தான், அதில் இருந்து தப்பிக்க,  விசுவ இந்து பரிசத்தின் "ராமர் கோவில்" பிரச்சினையை கையில் எடுத்து, திசைதிருப்பி ஆட்சியை கவிழ்க்க முடிவெடுத்தனர் பா.ஜ.கவினர்.

அதற்கான வழி முறையாகத் தான், அத்வானியின் ரத யாத்திரை திட்டம் தீட்டப்பட்டது.

1990 செப்டம்பர் 25 அன்று சோம்நாத் நகரில் ரத யாத்திரை புறப்பட்டது. அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியில் ராத்திரையை முடிப்பதாகத் திட்டம். குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்கள் வழியாக உத்தரபிரதேச அயோத்தியை அடைவது பாதை திட்டம். அயோத்தியை அடைந்து, பாபர் மசூதியை இடிக்க திட்டம்.

இதற்குள் ஒரு நாளைக்குள் பயணிக்கும் 300 கிலோமீட்டர் தூரத்தில் ஆறு இடங்களில் உரையாற்றி எழுச்சி ஏற்படுத்துவது எனத் திட்டம். திட்டமிட்டபடி பயணம் துவங்கியது, திட்டமிட்டபடி கலவரம் வெடித்தது, யாத்திரை கடந்த பின்.

யாத்திரை பீகாரில் நுழைய இருந்தது. பீகாரில் ஜனதாதள் கட்சியின் முதல்வராக இருந்தார் லல்லுபிரசாத் யாதவ். கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் வி.பி.சிங் உத்தரவிட்டார்.

பீகார் மாநிலத்தில் நுழைந்த அத்வானியை கைது செய்தார் லல்லுபிரசாத். அதற்கு பிறகும் உத்தரபிரதேசத்தில் அயோத்தியை நோக்கி பா.ஜ.கவினர் பயணித்தனர். ஒன்றரை லட்சம் பேரை கைது செய்து, பாபர் மசூதியை தாக்காமல் காத்திட்டார் உத்தரப்பிரதேசத்தின் அன்றைய முதல்வர் முலாயம்சிங்.

பிறகு நரசிம்மராவ் பிரதமராக இருந்த நேரத்தில், 1992 டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவை என்ற பெயரில், பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர் பா.ஜ.க சங் பரிவார் கூட்டத்தினர். இதனை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள் விசுவ இந்து பரிசத் அமைப்பினர்.

அடுத்து, பாபர் மசூதியை கட்டும் இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று மார் தட்டினர் பா.ஜ.க மற்றும்  வி.எச்.பியினர்.

1996 மே 16 ஆம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்தது. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். அந்த ஆட்சி 1996 ஜூன் 1 வரை தான் நீடித்தது. அப்போது ராமர் கோவிலை விசுவ இந்து பரிசத்தால் கட்ட முடியவில்லை.

பிறகு மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. இந்த முறை 1998 மார்ச் 19 முதல், 2004 மே 22 வரை முழு அய்ந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தியது பா.ஜ.க. இந்த முறையும் விசுவ இந்து பரிசத்தால் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை.

பிறகு பா.ஜ.க தனிப்பெரும் மெஜாரிட்டியோடு  ஆட்சியை பிடித்தது. 2014 மே 26 அன்று வாராது வந்த மாமணியாய் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். நான்காண்டுகள் ஆட்சி முடியப் போகிறது இப்போது.

அந்தோ பரிதாபம், இப்போதும் விசுவ இந்து பரிசத் கட்சியினரால் ராமர்  கட்ட முடியவில்லை.

ராமர் கோவில் காட்டுவது அவர்கள் நோக்கமல்ல.  ராமர் பெயரால் நாட்டை பதற்றத்தில் வைத்திருப்பதும், இந்து - முஸ்லீம் பிரச்சினையை உண்டாக்குவதும், அதன் பேரால் இந்து வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் நோக்கம்.

அதனால் ராமர் கோவிலை கட்ட, பொதுமக்கள் ஆதரவை கேட்டு என்ற பெயரில், மீண்டும் ராம ரத யாத்திரையை துவங்கி விட்டது விசுவ இந்து பரிசத்.

இந்த ராமர் ரத யாத்திரையை தான் தமிழகத்தில் நுழைய திட்டமிட்டுள்ளனர் விசுவ இந்து பரிசத்தினர்.

ஆனால் இப்போது அத்வானி ரதயாத்திரையை வழி நடத்தவில்லை. பாவம் அத்வானி, ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கி நிற்கிறார். ஆர்.எஸ்.எஸ் அத்வானிக்கு மாற்றாக ஆள் தயார் செய்யும்.

# நாடகம் தொடர்கிறது, நடிகர்களே மாறியுள்ளனர், கலவரமே நோக்கம் !

:-எஸ்.எஸ்.சிவசங்கர்.

Sunday, March 11, 2018

தமிழ்தேசிய கட்சிகளுக்கும் திமுக எதிரியா ?

தமிழ்தேசிய கட்சிகளுக்கும் திமுகவை எதிர்க்கும் மூன்றாவது அணியினருக்கும்:

,காவிகளின் தமிழக ஊடுருவல் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் லேடியா மோடியா பிரச்னைக்கு பின் ஜெ.யையும் வீழ்த்திய பின் முதலில் தீபா வை புரோமோட் செய்தனர் தோல்விக்குப் பின் மைத்ரேயனையும் பாண்டியராஜனையும் வைத்து ஓபிஎஸ் மூலம் அதிமுகவை வளைக்கப்பார்த்தனர் தோல்வி.பின்னர் பயமுறுத்தி ஈபீஎஸ்ஸை தினகரனிடமிருந்து பிரித்து ஓபிஎஸ்ஐயும் சேர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்தும் எதிர்ப்பு பலமாகவே இடைதேர்தலிலும் நோட்டாவிடமே தோல்வி அடைந்த அவமானத்தில் தற்போது நடிகர்களை சாமர்த்தியமாக அரசியலில் நுழைக்கும் புராஜக்கெட் A B C தமிழ்நாடு திட்டம் போட்டுள்ளனர்.
புராஜக்ட் A திட்டமான நடிகர்கள் நுழைவும் அதற்கு எதிர்ப்பலை பலமாக உருவாகி விட்டதால் புராஜக்ட் B திட்டமான திராவிடத்திற்கெதிரான தமிழ் தேசியவாதிகளை ஊக்கப்படுத்தி திராவிட அரசியலை வீழ்த்த எத்தனிக்கின்றனர்.அதற்கு ஆதாரமாக சமீபத்தில் பலருடைய கடும் கண்டனாத்திற்காளான மூக்குடைப்பட்ட ஒரு நரி திராவிடத்தால் தமிழ்தேசியம் பாதிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்போது நான் சொல்ல விழைந்தது என்ன வெனில் உங்களுடைய ஆதங்கத்தில் உண்மை இருந்தாலும் திராவிட ஆட்சியில்தான் உங்களது தமிழ்தேசிய குரலே ஒலிக்கிறது ஒலிக்க ஆம்பித்ததும் நடவடிக்கைகள் எடுத்ததும் நடந்துள்ளது.அப்படி இல்லாது போனால் நீங்கள் எல்லாம் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு நசுக்கப்படுவீர்கள் இந்த காவிகளின் ஆட்சியில்.
திராவிட. ஆட்சிகளில் நிறையஅளவிற்கு தமிழ் தமிழர் பெருமை சமூக நீதி இத்யாதி எல்லாம் முன்னேற்றம் அடைந்ததையே பிடிக்காத காவிகள் அதை முறியடிக்க எப்படி எப்படி எத்தனித்தனர் என்பதை வரலாறு சொல்லும்.திராவிட ஆட்ச கட்சிகளை பிளவு படுத்தி தனக்கு சாதகமாக செயல்படும் போலி திராவிட ஆட்சிகளை நிறுவி அந்த ஆட்சிகளின் மூலமாக உங்கள் ஜனநாயக குரலையும் நசிக்கி வைத்ததை எல்லாம் எண்ணிப்பார்க்கனும் உண்மையான தமிழ்தேசியவாதிகளாக இருந்தால். ?
உங்கள் குரல்களில் நியாயம் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடையும் நிலையில் உங்கள் அரசியல் கட்சி கட்டமைப்பு இல்லை.வாக்கு பிரிவுதான் நடக்கும்.அந்த  கட்டமைப்பு வர நீண்ட காலமாகும்.
ஆக திராவிட ஆட்சி அமைந்தால்தான் அதற்கு எதிர்கட்சியாக ஜனநாயக முறையில் வளரமுடியும்.
இதை ஆழ்ந்து சிந்திக்காமல் திராவிட ஆட்சியின் சில பல தவறுகளுக்கு விமர்சித்தால் அது வாக்கு சிதறலுக்கும் இன்ன பிற காவிகளின் சூழ்ச்சி அரசியலுக்கு பலியாகும் அவல நிலைக்கும் தள்ளப்படுவீர்கள்.
உதாரணமும் தமிழ்நாட்டரசியலிலேயே உண்டு.
நன்கு வளர்ந்து வந்த விஜயகாந்த் பாரியாளின் மைத்துனரின் பேச்சை கேட்டு 2014 ல் காவிகளிடம் கூட்டு வைத்ததால் இன்று தேய்ந்துக் கொண்டே போகும் நிலையில் உள்ளது.அதே போல மேலும் பல கட்சிகளும் உண்டு.
அதனால் காவிகளின் B டீம் என்ற அவப்பெயரை அடையாதீர்கள்.

நன்றி :- முகமது