Monday, April 30, 2012

மதம், வேதம், கடவுள் கபோதி


இந்த பதிவு, இன்றும் நமக்கு உகந்ததாகவே இருக்கிறது ... காரணம் நம் போராட்டம் இன்னும் தொடர்கிறது... ஆனால் இது சுமார் 85 வருடங்களுக்கு முன்னால் தந்தை பெரியாரின் 30-01-1927லில் வந்த"குடிஅரசு"- தலையங்க செய்தி


பொறுமையாக வாசித்துப் பொறுங்கள் நண்பர்களே .....

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கென்று வெகுகாலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோட்சம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்களையும் ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர்களாயிருந்து கொண்டு நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல், அரசியல், சுயராஜ்யம், தேசியம், தேசியப்பத்திரிகை, தேச சேவை என்கிற பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிக்கைகளையும் உண்டாக்கிக் கொண்டு அதன் மூலமும் நாங்களே தேச பக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசியப் பத்திரிக்கைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப்படுத்திக் கொண்டு,

நம்மைத் தாழ்த்தி மிதித்து மேலேறிப் பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக் கொண்டு விட்டார்கள்.
இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக் கொண்டிருக்கிறது.

பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தங்களைப் போதிய அறிவுள்ள மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் அப்பத்திரிக்கைகளின் மூலம் ஏமாறுவதும் அப்பத்திரிகைகளின் மூலம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாவதும் வளர்ந்து கொண்டே வருகிறது. தமிழ் நாட்டு மக்கள் இப்பார்ப்பனக் கொடுமை முற்றுகையிலிருந்தும், அன்னிய ஆட்சிக் கொடுமை முறைகளிலிருந்தும் தப்ப வேண்டுமானால் இப் பார்ப்பனப் பத்திரிக்கைகளைப் பார்த்து ஏமாறுவதையும் அவைகளுக்கு அடிமைகளாவதையும் ஒழித்தாலல்லது கண்டிப்பாய் முடியவே முடியாத நிலைமையில் இருக்கிறோம்.

அவைகள் செய்யும் அக்கிரமங்களை நினைக்கும் போது நமது மக்கள் மனிதர்கள் தானா? மனிதப்பிறவிதானா? இப்பிறப்புக்கு மானம் வெட்கம் என்கிற தன்மைகள் இருக்கின்றனவா என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது. நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப் பத்திரிக்கைகள் நடந்து வருவதையும், பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரமே அதன் கொள்கைகளாக இருப்பதையும் நாம் சந்தேகமற -மனப்பூரணமாய்த் தெரிந்திருந்தும், இப்பிரச்சாரங்களுக்குப் பணம் கொடுத்து நாம் நாசமாய்ப்போவதற்காக அப்பத்திரிகைகளையே வாங்கிப் படிப்பதென்றால், யாராவது நம்மை அறிவு புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லக் கூடுமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

பிறரைக் குற்றம் சொல்லும்போதுமாத்திரம், கள்ளு சாராயம் குடிப்பது கெடுதி என்று தெரிந்திருந்தும் மறுபடியும் அதைக் குடிக்கிறார்களே என்ன புத்தி கெட்ட ஜனங்கள், மானங்கெட்ட ஜனங்கள் என்கிறோம், ஆனால் அந்தப்புத்தியும் மானமும் நமக்கு இருக்கிறதா என்பதைப் பார்ப்பவர்கள் நம்மில் 1,000க்கு ஒருவரைக் கூடக்காணோம். பார்ப்பனப்பத்திரிக்கைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு மாத்திரமில்லாமல். நம்முடைய இழிவுக்கும் தாழ்மைக்கும் அழிவுக்கும் நடத்தப்படுகிறது என்பதை அறிந்திருந்தும், அதைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களுக்குப் புத்தியும் மானமும் இருக்கிறதா என்பதைக் கவனிப்பதில்லை. உதாரணத்திற்காக ஒரு பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்.

சாதாரணமாக சுதேசமித்திரன் என்னும் பத்திரிகை பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாருடைய பணத்தையே மூலதனமாகக் கொண்டது. அதன் பத்திராதிபர்கள், உப பத்திராதிபர்கள் மானேஜர்கள் முதலியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அவர்கள் சம்பளமோ மாதம் 1500, 1000, 800, 600 இப்படி அனுபவிக்கிறார்கள். இப்பத்திராதிபர் பார்ப்பனரல்லாதாரை ஒழித்துப் பார்ப்பன ஆதிக்கம் தேடுகிற பிரச்சாரம் தவிர, வேறு வேலை ஏதாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?

நம்மை நாமே கெடுத்துக்கொள்ள நமது பணமே உதவவேண்டுமா? அதற்கு விளம்பரம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே! அதை வாங்கிப் படித்துக் கெடுகிறவர்கள் பார்ப்பனரல்லாதார்களே! இதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா அல்லது இப்பார்ப்பனர்கள் எதையாவது இரகசியமாய்ச் செய்கிறார்களா? நேருக்கு நேராக நம்மைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள், உங்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை புத்தி அறிவு இவைகள் கிடையாது.

ஆதலால் நாங்கள் உங்களை ஏமாற்றுகிறோம். உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களில் யாரோ சிலர் கத்தினால் கத்தட்டும் எங்களுக்குக் கவலை இல்லை. இதற்காக நாங்கள் கொஞ்சமும் பயப்பட்டு எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. உங்களிலேயே சில அயோக்கியர்களையும் முட்டாள்களையும் நாங்கள் சுவாதீனம் செய்து கொண்டு உங்கள் கத்தல்களை ஒழிக்க எங்களுக்குத் தெரியும் ஒரு கை பார்க்கலாம் வாருங்கள் என்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். இதற்கொன்றும் மார்க்கமில்லையாவென்றுதான் கேட்கிறோம்.

குடிஅரசு தோன்றிய பிறகு, மித்திரன் சுமார் 2000 சந்தாதாரர்களுக்கு மேலாகவே இழக்க நேரிட்டும் இன்னமும் பார்ப்பனரல்லாதாரிலேயே பல பங்குக்காரர்களை இரகசியமாகச் சேர்த்து பணம் சம்பாதிக்கப்பட்டு வருகிறது.
நம்மவர்கள் முன்னேற்றத்திற்கென்றே நடத்தப்பட்டு வருகிற பத்திரிகைகளைக் கையில் தொடுவதற்கும் நமது மக்கள் அஞ்சுகிறார்கள் என்றால், நமது யோக்கியதையை என்னவென்று சொல்லுவது? சாதாரணமாக திராவிடன் பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணருகிறார்களா?

அது யாருடைய நன்மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா? யாரையாவது போய் ஐயா, திராவிடன் பத்திரிகை தங்களுக்கு வருகிறதா? இல்லையானால் ஒன்று வரவழையுங்கள் அதைப் படித்துப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அதனால் நம்மவர்களுக்கு ஏற்படும் கஷ்டத்தையும் உணர்ந்து அதிலிருந்து தப்புவதற்கு வேண்டியது செய்யுங்கள் என்றால், திராவிடனா? அதிலென்ன இருக்கிறது? அதைப் பார்த்தாலே என்னமோ போல இருக்கிறதே?அந்தப் பெயரே நமக்குப் பிடிக்கவில்லையே என்று சொல்லிவிடுகிறார்கள். இதை தங்களுக்குத் தோன்றுகிறபடி. வாஸ்தவமாகத் தானே சொல்லுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். கட்டின பெண்ஜாதியை விட தாசி வீட்டுக்குப்போய் சொத்தைப் பாழாக்கி வியாதி கொள்ளுகிறவர்களைப் பார்த்து, என்னப்பா கட்டின பெண்ஜாதியை வீட்டில் வைத்து விட்டுத் தாசி வீட்டிற்குப்போய் சொத்தையும் பாழாக்கி வியாதியும் கொள்ளுகிறாய் என்றால், மேல் கண்ட மாதிரி பதில் சொல்லுகிறான். அதாவது வீட்டில் என்ன இருக்கிறது?

அவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை அவள் நடந்துகொள்ளுகிற மாதிரியே மனதிற்கு அசிங்கமாகப் படுகிறது. ஒரு கட்டிலுண்டா? மெத்தையுண்டா? வாசனையுண்டா? அடிப்பதுண்டா, கிள்ளுவதுண்டா, சட்டி பானை கழுவுகிறவள் தானே என்று ஆரம் பித்து விடுகிறானேயல்லாமல், இதெல்லாம் எதற்காகச் செய்யப்படுகிறது பின்னால் நம்முடைய கதி என்னாகும் என்கிற கவலையே இல்லாமல் அறிவீனமாய் நடந்து கொள்ளுகிறான். அப்படிப்போல் நம்மை மயக்கி ஏய்த்து, நம்மைப் பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும்.

ஒருநாள் முழுவதும் படிப்பதற்கும் விஷயமிருக்கலாம் ஆனால் அது பெரும்பாலும் என்ன விஷயம். நம்மைக் கழுத்தறுக்கும் விஷயமும், பொழுது போக்கு விஷயமுமாகத்தானே இருக்கும். ஆதலால் மானமுள்ள மக்கள் தமது சொந்தப் பெண்டை அன்னியன் குற்றம் சொல்லும்படியாகவும், கஞ்சிக்குத் திண்டாடும் படியாகவும் விடாமல், காப்பதை எப்படி தமது கடமையாய் நினைப்பார்களோ அதுபோல் திராவிடன் பத்திரிகையை ஆதரிப்பதோடு, கட்டின பெண்டைத் தெருவில் அலையவிட்டுத் தாசி வீடு காத்துத் திரிவதுபோல் திராவிடனை விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்யவேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகிறோம். இந்த மார்க்கம்தான் பாமர மக்களைக் காப்பாற்றவும், நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படவும் சரியான மார்க்கமாகும்.

-------------

தந்தை பெரியார் -"குடிஅரசு" தலையங்கம் - 30-01-1927

ஜாதி ,சாமி , சம்பிரதாயம் , மூட பழக்கங்கள் , வேண்டுதல் , பரிகாரம் , செய்வினை , ராசி , வாஸ்து , ஜாதகம் என்று பார்ப்பதை விட்டுவிட்டு , அறிவியல் , ஆராய்ச்சி , மனிதநேயம் , பகுத்தறிவு , சமுக அக்கறை என நாம் பயணித்தால் இவ்வுலகம் மகிழ்ச்சியுடன் பயணிக்கும் ......

Friday, April 27, 2012

ஈழத்தை இழந்த பின்னணி , கலைஞரா அதில் முன்னணி ? ...

ஒற்றுமை என்ன விலை :- தமிழன் 

ஒண்ணா சேர்ந்து போராடுவோம் :-திராவிடன் 

என்ன இதுன்னு நினைக்காதிங்க .....
தயவு செய்து கட்டுரையை முழுவதுமாக படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் தோழர்களே .......

1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி ‘டெசோ’ கூட்டத்தில் கலைஞர் பேசியது...


“நான் உறுதியாகச் சொல்கிறேன். அரசியல் லாபத்திற்காகத் தான் இலங்கைப் பிரச்சினையை எடுக்கிறோம் என்று யாராவது சொன்னால், நாங்கள் நடந்து முடிந்த பொது தேர்தலிலேயே இலங்கைப் பிரச்சினையை முன் வைத்திருப்போம்.

நாங்கள் இலங்கைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக வலியுறுத்த விரும்பவில்லை. இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலிலே ஓடுகின்ற இரத்தம், தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கின்ற துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ்!! தமிழ்! என்று துடிப்பது உண்மையானால் அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்ற வேண்டுமா? வேண்டாமா? அவனுடைய உரிமைக் குரலுக்கு ஆதரவு தர வேண்டுமா வேண்டாமா என்பதை! பழங்கதை பேசிப் பயனில்லை; வீரம் பேசிப் பயனில்லை. கனக விஜயர் தலையில் கல்லேற்றிக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாகக் கொண்டு வந்தான் கரிகாலன்; ராஜேந்திர சோழன் கடாரம் சென்றான்; வென்றான்! இது சரித்திரம்!

ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். என்ன செயலில்? எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இப்போது வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.

இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம்.
ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காததைப் போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை.

எனவேதான் சொல்லுகிறேன், இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக - அதற்குத் தயாராகிவிட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித் தமிழ் ஈழ நாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழ நாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்.

தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளுமே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஓரணியில் நிற்க வேண்டும்.

பிரதமர் ராஜீவின் பொல்லாத பேச்சு

பத்திரிகைச் செய்தியின் குறிப்புப்படி அக்டோபர் முதல் நாள் பயங்கரமான எரிகுண்டுகள் தமிழர்கள் பெரும்பாலும் வாழுகின்ற திரிகோணமலைப் பகுதியிலே வீசி எறியப்பட்டு, பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.

250 பேர் தப்பித்துப் பிழைத்து அகதிகளாக வந்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இரண்டு விடுதலைப் போராளிகள் முகமெல்லாம் கருகிப் போய் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இப்படி நடைபெறுகின்ற அக்கிரமங்களை நாம் கண்டிக்கத்தான் இந்த பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துகிறோம்.

இந்த அக்கிரமத்தை கேட்க வேறு ஆளே இல்லையா? நாம் கேட்க வேண்டிய முறைப்படியெல்லாம் கேட்டாகி விட்டது - 1983 ஆம் ஆண்டில் இந்த அநியாய இனப் படுகொலை இலங்கையில் தொடங்கியவுடன் தமிழகம் கொந்தளித்தது - கிளர்ச்சி வடிவெடுத்தது.

ஜனநாயக ரீதியில் அணுகிப் பார்த்தோம். போராட்ட ரீதியில் அணுகிப் பார்த்தோம். பல முறையீடுகளை எடுத்துச் சென்று அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களை சந்தித்துப் பார்த்தோம். எதுவும் நடைபெறவில்லை. இப்போது நடைபெறுகின்ற அக்கிரமங்களை மாநிலங்களவையில் வை.கோபால்சாமி, எல். கணேசன் போன்றவர்கள் எடுத்துச் சொன்ன போதும், நாடாளுமன்றத்திலே என்.வி.என். சோமுவும், கலாநிதியும் எடுத்துச் சொன்ன போதும் கிடைத்த பதிலென்ன?

வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு விமானத்தில் சிங்களவர் ஆயுதங்களை ஏற்றி வந்தார்கள். அப்படி ஆயுதங்களை ஏற்றி வந்த அந்த விமானம் எண்ணெய் இல்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலே இறங்கியது. அந்த விமானத்தில் ஆயுதங்கள் இருக்கின்றன. அதை இலங்கைக்கு அனுப்புவீர்களேயானால், அது இலங்கைத் தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும். எனவே அங்கே அனுப்பாதீர்கள் என்று தமிழ்நாடு ஒருமித்த குரல் கொடுத்து கேட்டுக் கொண்டது. அப்படியிருந்தும் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழர்களைக் கொல்லுகின்ற ஆயுதங்களைத் தாங்கியிருந்த அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பியது நியாயம் தானா? என்று கோபால்சாமி கேட்டபோது பிரதமர் எழுந்து, “அந்த ஆயுதங்களில் - ‘இது தமிழர்களைக் கொல்ல’ என்று எழுதப்படவில்லை” என்று சொன்னார்.

உலகத்தில் எந்த யுத்தத்திலாவது - எந்த துப்பாக்கிக் குண்டிலாவது - அல்லது எந்த துப்பாக்கியிலாவது இது இன்னின்னாரைக் கொல்ல என்று எழுதப்பட்டிருக்குமா? நான் வேதனையோடு ராஜீவ்காந்தி அவர்களைpப் பார்த்து கேட்கிறேன். அன்னை இந்திராகாந்தியின் உடலைப் பல குண்டுகள் துளைத்தனவே - அதிலே எந்தக் ‘குண்டிலாவது இது இந்திரா காந்தியைக் கொல்ல’ என்று எழுதப்பட்டிருந்ததா? ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல், உணர்வு இல்லாமல், விமானத்தை அனுப்பி - அதிலே வந்த ஆயுதங்கள் தமிழர்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. இது நியாயம்தானா என்று கேட்டோம்.

இப்படிக் கேட்ட கோபால்சாமிக்கு கிடைத்த பதில் அந்த ஆயுதத்தில் தமிழர்களைக் கொல்ல என்று எழுதப்படவில்லை என்கின்ற ஆசிகமான - நகைச்சுவை வாய்ந்த ஒரு பதிலைத்தான் பிரதமர் ராஜீவ்காந்தி தருகிறார். எனவேதான் இலங்கையில் இருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற நாம்தான் முன்வரவேண்டும். நாம் தான் குரலெழுப்ப வேண்டும் என்கின்ற இறுதி முடிவுக்கு இன்றைக்கு நாம் வந்திருக்கின்றோம்.



இப்படி பேசியவர் 2009 இறுதிக்கட்ட போரின் போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் ஏன் போர்நிறுத்த பெரிய முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் பலருடைய கேள்வி ?

இதோ விடைகள்

இப்படியாக பல சம்பவங்கள் போராட்டங்கள் , மறியல் , கைது , என்று செய்த திமுக மக்கள் ஆதரவுடன் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்தது ...

தேர்தலில் தோற்றவுடன் ஜானகி அரசியலில் இருந்து விலகிவிட்டார். ஜெயலலிதா தலைமையில் இருப்பதே அசல் அ.தி.மு.க. என்று இரண்டு அணிகளும் இணைந்தன. ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! 

அ.தி.மு.க. ஒன்றுபட்டவுடன், இரட்டை இலை சின்னமும் கிடைத்தது! மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றது. கலைஞருக்கு இது அதிர்ச்சியாகப் போய்விட்டது! அதோடு அடுத்துவந்த பார்லிமெண்ட் தேர்தலில் அ.தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களுக்கு 38 வெற்றி! 

பிறகு ஜெ அவர் மேல் வைக்கும் குற்றச்சாட்டு அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது. இதை வைத்து திமுக ஆட்சியை ராஜீவ் காந்தி ஆதரவுடன் மத்தியில் அப்போதைய சந்திரசேகர் அரசாங்கம் கலைக்கிறது. 

கலைஞரை தமிழகத்தின் ஒரு அடையாளமாகவே ஈழத்தமிழர்கள்
பார்க்கின்றார்கள். கலைஞரின் பேச்சும் எழுத்தும் ஈழ மக்களை கடல் கடந்து கவர்ந்தது.
கருணாநிதி என்ற பெயர் எனது நண்பருக்கு இருந்ததால் அவனை இலங்கை இராணுவம்
சுட்டெரித்தது. அவனுடைய தந்தை கலைஞரின் ஆதரவாளர். இப்படி எத்த்னையோ இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கலைஞருக்கு ஈழத்தில் உண்டு. கலைஞர் ஈழத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு 1960களின் ஆரம்பத்திலேயே நிரந்தரத் தடைபோட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் புலிகள் உருவாகவே இல்லை.

க‌லைஞ‌ர் மீது ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் பெரு ம‌திப்பு வைத்திருக்கின்றார்க‌ள்.
க‌லைஞ‌ர் மீது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ந‌ம்பிக்கை வைத்திருக்கின்றார்க‌ள;
இப்படி 
கலைஞர், ஈழத்தமிழர்களை உணர்வால் ஆதரிக்ககூடியவர் என்றாலும் அவரின் நிலைப்பாடு ஒரளவிற்கு பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதாக தான் இருக்கும் . அது விடுதலைப் புலிகளை ஆதரித்தால் எழும் "ராஜீவ் படுகொலை பூதம்", இந்திய தேசியத்திற்கு எதிரான பிரிவினைவாதிகள் என்ற குற்றச்சாட்டு போன்றவையே ஈழத்தின் விடயத்தில் சற்று திமுகவை ஒதுங்கி நிற்க செய்தது ..

தற்போது கலைஞர் மீதான ஈழத்தமிழர்களின் வருத்தம் என்பது அவர் வெளிப்படையாக ஈழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரிப்பதில்லை என்பதாக உள்ளது. ஆனால் வைகோ இதனை "ஓங்கி" ஒலிப்பதால் ஈழத்தமிழர்கள் வைகோவை கலைஞரை விட நேசமாக பார்க்கிறார்கள். ஈழத்தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் "தமிழ்" உணர்வுகள் என்பவை வேறானது. அரசியல் என்பது வேறானது. கலைஞரின் தமிழ் உணர்வுகளை யாரும் சந்தேகிக்க முடியாது.

சிலர் கலைஞர் மாறிவிட்டார் என்கிறார்கள் , சிலர் ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள் ...

ஒன்று மட்டும் உண்மை, அப்போதும் தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி மரணம்தான் மிகப்பெரிய விஷயமாக பட்டது . அவரால் இலங்கைக்கு அனுப்பட்ட இந்திய அமைதிபடையின் தமிழர்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் பெரிதாக தெரியவில்லை. அத்துடன் தமிழக வாக்காளர்கள், விடுதலைபுலிகளும் தமிழர்கள் தானே அவர்களுக்கு தானே கலைஞர் உதவினார் அதில் என்ன தவறு என்று அவரை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்தவில்லை. பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் மரணத்தை விட தமிழகத்திலுள்ள தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தியின் மரணம்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் அதன் பின் நடந்த தேர்தலில் அண்ணாதிமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாறு காணாத அளவுக்கு ஆதரவளித்தார்கள். தனது செயல் ஒரு தேச நலனுக்கு எதிரான ஒரு செயல் என்று தெரிந்தும் இலங்கை அரசால் அவமானப்பட்டு திருப்பியனுப்பட்ட இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து சென்னை துறைமுகம் வந்ததும் அதை வரவேற்க செல்லமாட்டேன் என்று துணிவோடு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கூறினார். இதற்கெல்லாம் தமிழக மக்கள் செய்த கைம்மாறு அவருடைய கட்சியை அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைய செய்ததுதான். 

இப்பொழுது சொல்லுங்கள் கலைஞர் மாறிவிட்டாரா இல்லை நாம் மாற்றிவிட்டோம்மா என்று ?


மக்களாகிய நாம் ஏன் ,எங்கு , எதற்கு, எப்போது , யாருக்காக , அனுதாபப்படுவோம் யார் மீது கோவப்படுவோம் என்று தெரியாமல் அவரை குழப்பிவிட்டு விட்டு ....

முள்ளின் மீது கால் வைத்துவிட்டு 
முள்ளு குதிரிச்சு என்று சொல்லிகொண்டிருகிறோம் ....

இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அபிஅப்பா சொல்கிறார் ............

நன்றி :- திரு . சசி , வைரமுத்து , மகாதேவன் , ஜான் , நாகா

Tuesday, April 24, 2012

வெளியே சொன்னா வெக்கக்கேடு - MLA ஆதங்கம்

எங்கள் அண்ணன் குன்னம் தொகுதி திரு சிவ சங்கர் MLA அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள ஆதங்கத்தை இங்கு பதிவு செய்ததுள்ளோம்...
சனநாயகக் கடமை -1

tamil
voters 
சட்டமன்றத்தில் திமுகவினர் சனநாயகக் கடமையை சரியாக ஆற்ற வேண்டும் என்பது பத்திரிக்கையாளர்களின், மன்னிக்கவும் பத்திரிக்கைகளின் விருப்பம். சட்டமன்றத்தில் எதிர் கட்சிகளின் நிலை என்ன என்பது நேரிடையாக பார்ப்பதால் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் உண்மையை அப்படியே பத்திரிக்கையில் எழுத முடியாது. குளுகுளு அறையில் அமர்ந்திருக்கிற பத்திரிக்கை முதலாளிகள் விரும்புவதை தான் , வியர்வை வழிய வழிய இவர்கள் எழுத முடியும்.
முதலில் பத்திரிக்கைகள் சனநாயகக் கடமையை முறையாக ஆற்றட்டும். சட்டசபையில் நடப்பதை மனசாட்சிப் படி எழுதட்டும். நேற்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் போட்டிருக்கிறார்களே, சட்டமன்றத்தில் எதிர்கட்சியை பேசவிடுவதில்லை என்று. தேமுதிக தலைவர் ஊர் ஊராக சொல்கிறாரே, பேச அனுமதிக்கவில்லை என்று.
இதைத்தான் இந்த ஆட்சி அமைந்த நாளிலிருந்து நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.
# அங்கே நெரிக்கப்படுவது எங்கள் குரல் மட்டும் அல்ல... உங்கள் குரலும் தான்.
நாளை உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், அங்கேதான் குரல் எழுப்ப வேண்டியிருக்கும்.
## எச்சரிக்கை....

mla
சனநாயகக் கடமை - 2

சில தோழர்கள் சட்டமன்றம் எப்படி செயல்படுகிறது என்று தெரியாமல் அறிவரை கூற முற்படுகிறார்கள் , அவர்களுக்காக இந்த நிலைத் தகவல். அதனால் தான் காலை பதிவிட்ட நிலைத்தகவலுக்கு 1 என்று எண் இட்டேன்.
இவர்கள் நினைப்பது, சட்டமன்றம் என்றால் அவரவர் எழுந்து மைக்-ல் பேசலாம் என்று. அப்படி கிடையாது. எல்லோர் முன்னும் ஒலிவாங்கி இருக்கும், ஆனால் இணைப்பு கொடுக்கப் பட்டிருக்காது. சபா யாருக்கு கை நீட்டுகிறாரோ , அவருக்கே மைக் இணைப்பு கொடுக்கப் படும்.
மூன்று விதங்களில் உறுப்பினர்களுக்கு பேச நேரம் கிடைக்கும்.
1. விவாதங்களில் பங்கேற்கும் வாய்ப்பு 10-20 நிமிடங்கள். இது ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, ஒவ்வொரு துறை மீதான விவாதங்கள். இது வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை கிடைக்கும் வாய்ப்பு.
2. zero hour - இந்த நேரத்தில் மாத்திரம் அன்றைய முக்கிய, மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை , எழுத்து மூலம் பேரவைத் தலைவரிடம் கொடுத்து அனுமதி கிடைத்தால் எழுப்பலாம். சபாநாயகர் மனம் வைத்தால் " தான் " வாய்ப்பு கிடைக்கும். அரசுக்கு சிக்கலான பிரச்சினை என்றால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்காது.
3. கேள்வி நேரம் - அரசு நடைமுறை தொடர்பாகவோ, தொகுதி குறித்தோ எழுத்து மூலமாக எழுப்புகின்ற கேள்வி , சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, பதில் சட்டப் பேரவை செயலகத்தால் பெறப்படும். அது பேரவையில் அமைச்சரால் பதிலளிக்கப்படும். இதை ஒட்டி மற்ற உறுப்பினர்கள் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்புக் கேட்கலாம். முதன்மைக் கேள்வியோ, துணைக்கேள்வியோ சபாநாயகர் மனது வைத்தால் தான்.
இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இப்படி தான் செ.கு.தமிழரசன், சரத்குமார் போன்றோர் அடிக்கடி சபாநாயகரால் வாய்பளிக்கப்படுவது. காங்கிரஸ் விஜயதாரணி பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் பேசிக் கொண்டிருக்க , வாய்ப்பு கேட்காத அவரை, துணைக்கேள்வி கேட்க சபா அழைக்க, அவர் அமர்ந்திருக்க , அனைவரும் கிண்டலாக சிரிக்க ( ஆளுங்கட்சியினரும் ) இவர் வழிய... அவர் வழிய .... அந்தக் கூத்தும் ஒரு நாள் நடந்தது.

இந்த சட்டமன்ற நடவடிக்கைகள் தெரிந்து கொள்ளாமல், புரியாமல் " involve in active debate " என்று special advise கொடுக்கும் சில அறிவாளி நண்பர்களுக்கு யாராவது விளங்க வையுங்களேன்....

mla
சனநாயகக் கடமை - 3

சில பத்திரிக்கைகள் திமுக சனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுவதே வேலையாக இருக்கிறார்கள். அவர்களுக்காக....
பொதுவான கருத்துகள் மீது விவாதம் நடத்துவதுதான் முறை. ஆனால் கடந்த எனது இரண்டு நிலைத்தகவல்களை பார்த்தவர்களுக்கு சட்டப்பேரவை நிலவரம் புரிந்திருக்கும்.
கேள்வி நேரத்தின் போது குறை கூறக்கூடாது என்பது மரபு. எதிர்கட்சிகள் தான் குற்றம் சுமத்துவது வழக்கம். ஆனால் ஆளுங்கட்சியினர் குற்றம்,குறை சொல்வதே வேலையாக இருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு கேள்வி கேட்டால் கூட , கடந்த ஆட்சியை குறை கூறுவதையே அமைச்சர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ,தேனீ மாவட்டம், போடியில் நடந்துக் கொண்டிருக்கிற பாதாளச்சாக்கடைப் பணிகள் எப்போது முடியும் என்று கம்யூனிஸ்ட் உறுப்பினர் லாசர் கேட்டால், இத்தனை மாதங்களில் முடிவடையும் என்று பதிலளிக்க வேண்டும். ஆனால், கே.பி.முனுசாமி " கடந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் முறையாகத் திட்டமிடப்படவில்லை. அதனால்...... " என்று தான் ஆரம்பிப்பார்.
மான்யக் கோரிக்கையில், பாமக உறுப்பினர் கணேஷ்குமார் பேசும் போது " விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போயிருந்தேன். வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் வந்த பெண்ணை, ஆம்புலன்சில் இருந்த நிலையிலேயே, பாண்டிச்சேரிக்கு போகச் சொன்னார்கள். சொன்னவரும் டாக்டர் அல்ல, கம்பவுண்டர். ஏன் போகச் சொல்கிறீர்கள் ? என்று கேட்டப்போது தான் , டாக்டர்கள் இல்லை என்றார்கள் " என்று கூறினார். இதற்கு நீங்கள் அமைச்சராக இருந்தால், என்ன பதில் சொல்வீர்கள் ?. அமைச்சர் சி.வி.சண்முகம் எழுந்து சொன்ன பதில் என்ன தெரியுமா ? " கடந்த திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட உபகரணங்கள் பழுதடைந்துவிட்டன " . போதுமான டாக்டர்கள் இல்லை என்பதற்கு இது தான் பதிலா ?
அதே போல அண்ணன் ஏ.வ.வேலு அவர்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். அதில் பேசும் போது, " கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் வருகிற வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக சீர் செய்யாவிட்டால், சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும் " என்றார். " தண்ணீர் பஞ்சம் " என்றே சொல்லக்கூடாது என அமைச்சர்கள் எழுந்து கூச்சலிட்டார்கள். கவலையை கூட தெரிவிக்ககூடாதாம். இதற்கு பதில் சொன்ன அமைச்சர் என்ன சொல்லலாம் ? அரசின் கவனத்திற்கு இது வந்து விட்டது, நடவடிக்கை எடுத்துவிட்டோம் , என சொல்லலாம். அமைச்சர் ராமலிங்கம் ," காவிரியை கைவிட்டவர்களெல்லாம் கண்டலேறு பற்றி பேசுவதா ", என்று ஆரம்பித்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா ? அப்படியே அமைதியாக உட்கார்த்திருந்தால் , தினமலர் என்ன எழுதும். அமைச்சர் குற்றச்சாட்டுக்கு திமுக வாயடைப்பு.
ஆளுகின்ற கட்சிதான் பொறுப்போடு அனைவரையும் அரவணைத்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும். அவர்களோடு கூட்டணியிலிருந்தவர்களே எப்படி அரவணைக்கப்படுகிறார்கள் என்று பார்த்து வருகிறோம். ஆனால் ஆளுங்கட்சியை சனநாயகக் கடமை ஆற்ற சொல்ல முடியாத பத்திரிக்கைகள், திமுக-வை மாத்திரம் கேள்வி கேட்கிறார்கள்.

# அதுவும் சரிதான். மதித்து பதில் சொல்கிறவர்களிடத்தில் தானே கேள்வி
கேட்கமுடியும். family

நன்றி :- திரு சிவ சங்கர் அவர்கள் 

Monday, April 23, 2012

முடிந்தால் இதை படித்து பார் ?


நூல்களை அரிய செல்வமாகப் மதித்துப் போற்றியது நம் வரலாறு 
இன்று புத்தக தினம் ....
ஆனால் இன்று புத்தகம் படிப்பவர்கள் எத்தனை பேர்? என்பதுதான் கேள்வி.
இல்லை இல்லை புத்தக வாசிப்பில் தற்போது ஒரு புதிய எழுச்சி  உதயமாகியுள்ளது என்பது அலையலையாக மக்கள் புத்தகக் கண்காட்சிகளுக்கு வந்து போவதிலிருந்து தெரிகிறது.

"நல்ல புத்தகம், நல்ல நண்பனை போன்றது " என்ற வரிகள் புத்தகம் படிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிக்காட்டுகிறது.

சில‌ புத்த‌க‌ங்க‌ளை அதிக‌ ஆர்வ‌த்தோடு வாசிக்க‌த் தொட‌ங்கும்போது அவ‌ற்றிலிருந்து எடுத்துக்கொள்ள‌ எதுவுமில்லையென்ற‌ வெறுமை வ‌ந்துவிடும். எதிர்பார்ப்பில்லாது வாசிக்கும் சில‌ புத்த‌க‌ங்க‌ளோ சில‌வேளைக‌ளில் சுவார‌சிய‌மான‌ வாசிப்ப‌னுவ‌த்தை எதிர்பாராது த‌ந்துவிடுகின்ற‌ன‌. புத்தகங்களுடான நமது உறவு எப்போதுமே உணர்வுபூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்..எப்படி என்றால்,எல்லோருமே ஏதாவது ஒரு நோக்கத்துடன் அல்லது எதிர்பார்ப்புடன் தானே புத்தகங்களை தேடுகின்றனர். உதாரணத்திற்கு ஒருவர் தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகத்தை படிக்க விரும்பலாம்.இன்னொருவர் செல்வந்தாராக வழிகாட்டக்கூடிய புத்தகத்தை தேடலாம்.

கொஞ்சம் தீவிர வாசகர்கள் கடவுள் உண்டா என்னும் கேள்விக்கு விடை அளிக்கும் புத்தகத்தை படிக்க விரும்புவார்கள்.வாழ்க்கையில் முக்கிய்மானவை எவை என்னும் கேள்விக்கான புத்தகத்தையும் சில தேடலாம்.

இப்படி புத்தகங்கள் விடை அளிக்க கூடிய கேள்விகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.இப்படிதான் எல்லா புத்தகமும் ஏதோவொருகேள்விக்கு பதில் அளிக்கிறது... 

அந்த வகையில் புத்தகங்கள் வாசிப்பது என்பது ஒரு தனி உலகத்தில் நாம் வாழ்வது போன்றது. அவற்றை வாசிப்பது என்பது நாம் சுவாசிப்பது போன்று. அத்தகைய புத்தக வாசிப்பு தொலைக்காட்சி இருக்கும் காலத்திலும் சரி அது இல்லாத காலத்திலும் சரி புத்தகங்கள் நிறைய பேருக்கு எப்போதும் ஒரு நெருங்கிய தோழனாக, இருந்தது உண்டு. 

பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே.

படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு இட்டு வைக்கக்கூடிய அற்புத வரிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற புத்தகம் எதுவோ அதுவே சிறந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.

தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடு கிறதோ, சொக்க வைக்கும் தூக்கத்தில் படிக்கும் போதும் எந்த நூல் ஒருவனை விழிப்படையச் செய்கிறதோ அதுவே சிறந்த புத்தகம். நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரமாகும்.
நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல்களைப் படிப்பதால் துறையறிவு பெருகும், தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங் காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும். பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிறஅங்கீகாரங்களும்நம்மை தேடி வரும்.

ஆனால் சமீபத்தில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்றழைக்கப்படும் அண்ணா நூற்ராண்டு நூலகத்தை தமிழக அரசு மாற்றும் முடிவை எடுத்துள்ளது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது ...

Sunday, April 22, 2012

முடிந்தால் இதை தடுத்து பாரு ?



இன்று பூமி தினம்
அனைவருக்கும் வாழ்த்துகள் ......
எப்படியான
அழிவை இந்தப் பூமி எதிர்கொள்ளுகின்றது?

மனிதர்களால்,
அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞானத்தால்
இந்த அழிவைத் தடுத்து நிறுத்த
முடியுமா?

இன்று பூமியிலுள்ள பலரிடம்
இருக்கின்ற மிகப் பொரிய கேள்விக்கான
விடையினைத் தேடுவோம் ....

உலகம் இன்று மிரண்டு போய் கொண்டிருப்பது அமெரிக்கா போன்ற நாடுகளின் அணு ஆயுதங்களுக்கோ, அரசுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கோ அல்ல. அதைவிட மோசமான ஆபத்தை விளைவிக்க கூடிய உலகை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் குளோபல் வார்மிங் என்று கூறப்படும் உலகம் வெப்பமயமாதல் என்ற நிகழ்வு தான் உலக மக்களின் வயிற்றில் இன்று புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் நாளுக்கு நாள் அரசுகளின் புரிந்துணர்வு அடிப்படையில் திறப்பு விழா கொண்டாடும் தொழிற்சாலைகளாலும், அதிக அளவில் நகர்வலம் வரும் வாகனங்களாலும், உணவு தானியம் படைக்க, நிலத்திற்கு அதிக அளவில் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை படைப்பதாலும், 50 கிராம் எடை கொண்ட பொருளை சமைக்கக்கூடிய 5 கிலோ சுமக்கும் திறனுடைய பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதாலும் புவி இன்று வெப்பம் கூடி எரிமலையாய் எரியத் தொடங்கியுள்ளது.

உலகம் வெப்ப மயமானால் என்ன பிரச்சனை? என நீங்கள் கேட்கலாம். உலகம் வெப்பமயமாதலால் சூரிய வெப்பம் உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத்தட்டுபாடு, உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்பு, வறுமை, பருவம் மாறி மழை பெய்தல், வெயில் தாக்கம், பனிமலைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலகம் வெப்பமயமாதல் என்பது அணுகுண்டை விட ஆபத்தானது.

புவி வெப்பம் அதிகரித்து வருவது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருவதாக ஆய்வாளர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர். 1975ம் ஆண்டிலிருந்து கடல் மட்டம் உயர்வு அதிக அளவில் உள்ளதாக கூறுகின்றனர்.

உலக சராசரி கடல் மட்டம் கடந்த 100 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு ஒன்று முதல் 2 மி.மீட்டர் வரை உயர்ந்து வருவதற்கான ஆதாரத்தை அள்ளி நீட்டுகின்றனர். இந்த நிலை நீடித்தால் 2100ம் ஆண்டு கடல் மட்டம் உயர்வு 18 முதல் 59 சென்டி மீட்டர் வரை இருக்குமென மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.



இதற்கு இன்னொரு சான்றாக நிலப்பரப்பில் தற்போது அடிக்கடி அனல் காற்று வீசுவதையும், பனிப்பொழிவு அதிகமாவதையும், பனிபுயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் அடிக்கடி நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பெட்ரோலிய பொருட்களின் அதிகளவு பயன்பாடும், தொழில்துறை, வேளாண்துறை, நிலப் பயன்பாடு போன்றவற்றில் மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான செயல்களே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகும்.



இந்தியாவை குறித்துப் பார்த்தால் புவி வெப்பம் அடைந்து வருவதால் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளது. இதனால் 2100க்குள் இந்தியாவில் 16 முதல் 17 கோடி மக்கள் இடம் பெயர நேரிடும்.

மேற்கு வங்கத்தில் 1 கோடி மக்களும், மும்பை மற்றும் புறநகரில் 12 கோடி மக்களும், தமிழ்நாட்டில் 1 கோடி மக்களும், ஆந்திராவில் 60 லட்சம் மக்களும், குஜராத்தில் 55 லட்சம் மக்களும், ஒரிசாவில் 40 லட்சம் மக்களும், இராஜஸ்தான், கர்நாடகா, வடக்கு ஆந்திரா, தெற்கு பீகார், மராட்டியத்தின் உட்பகுதி என சுமார் 70 லட்சம் மக்களும் இடம் பெயர வேண்டியிருக்கும்.


அவ்வாறு இல்லையெனில் உலக நிலபரப்பில் 2.5 சதவீத அளவு மட்டுமே கொண்ட இந்தியா சுமார் 120 முதல் 130 கோடி மக்களை தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்கி காப்பாற்ற வேண்டியிருக்கும்.

தட்ப வெப்பநிலை மாற்றம் உலகின் சுற்றுச்சுழலுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் அவையில் 1992ம் ஆண்டில் நடைபெற்ற தட்பவெப்பநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Local villagers carry coal after having scavenged the coal illegally from an open-cast coal mine in the village of Jina Gora on February 11, 2012 near Jharia, India. Villagers in India's Eastern State of Jharkhand scavenge coal illegally from open-cast coal mines to earn a few dollars a day. Claiming that decades old underground burning coal seams threatened the homes of villagers, the government has recently relocated over 2300 families to towns like Belgaria. Villagers claim they were promised schools, hospitals and free utilities for two years, which they have not received. As the world's power needs have increased, so has the total global production of coal, nearly doubling over the last 20 years according to the World Coal Association.


நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை உலகம் முழுவதுமுள்ள நுகர்வோர் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே வருவதாலும், பல்வேறு ஆதாரங்களிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் அதிகம் உற்பத்தியாவதாலும் தட்ப வெப்ப நிலை செயற்கையாக அதிகரிக்கும் என்பதை ஐ.நா பன்னாட்டுக் குழுவின் ஆய்வை உணர்ந்த அறிவியலாளர்கள் 1996ம் ஆண்டு உறுதி செய்தனர்.

1997ம் ஆண்டு பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க செல்வந்த நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் கொடுத்த வாக்குறுதியை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பருவநிலை மாற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளுக்கு செலவிடுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளே நியாயமாக பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.

1997ம் ஆண்டு ஐ.நா. கோட்பாடுகளைத் தொடர்ந்து க்யோடோ உடன்பாடு காணப்பட்டது. இதன்படி இணைப்பு 1 நாடுகளான வளர்ந்த நாடுகள் தங்களுடைய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012ம் ஆண்டில் சராசரியாக 5.2 சதவீதம் குறைந்து 1990ம் ஆண்டு நிலவி வந்த நிலைக்கும் குறைவாகக் கொண்டு வர இணங்கின. இந்த மொத்த குறியீடு ஒவ்வொரு நாட்டின் தேசிய இலக்காக மாற்றப்பட்டது.

புவி வெப்பமயமாதலால் என்ன பாதிப்பு?

புவி வெப்பமயமாதலால் பருவகால மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

வேளாண்மை உற்பத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போதைய பாதிப்பை விட மிகக் கடுமையானப் பாதிப்பிற்குள்ளாகும். அரிசி, பருப்பு, தானிய வகைகளின் விளைச்சல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, சில காலங்களில் அந்தப் பயிர் வகைகளே இல்லாமல் முழுமையாக அழிந்து போகும். இதனால் உலக உணவுப் பாதுகாப்பிற்கு மிகுந்த பின்னடைவு ஏற்படுவதுடன், பெரும்பாலான நாடுகளில் வறுமையும் பட்டினிசாவும் பெருகும்.

உலகின் பல்வேறு பாகங்களில் அதிகரித்து வருவது நீர்ப்பற்றாக்குறை. இந்தியாவில் ஓடும் பல நதிகளின் இருப்பிடமாக விளங்கும் இமயமலை, புவி வெப்பமயமாதலால் தொடர்ந்து உருகி வருவதால் ஆறுகள் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது.

இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திட நாம் என்ன செய்ய வேண்டும். நம் அன்றாட நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் மாற்றியமைத்தால் மட்டுமே புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். இதுவரை நம் பல செயல்கள் இயற்கைக்கு எதிரானவையே. எனவே தான் இயற்கை நமக்கு எதிராக மாறியுள்ளது.

புவியை காக்க இதோ சில வழிகள்:

தொழிற்சாலை, வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் கார்பன் மாசுக்களைக் கட்டுபடுத்த மரங்கள் அவசியம். எனவே, உலக அளவில் காடுகள் வளத்தைப் பெருக்குவதோடு 'வீட்டுக்கு 2 மரம் வளர்ப்போம்'என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் புங்கன், காட்டாமணக்கு, ஆமணக்கு போன்றவற்றின் மூலம் கிடைக்கும். பயோ டீசலை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

நாம் அன்றாடம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். அவற்றை குறைக்க சூரிய மின் ஆலையை நிறுவுவதோடு ஒவ்வொரு தனி நபரும் சூரிய ஒளியை பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் பயன்படுத்தும் டியூப் லைட், பல்ப் இனிமேல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சி.எஃப்.எல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.


வீடுகளிலும், ஆலைகளிலும் தேவைப்படும் எரிவாயுவிற்கு பதிலாக உயிரி எரிவாயுக்கனைப் பயன்படுத்த வேண்டும்.
இவைகளில் மிகவும் முக்கியமானது நிலத்தடி நீர்வளத்தை காக்க வேண்டும். எனவே மழை நீர் சேகரிப்பு, கிணற்றின் ஊற்றுக் கண்களுக்கு போதிய நீர் வரும்படி செய்தல் போன்றவற்றால் எதிர்கால விவசாயத்தை காக்க முடியும் என்பதோடு எதிர்கால நீர்த் தேவையையும் சமாளிக்க முடியும்.

சிந்து சமவெளி நாகரிகத்தையும், இன்டஸ்பள்ளத்தாக்கு நாகரிகத்தையும் நாம் அறிய காரணம் அக்கால மனிதர்கள் விட்டு சென்ற அழகிய வேலைபாடுள்ள பானைகளும், ஆயுதங்களும் தான். ஆனால் நமக்கு பிறகு 3000 ஆண்டுகள் கழித்து யாராவது அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் கிடைப்பது வெறும் பாலித்தீன் பைகளாகத் தான் இருக்கும்.

ஏனெனில் மிகப்பெரும் கலைகளை போல பாலித்தீன் பைகளும் காலத்தால் அழியாதவை. அதோடு மழை நீரையும் மண்ணுக்குள் போக விடாமல் தடுப்பவை. இவைகளால் நீர், நிலம், காற்று என்ற 3 அடிப்படை கூறுகளுமே மாசுபடுகிறது. எனவே பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை விடுத்து சணல், துணி, காகித பைகளின் பயன்பாட்டைப் பெருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட வேளாண்மையை பாதுகாக்க போதுமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வேளாண்மையில் இன்று நாம் அதிகளவில் பயன்படுத்தி வரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விட்டொழித்து இயற்கை உரங்களையும், மூலிகைச் சாறு பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். இதனால் நிலத்தின் வளம் பெருகுவதோடு எதிர்கால வேளாண்மையும் பிழைக்கும்.

அவ்வாறில்லாமல் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்ணில் உயிர் வாழும் பல லட்சம், கோடி நுண்ணுயிர்கள் மடிகின்றன. மண்ணும் உயிரிழக்கிறது. இதனால் மண் வேளாண்மைக்கு சிறப்பாக உதவி செய்ய முடிவதில்லை.
மேலும் வேளாண்மையில் உதவி செய்யும் புழு, பூச்சிகளின் ஆதிக்கமும், நோய்களின் ஆதிக்கமும் அதிகரிக்கிறது.

இதற்கு மேலும் மேலும் உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் வேளாண்மைச் செலவு அதிகரிப்பதோடு, விளைச்சலும் குறைகிறது. இதோடு நின்றுவிடாமல் விளைபொருட்களில் நச்சுக்கலந்தே இருக்கிறது. அதை உண்ணும் நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம். தேவைதானா இது?

புவி வெப்பமடைந்து வருவதற்கு இது மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொணடே போகலாம். ஆனால் இங்கே கூறியுள்ள அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே 90 சதவீதம் வரை புவி வெப்பமாதையும் கடல் மட்டம் உயருவதையும் தடுக்க முடியும்.

புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பொறுப்பு அரசுகளுக்கு எந்தளவிற்கு உள்ளதோ அதே அளவு பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. நாம் ஒன்று கூடி புவியை காத்தால், புவி நம்மை காக்கும்.
நம் சந்ததியினருக்கு ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுப்போம் ...
நன்றி :-What the world needs to watch
நன்றி:-திரு .பெரிய.பத்மநாபன்

Thursday, April 19, 2012

தமிழீழ தோல்விக்கு MGR ரும், இந்திராவும்தான் காரணமா ?

இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம் . இப்பதிவை படிப்பவர்கள் சில வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்வதற்கு மட்டுமே தவிர யாருடைய மனதையும் . புண்படுத்த அல்ல.............................


இலங்கை தமிழர்களின் இன்னல்களுக்கு யார் காரணம்? இந்த இனப்போர் இந்த அளவு வளர்ந்ததுக்கு என்ன பின்னணி. என்னை பொறுத்தவரை இலங்கை தமிழர்களின் இந்த முடிவில்லா வாழ்வாதார போராட்டத்திற்கு மூவர் தான் முக்கிய பொறுப்பாளர்கள். அவர்கள் இந்திரா காந்தி அம்மையார், எம்ஜீஆர் அவர்கள் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்.

1983-ஆம் வருடம், இலங்கையில் இனப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்திரா காந்தி அம்மையார் நினைத்திருந்தால் தனி ஈழத்தை எளிதாக பெற்று தர முடிந்திருக்கும். இலங்கை அரசு இனப்போரை நிறுத்தாவிட்டாலும் தனி ஈழம் அமைய ஒப்புதல் தராவிட்டாலும் இந்தியாவிற்கு போரை தவிர வேறு வழியில்லை என்று அம்மையார் அறிவித்திருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். தமிழர்களின் உரிமையை பெற்றுத்தர இந்திய ராணுவ விமானங்கள் யாழ்பாணத்தில் தரை இறங்கும் என்று ஒரு அறிவுப்பு செய்திருந்தாலே இலங்கை அரசு பணிந்திருக்கும். பங்களாதேஷை பாகிஷ்தானை விட்டு பிரித்த துணிவு மற்றும் ரஷ்யாவின் பக்க பலம் இவை இரண்டும் ஆசியாவில் சக்தி வாய்ந்த தலைவராக இந்திரா காந்தி அம்மையாரை மாற்றியிருந்தது. அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜீஆர் அவர்கள் மிக சரியான முறையில் இந்த பிரச்சினையை அம்மையாரிடம் எடுத்து சென்றிருந்தால் இலங்கை தமிழருக்கு அப்போதே விடிவு கிடைத்திருக்கும். தமிழ் ஈழம்தான் வேண்டும் என்று எம்ஜீஆர் அவர்கள் வலியுறுத்தி இருந்தால் இந்திரா காந்தி அம்மையார் நிச்சயமாக அதற்க்கு உதவியிருப்பார். எந்த காரணத்திற்க்காகவோ அந்த இரு தலைவர்களும் தமிழ் போராளிகளுக்கு ஆயுதங்களும் பண உதவியும் செய்து மிக நீண்ட போராட்டத்திற்கு விதை போட்டு விட்டார்கள்.
1984-ஆம் ஆண்டு இலங்கையில் இனப்போராட்டம் மிகத்தீவிரமாக இருந்தபோது எம்ஜீஆர் அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்த தமிழ் போராளிகள் இயக்கங்களை ஒரு சந்திப்புக்கு அழைத்திருந்தார். திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அந்த சந்திப்பு நடக்கும் ஒரு நாள் முன்பு அதே போன்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கலைஞர் கூட்டிய கூட்டத்திற்கு EPRLF, TELO மற்றும் EROS போன்ற அமைப்பை சார்ந்த பிரதிநிதிகள் செல்கிறார்கள். விடுதலை புலிகள் அந்த கூட்டத்திற்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள். கலைஞர் அவர்கள் நடத்திய் சந்திப்பால் கோவமடைந்த எம்ஜீஆர் மறுநாள் நடக்கவிருந்த கூட்டத்தை ரத்து செய்கிறார். அத்துடன் அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரனை மட்டும் தன்னை வந்து சந்திக்க சொல்கிறார். ஆனால் பிரபாகரன் தான் செல்லாமல் விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை அனுப்பி வைக்கிறார். அந்த சந்திப்பின்போது எம்ஜீஆர் பாலசிங்கத்தை பார்த்து ஏன் நீங்கள் கலைஞர் கூட்டிய கூட்டத்திற்கு செல்லவில்லை என்று கேட்கிறார். அதற்கு பாலசிங்கம் “கலைஞர் தங்களை முந்தி கொண்டு தனக்கு பெயர் வருவதற்காக அந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். ஆனால் அது போன்ற அரசியல் விளையாட்டுக்குள் நாங்கள் சிக்கி கொள்ள விரும்பவில்லை அதனால் நாங்கள் செல்லவில்லை” என்று சொல்கிறார். அதற்கு எம்ஜீஆர் நீங்கள் தமிழக அரசியலை நன்கு தெரிந்து வைதிருக்கீர்கள் உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறார். உடனே பாலசிங்கம் இந்திய அரசு ஆயுதம் மற்றும் பண உதவியை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு எம்ஜீஆர் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க, பாலசிங்கம் பதில் சொல்ல தயங்குகிறார். அனால் பாலசிங்கத்துடன் சென்று இருந்த சங்கர் என்பவர் உடனடியாக இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்கிறார். உடனே எம்ஜீஆர் அவ்வளவுதானா, அது போதுமா என்று கேட்கிறார். அதற்க்கு அவர்கள் அப்போதைக்கு அது போதும் என்கிறார்கள். சரி, நாளை இரவு பத்து மணிக்கு வாகனத்துடன் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளவும் என்கிறார் எம்ஜீஆர்.

ஆச்சர்யம் தாங்க முடியாமல் இருவரும் சென்று பிரபாகரனிடம் நடந்ததை சொல்கிறார்கள். பிரபாகரனாலும் அதை நம்ப முடியவில்லை. மறுநாள் இரவு வாகனத்துடன் எம்ஜீஆர் இல்லம் வருகிறார்கள். முதல்வர் அவர்களை வாயில் வரை வந்து அழைத்து செல்கிறார். அவர்களை அந்த இல்லத்தின் அடிதளத்திற்கு அழைத்து சென்ற முதல்வர் அங்கு இருந்த ஒரு அறையின் காவலர்களிடம் அவர்களுக்கு 20 பெட்டிகள் கொடுக்க சொல்கிறார். அந்த அறையில் பணப்பெட்டிகள் நம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறையில் இருந்தது போல் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது. அந்த பணபெட்டிகளுடன் அந்த இரவில் செல்ல பாலசிங்கம் தனக்கு அச்சமாக இருக்கிறது என்று சொல்ல, முதல்வர் தமிழக காவல்துறை தலைவரை தொலைபேசியில் அழைத்து உடனயாக இரண்டு வாகனங்களுடன் காவலர்களை அனுப்ப சொல்கிறார். அந்த இரவில் காவலர் வாகனங்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க பணபெட்டிகளுடன் சென்னை நகரில் ஊர்வலமாக சென்று தங்கள் இடத்தை அடைகின்றனர் பாலசிங்கமும் அவருடன் கூட வந்தவர்களும். இந்த பணத்தை கொண்டுதான் பிரபாகரன் தன் முதல் AK-47 துப்பாக்கிகள் கொள்முதலை செய்கிறார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பாலசிங்கம் தான் எழுதிய “விடுதலையை நோக்கி” என்ற புத்தகத்தில் விவரிக்கிறார். ஆனால் எம்ஜீஆரிடம் பணம் வாங்கி ஆயுதங்கள் வாங்கிய பிரபாகரன் இலங்கை அரசுக்கு எதிராக அதை உபயோகபடுதியதைவிட சக போராளி இயக்கங்களுக்கு எதிராகத்தான் அதை பயன்படுத்துகிறார். அவருடைய ஒரே நோக்கம் தமிழ் ஈழத்தில் தன்னை விட வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதுதான். தனக்கு ஒத்து வராத பல தமிழ் தலைவர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்தார்   அமிர்தலிங்கம் போன்ற மிதவாத கொள்கையுடைய காந்தியவாதிகளையும் பிரபாகாரனின் ஆயுதங்கள் பலி வாங்கின
.
இந்திரா காந்தி அம்மையாரோ அல்லது எம்ஜீஆர் அவர்களோ மனது வைத்திருந்தால் அமிர்தலிங்கம் போன்ற அரசியல் அனுபவமும், இலங்கை தமிழர்களின் மேல் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்த தலைவர்களுக்கு ஆதரவு அளித்து இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் எந்த காரணத்தினாலோ அவர்கள் வன்முறையில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்களை ஆதரித்து ஆயுதங்களையும் பண உதவிகளையும் வழங்கினர். கைகளில் கொடூரமான ஆயுதங்களும், பையில் ஏராளமான பணமும் கிடைத்தவுடன், அந்த இளைஞர்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராதவர் எவராக இருப்பினும் தன் தமிழ் இனத்தையே சார்ந்தவர்களாக இருந்தாலும் சுட்டு கொன்றனர். இதற்க்கெல்லாம் எம்ஜீஆர் அவர்களும் இந்திரா காந்தி அம்மையாரும் தான் பொறுப்பேற்க வேண்டும். இதைத்தான் கலைஞர் அவர்கள் தமிழ்ப்போராளிகள் தங்களுக்குள்ளே அடித்துக்குகொல்வதால்தன் இலங்கை பிரச்சினைக்கு முடிவு காண முடியாமல் போனது என்று பலமுறை கூறியுள்ளார்.



1986-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் ஈழ தமிழர் அமைப்புகளின் இடையில் ஒற்றுமை வேண்டி ஈழ தமிழர்கள் ஆதரவு இயக்கம் (டெசோ) என்ற ஒரு அமைப்பை தொடங்குகிறார். மதுரையில் நடந்த அதன் முதல் கூட்டத்தில் வாஜ்பாய், N.T. ராமராவ், சுப்ரமண்யம் சுவாமி போன்ற எதிர் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அனால் அதற்கு மறுநாளே விடுதலைபுலிகளால் TELO இயக்க தலைவர் சிறி சபாரத்தினம் மிக கொடூரமாக சுட்டு கொல்லபடுகிறார். சபாரத்தினத்தை கிட்டு தலைமயில் ஒவ்வொரு வீடாக தேடி கொண்டு வரும் விடுதலை புலிகள் தங்கள் கண்களில் படும் பல டெலோ இயக்க போராளிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டு கொல்கிறார்கள். கடைசியில் சபாரத்தினத்தை கண்டு பிடித்தவுடன் அவர் மறைந்திருந்த இடத்திலிருந்து தப்பி ஓடும்போது நடுத்தெருவில் கிட்டு அவர் காலில் சுடுகிறார். சபாரத்தினம் கிட்டு முன் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்டும் அவர் மிருகத்தனமாக சுட்டு கொல்லபடுகிறார். இந்த நிகழ்ச்சி விடுதலை புலிகளின் அரக்க குணத்திற்கு மிகப் பெரிய சாட்சி.
கலைஞர் முயற்சியால் ஏற்படும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இந்த எதிர்கட்சி தலைவர்களின் ஒற்றுமை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு அபாய மணியாக ஒலிக்கிறது. கலைஞருக்கோ அல்லது மற்ற எதிர் கட்சிகளுக்கோ இலங்கை பிரச்சினையால் ஆதாயம் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் SAARC மீட்டிங் ஒன்று பெங்களூரில் நடை பெற இருந்தது. அந்த கூட்டத்திற்கு இலங்கை அதிபர் ஜெயவர்தனே வருகிறார். அந்த சமயத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட ராஜீவ் காந்தி திட்ட மிடுகிறார். எம்ஜீஆரிடம் பிரபாகரனை ஜெயவர்தனேவை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்ய சொல்கிறார். பிரபாகரன் ஒரு சிறப்பு இந்திய ராணுவ விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கே நடந்த சந்திப்பில் அமைதி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட அவர் நிர்பந்தபடுத்தப்பட்டாலும் அவர் அதை மறுத்து சென்னை திரும்பிகிறார். அதற்க்கு பின் பிரபாகரனை அழைத்து எம்ஜீஆர் ஏன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று கோபமாக கேட்கிறார். அதற்கு பிரபாகரன் அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் தமிழர் உரிமை பாதிக்கப்படும் அதனால் அதை மறுத்தேன் என்கிறார். இதனால் மேலும் கோபமடையும் எம்ஜீஆர் நான் அனுமதித்தால்தான் நீங்கள் தமிழ்நாட்டில் நடமாட முடிகிறது. இங்கு நீங்கள் இருக்க வேண்டுமானால் நான் சொல்வதை கேட்கவேண்டும் என்று சொல்ல அதற்க்கு பிரபாகரன் நான் என் லட்சியங்களை எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாது என்று பதிலளிக்கிறார். அப்படியானால் உங்கள் இலட்சியங்களுக்கான போராட்டங்களை உங்கள் நாட்டில் சென்று வைத்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் அல்ல என்கிறார் எம்ஜியார். அப்படியே செய்கிறேன் என்று அங்கிருந்த கிளம்பிய பிரபாகரன் உடனே சென்னையை விட்டு இலங்கை செல்கிறார். அதற்க்கு பின் அவர் இந்தியா வரவே இல்லை. நான் தற்போது கூறியது அனைத்தும் பிரபாகரனுக்கு நெருக்கமாயிருந்த முன்னாள் CNN பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் ராஜீவ் காந்தி கொலை வாழ்க்கை விசாரித்த ஜெயின் கமிஷன் முன் கொடுத்த வாக்கு மூலம்.

இதிலிருந்து ஒரு உண்மை புலப்படும் நெடுமாறன் அவர்கள் அடிக்கடி கூறுவது போல எம்ஜீஆர் தமிழ் ஈழம் மலர ஆசைப்பட்டார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. நெடுமாறன் அவர்களின் கருத்து தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஒத்து சொல்லப்படும் ஒன்று. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை. உண்மையில் எம்ஜீஆர் உடைய கவனமெல்லாம் கலைஞருக்கு எந்த பலனும் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான். எம்ஜீஆர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று இப்போது கூறுவதெல்லாம் வரலாற்றை முற்றிலுமாக திரிக்கும் முயற்சி. அவருடைய ஒரே பணி இந்திரா காந்தி அம்மையாருக்கும் ராஜீவ் காந்திக்கும் அவர்கள் மனம் கோணாமல் அவர்களின் முழு நேர சேவகனாகவும் இருப்பதுதான். அதனால்தான் ராஜீவ் சொல்படி பிரபாகரன் கேட்கவில்லை என்றதும் சிறிதும் யோசிக்காமல் அவரை முழுவதுமாக கைகழுவிவிட்டார்.
இப்போது பலமுனைகளிருந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போற்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்று குரல் எழுகிறது. ராஜபக்ஷே போர்குற்றவாளி என்றால், பிரபாகரனும் போர் குற்றவாளிதான். போர்க்களத்தில் எல்லாவற்றையும் ராவணன் இழந்து நின்ற போது இன்று போய் நாளை வா என்று ராமன் காட்டிய பெருந்தன்மையை ராஜபக்ஷே போன்ற பிணம்தின்னி கழுகுகளிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் பிரபாகரன் தன் இனைத்தையே தனக்கு கேடயமாக நிறுத்திக்கொண்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றிருக்ககூடாது. இதனால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கும். அந்த மனித கேடயதிலிருந்து தப்பி ஓட முயற்சித்த தமிழர்களை விடுதலைபுலிகள் கொடூரமாக கொலை செய்தனர். இருபக்கமும் மாட்டி கொண்டு எந்த பாவமும் அறியாத அந்த தமிழர்கள் சிக்கி சீரழிந்தது இனப்படுகொலைகளின் மிக உச்சகட்ட நிகழ்வு. தமிழர் உரிமை வேண்டி போராடியதை குறிக்கும் வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத சோகமும், கண்ணீரும், ரத்தமும் நிறைந்த கருப்பு பக்கங்கள்.
.

சமீபத்தில் மருதமூரான் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றை படித்தேன். அதில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“எனக்கு எல்லாளன் என்கிற மக்களின் உயிரின் மீது அக்கறைகொண்ட- போர் தர்மம் உணர்ந்த தமிழ் அரசனைத்தான் பிடிக்கிறது. 40 வருடங்கள் இலங்கையினை ஆட்சி செய்த பெருமையுள்ளன் எல்லாளன். 70 வயதில் போரில் மக்களின் உயிர் அதிகளவில் பலிவாங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக எதிரி மன்னனான இளைஞன் துட்டகைமுனுவுடன் நேருக்கு நேராக மோதியவன். மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்காகவே தெரிந்து கொண்டு தோற்றவன். அவரின் வீரத்தையும்- மக்களின் அக்கறையையும் உணர்ந்து துட்டகைமுனுவே சிலை வைத்த வரலாறெல்லாம் உண்டு. மக்களின் உயிர்களின் மீது அக்கறைகொண்டு, தன்னுயிரை மக்களுக்காகக் கொடுத்த உண்மையான தலைவன் எல்லாளனின் வழிவந்தவர்கள் என்று சொல்லுவதையே பெருமையாக கருதுகிறேன்! வரலாறுகள் அடிக்கடி திருத்தி எழுதப்பட்டே வந்திருக்கிறது. மற்றுமொரு எல்லாளன் மீண்டும் பிறந்து வருவான். நிச்சயமாக நம்புகிறேன்!!”
இப்படியெல்லாம் தன்னலம் பார்க்காத தமிழ் மன்னர்கள் இலங்கையில் இருந்தார்கள். ஆனால், பிரபாகரனும், மிஞ்சியிருந்த விடுதலைபுலிகளும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்கள் இனத்தையே கேடையமாக பயன்படுத்தினர். இதுவா தான் இனத்தை காப்பாற்ற போராடுவதாக கூறும் வீரர்களுக்கு அழகு? தங்கள் இனத்தை தாங்களே அழிப்பதற்காகவா இவ்வளவு நாள் ஒரு இயக்கம் நடத்தினார்கள்?
நான் திமுகவை சேர்ந்தவன் அல்ல. எப்போதுமே நடுநிலையோடு இருக்க முயலும் ஒரு சாதாரண பத்த்ரிக்கையாளன். ஆனால் எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம். எப்படி கலைஞருக்கு ஈழ தமிழருக்கு எதிரானவர் என்ற தோற்றம் கிடைத்தது? தமிழக மக்கள் எப்போதுமே ஈழ பிரச்சினையை முன்னிருத்தி தேர்தலில்களில் வாக்களித்ததில்லை. 1983-ஆம் ஆண்டு தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை இலங்கை தமிழர்களின் போரட்டத்திற்கு ஆதரவாக ராஜினாமா செய்கிறார். ஆனால் அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் இந்திரா காந்தி அம்மையாரின் மரணமும் எம்ஜீஆர் அவர்களின் உடல் நலமின்மையும் தான் தமிழக மக்களுக்கு பெரிதாக தெரிகிறது. தனது பதவியை துறந்தார் மற்றும் இலங்கை தமிழ் அமைப்புகளிடையே ஒற்றுமைக்கு முயற்சி செய்தார் என்றா தமிழக மக்கள் கலைஞருக்கு வாக்களித்து அரசாலும் உரிமையை தந்தனர்?
1986-ஆம் ஆண்டு அவர் இலங்கை தமிழ் அமைப்புகளிடையே ஒற்றுமை ஏற்பட எடுத்த முயற்சி திட்டமிட்டே சபாரத்தினம் படுகொலை மூலம் தடுத்து நிறுத்தபடுகிறது. மேலும், எம்ஜீஆர் மறைவுக்கு பின் 1989 ஆம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா அம்மையார் அவர் மேல் வைக்கும் குற்றச்சாட்டு அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது. இதை வைத்து திமுக ஆட்சியை ராஜீவ் காந்தி ஆதரவுடன் மத்தியில் அப்போதைய சந்திரசேகர் அரசாங்கம் கலைக்கிறது. அதற்க்கு பின் வந்த தேர்தலில் திமுக ஒரு தொகுதியை தவிர அனைத்திலுமே படுதோல்வியை தழுவுகிறது. இப்போதும் தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி மரணம்தான் மிகப்பெரிய விஷயமாக படுகிறது. அவரால் இலங்கைக்கு அனுப்பட்ட இந்திய அமைதிபடையின் தமிழர்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் பெரிதாக தெரியவில்லை. அத்துடன் தமிழக வாக்காளர்கள், விடுதலைபுலிகளும் தமிழர்கள் தானே அவர்களுக்கு தானே கலைஞர் உதவினார் அதில் என்ன தவறு என்று அவரை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்தவில்லை. பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் மரணத்தை விட தமிழகத்திலுள்ள தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தியின் மரணம்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் அதன் பின் நடந்த தேர்தலில் அண்ணாதிமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாறு காணாத அளவுக்கு ஆதரவளித்தார்கள். தனது செயல் ஒரு தேச நலனுக்கு எதிரான ஒரு செயல் என்று தெரிந்தும் இலங்கை அரசால் அவமானப்பட்டு திருப்பியனுப்பட்ட இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து சென்னை துறைமுகம் வந்ததும் அதை வரவேற்க செல்லமாட்டேன் என்று துணிவோடு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கூறினார். இதற்கெல்லாம் தமிழக மக்கள் செய்த கைம்மாறு அவருடைய கட்சியை அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைய செய்ததுதான்.
dmk.jpg (13660 bytes)


2009-ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் உச்சகட்டத்தில் இருந்தபோதும் ஒரு மாநிலத்தின் முதல்வராகிய கலைஞர் என்ன பெரிதாக செய்திருக்க முடியும். அந்த கட்டத்தில் இந்தியாவின் கையைவிட்டே போர் நிலவரம் சென்று விட்டது. கலைஞர் மத்திய அரசுக்கு தனது கட்சியின் ஆதரவை விலக்கிகொண்டிருந்தாலும் இங்கே அம்மா உடனடியாக காங்கிரசுக்கு கை கொடுத்திருப்பார். அப்போது யாரவது இலங்கையில் நடக்கும் தமிழ் இனப்படுகொலையை பற்றி கேட்டிருந்தால் அவர் இலங்கையில் இருப்பவர்கள் தமிழர்களே அல்ல அவர்கள் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி வழியாக இலங்கை சென்ற மலையாளிகள் என்று கூட சொல்லிருப்பார். போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று போர் தர்மத்திற்கு புது இலக்கணம் கூறி காங்கிரஸ் கூட்டணிக்கு துண்டு போட்டுவிட்டு காத்துகொண்டிருந்தவர் அல்லவா அவர்?
கலைஞர் செய்த ஒரே தவறு பிரபாகரனால் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது, நான் என்றும் பிரபாகரனை ஆதரிக்கமாட்டேன் என்று வெளிப்படையாக அறிவிக்காததுதான். அப்படி ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அவரை யாரும் இன்று குற்றம் கூறமுடியாது.
இறுதியாக நான் எஞ்சியுள்ள இலங்கை தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான். இனிமேலும் இந்திய அரசையோ அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளையோ நம்பாதீர்கள். இங்குள்ள சில அரசியல் வியாபாரிகள் உங்கள் பிரச்சினையை வைத்து தங்களை விளம்பரபடுதிக்கொள்ளவும் தங்கள் வாழ்வை வளமாக்கிகொள்ளவும் முயல்கிறார்கள். இவர்களால் உங்களுக்கு எந்த தீர்வையும் ஏற்படுத்தி தரமுடியாது. இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு உங்களுக்குள்ளே சில நல்ல தலைவர்களை உருவாக்குங்கள். ஆயுதமேந்திய போராட்டம் ஒரு நிலைக்கு மேல் வெற்றியை தராது என்று உணருங்கள். ஒரு நாள் சூரியன் உங்களுக்காகவும் உதிப்பான். அந்த விடியலை நோக்கி நம்பிக்கையுடன் நடைபோடுங்கள். இந்தியாவின் மூலமாக, தமிழகத்தின் சார்பாக இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் உங்களுக்காக என்ன அதிகபட்சம் செய்ய முடியும் ?

பதவு உதவி பார்த்திபன் 
நன்றி :- சசி 

Tuesday, April 17, 2012

நித்திரையில் இருக்கும் சித்திரை முட்டாள்




"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
..
-பாரதிதாசன்

(29-1-2008) அன்று சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு!

காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும், மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்கு அயலான மொழியில் இருக்கும். கிழமை ஒன்று தான் அவனுக்குப் புரிவதாக இருக்கும். அதிலும் ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் அந்த ஆண்டைப் பயமுறுத்துவது போல எழுத்தெழுத்தாக உச்சரிக்கும் போது அதற்குள் அந்த ஆண்டே ஓடிவிடும் போலத் தோன்றி அச்சத்தை விளைவிக்கும்.

ஆமாம், இந்த சக ஆண்டு என்பது என்ன? யாருக்குத் தெரியும் என்கிறீர்களா? நானே சொல்லி விடுகிறேன்.

விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் சக ஆண்டு. விக்கிர மாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒர் சாளுக்கிய மன்னன். அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏதாவது வேண்டுதலா?

கிறிஸ்து ஆண்டை ஆங்கிலேயர்கள் நம்மீது திணிப்பதற்கு முன் இந்தியாவின் நிலைமை என்ன? எந்தெந்த அரசன் ஆட்சிக்கு வருகிறானோ அந்த நாள் முதல் ஆண்டைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டில் பொறிப்பார்கள். இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறுகின்றான் என்றால் அந்த நாளிலிருந்து அவனது ஆண்டுக் கணக்குத் தெடங்கும். கல்வெட்டுக்களின் காலக் கணக்கிற்கு அது தான் அடிப்படை. எனவே இன்ன அரசனது ஆட்சியாண்டு என்றே கல்வெட்டு தெடங்கும். ஆகவே கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு என்பது வேறு, யாண்டு என்பது வேறு என்று தெளிவுபடுத்துகிறார்கள். ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது வரை சரி. ஆனால் கல்வெட்டு அந்த ஆண்டு எங்கே இருந்து தெடங்குகிறது என்று கவலைப்படுவதில்லை. எனவே, எந்த அரசனது ஆட்சியாண்டு தெடக்கம் என்பதைப் பற்றித் தான் அது பேசும்.

ஓர் உதாரணத்திற்கு ஓர் அரசன் ஏதோ ஓர் ஆண்டில் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆட்சி ஏறினான் என்றால் அவனது ஆட்சியாண்டு அந்த நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அந்த ஆட்சியாண்டிலிருந்து இத்தனையாவது ஆட்சியாண்டுகள் கழிந்து ஒரு குறிப்பிட்ட அறம் அல்லது செய்கை செய்யப்பட்டது என்று கல்வெட்டு குறிப்பிடும். ஆகவே அரசனுக்கு அரசன் ஆட்சியாண்டு மாறும். அதாவது தற்காலத்தில் ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஒரு நிதியாண்டு என்று கணக்கெடுக்கப் படுகிறதே அது போல ஒவ்வொரு ஆட்சியாண்டும். இது ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டாக இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழிப் பிராம்மணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதுர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டி பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல்வெட்டிக் கொண்டார்கள்.

இது தான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை. அதன்பின் தொடர்ந்து பல்லவரும், இசுலாமியரும், நாயக்கர்களும், மராட்டியர்களும், பிரஞ்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் என அயலவர் ஆட்சியே நடந்ததால் சக ஆண்டே நிலைத்துப் போயிற்று.

ஒரு கேள்வி: பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆண்டை திடீரென மாற்றலாமா?

ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன. அப்படியானால் முன்னால் தமிழகரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா? அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா? இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்?

சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் தமிழ்ப் பெயர்களை நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் கூறுவது:

கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்?

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்

என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதியவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்பது நச்சினார்க்கினியரின் உரையின் மூலம் அறிய முடிகிறது. அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.

சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெறும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர் வைத்துத் தமிழ் நாட்டில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுக்களில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இது தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு ஆன கதை.


இப்போது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம் ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும். இனி இதை எப்படி அமைப்பது?

போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும்.

இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தைத் தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.

அடுத்து இன்னொரு கேள்வி. ஏன் நச்சினார்க்கினியர் தான் ஆவணியைச் சொல்லி இருக்கிறாரே. மாற்றுவது தான் மாற்றுகிறீர்களே ஆவணி மாதத்திற்கே போவது தானே! இப்போது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் ஒரே நாள் விடுமுறைக்கும் வேட்டு வைக்கிறீர்களே! இப்படி ஒரு கேள்வி எங்கோ ஒரு அரசு அலுவலக மூலையில் இருந்து கேட்கிறது.

விடுமுறையை விடுங்கள். பழைய ஆவணி மாதம் பற்றிய கேள்வி கவனிக்கப்பட வேண்டியதே!

தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன். ஆவணி பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை. அந்த மாதத்திற்குச் சற்று முன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து அடுத்த மாதம் அறுவடை செய்ய முடியுமா? இயற்கை அப்படி இல்லையே. எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே! அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனக்கு நல்ல படியாக நடந்தேறும். இதையெல்லாம் சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இந்த மாதத்தில் தான் இயற்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது. தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.

சங்க நூல்களும் தை மாதத்தையே புகழ்ந்து போற்றுகின்றன. தாயருகா நின்று தவத்தை நீராடுதல் என்கிறது பரிபாடல் பதினொன்றாம் பாட்டு. தையில் நீராடிய தவம்தலைப் படுவாயோ என்று தையைப் போற்றுகிறது கலித்தொகையின் 59-ஆவது பாடல். நறுவீ ஐம்பால் மகளிராடும் தைஇத் தண்கயம் என்று பாடுகிறது ஐங்குறுநூற்றின் 84-ஆம் பாடல். எனவே தை தவ ஆற்றல் மிக்கது என்பது சங்க நூற்கள் கருத்து. அதனால் வள்ளலார் தமிழர்க்கு ஏற்ற மாதம் என்பதோடு தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால் தைம் மாதத்தைத் தேர்ந்தெடுத்து தைப்பூசத்தில் அருட்சோதி தரிசனம் காட்டினார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என்று சம்பந்தரும் தைப்பூசத்தைப் போற்றிப் பாடுகிறார். ஆக உலகியலாலும் அருளியலாலும் இருவகையாலும் மிகச் சிறந்த மாதம் தை. இதுவே ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதற்கு எல்லாத் தகுதியும் உடையது.

தெய்வமுரசு - மாத இதழ்

Saturday, April 14, 2012

மானை வேட்டையாடிவிட்டு வந்துவிடுகிறேன்:- நல்லதங்காள்



சில கதைகளை கேட்டதும் நெஞ்சம் நெகிழும், சில கதைகள் கேட்டுதும் நெஞ்சம் கனக்கும். நல்லதங்காள் கதை கேட்டாள் இரண்டுமே நடக்கும்.

நல்லதங்காள் கதை –

ராமலிங்க ராஜா, இந்திராணி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தாள் நல்லதங்கள். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் நல்லதம்பி. பெற்றோர்கள் இறந்துவிட நல்லதங்காளை வளர்த்தது நல்லதம்பிதான். காலச்சக்கரம் உருண்டு ஓடின. நல்லதங்காளை மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு மணம் முடித்து கொடுத்தார்கள். மிக பிரம்மாண்டமான திருமணம். எல்லாம் முடிந்தபின்பு அண்ணனை பிரிய மனமின்றி கணவன் காசிராஜனுடன் மதுரைக்கு புறப்படுபோனாள் நல்லதங்காள்.

அங்கு நல்லதங்கள் காசிராஜன் தம்பதிக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. செல்வசெழிப்புடன் வளர்ந்துவந்த அவர்களைப் பார்க்க நல்லதம்பி ஒரு முறை கூட மானாமதுரைக்கு வர வில்லை. காரணம் அவனுடைய கொடுமைக்கார மனைவி மூளி அலங்காரி தான். ஆனால் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். அப்போது திடீரென மானாமதுரையில் வானம் பொய்த்துப்போனது. தொடர்ந்து 12 வருடங்களாக மழை இல்லை.

மக்கள் பஞ்சத்தால் எல்லாம் விற்றார்கள். நல்லதங்காளும் தாலியை தவிர எல்லாம் விற்றுவிட்டாள். அப்போதும் வயிறு நிறையவில்லை. சில இடங்களில் பசி கொடுமையால் மக்கள் சாக தொடங்கினார்கள். நல்லதங்காள் தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அண்ணன் அரண்மனைக்கு செல்வதென தீர்மானம் செய்தாள். ஆனால் இதற்கு காசிராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தும் குழந்தைகளுக்காக மனம் இறங்கினான்.

நல்லதங்காளும் ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தான் பிறந்த ஊரான அர்சுனாபுரத்திற்கு வந்தாள். ஊரின் எல்லையில் பிள்ளைகளுக்கு களைப்பு வந்துவிட ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவளை வேட்டையாட வந்த நல்லதம்பி பார்த்தான். தான் வளர்த்த தங்கை வருமையின் கோரபிடியில் சிக்கி சின்னா பின்னமாக இருப்பதை பார்த்து “ உடனே அரண்மனைக்கு போ, அங்கு எல்லாம் இருக்கிறது.நான் மானை வேட்டையாடிவிட்டு வந்துவிடுகிறேன்” என சொல்லி ஓடிப்போனான்.

மூளிக்கு இவர்கள் வருவது தெரிந்து எல்லா உணவுகளையும் ஒளித்து வைத்தாள். பசியால் வாடிய பிள்ளைகள் மூளியின் அறையில் இருந்த மாங்காயையும், தேங்காயையும் ஆளுக்கு ஒன்றாய் எடுத்தன. அதையெல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு அழுகல் நிறைந்ததை கொடுத்தாள் மூளி. சாதம் சமைக்க வீணான பொருட்களையும் ஓட்டைப்பானையையும் தந்தாள். நல்லதங்காள் அதை வைத்தே கஞ்சி காச்சினாள். ஆனால் அதையும் தட்டிவிட்டாள் மூளி. கீழே வழிந்த கஞ்சியை அள்ளிக்குடித்தார்கள் ஏழு பிள்ளைகளும்.

அந்தக் காட்சியை பார்த்ததும் சகித்துக்கொள்ள முடிய வில்லை தாயால். எல்லா குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பாலுங்கிணற்றிற்கு அருகே போனாள். ஒவ்வொறு குழந்தையாக கிணற்றில் வீசிக்கொன்றாள். பின்பு தானும் விழுந்து இறந்தாள். வேட்டை முடித்து வந்தவனுக்கு அக்கம் பக்கத்தினர் நடந்ததை சொல்ல நல்லதங்காளை தேடி ஓடினான். அவள் ஒடித்துப்போட்ட ஆவாரம் செடி பாதை சொன்னது, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளுடன் அவள் இறந்து போனதை பார்த்தான். காசிராஜன் ஈட்டியால் தன்னை குத்திக்கொண்டு மாண்டு போனான். நல்லதம்பி மூளியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

வறுமைக்கு இரு குடும்பத்தையே பலி கொடுத்ததை இன்னமும் கிராமத்து மக்கள் கதைகளாக சொல்லி வருகிறார்கள். வறுமையின் சின்னமாக நல்லதங்காள் இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

நன்றி:- பிறைசூடன் 

Friday, April 13, 2012

கிறுக்கு பய புள்ளைக்கு புத்தாண்டா ?



இந்தமாதிரி விவரங்கெட்ட முதலமைச்சர் இருந்தால் மக்களும் மாக்களாகத்தானே இருப்பார்கள். அந்தக் காலத்தில் மனிதன் அரை நிர்வாணமாக அவ்வளவு ஏன் ஆடையில்லா ஆதிவாசியாகவே இருந்தான். அது காலங்காலமாக இருந்தது என்பதற்காக இன்றைக்கும் மனிதன் அதனையே பின்பற்றுகிறானா என்ன..? இவர்களுக்கெல்லாம் சுய அறிவு என்பதே இருக்காதா?. அறுபது ஆண்டுகள் எனச் சொல்லப்படும் அட்சய முதல் பிரபவ வரையிலான எதுவுமே தமிழ் இல்லை. அப்படி இருக்க அவைகள் எப்படி தமிழ் ஆண்டுகளாகும்? இதற்கு பதில் கூற இதுவரை எவரும் பிறந்துவரவில்லை போலும்? இதை கருணாநிதி செய்தார் என்பதற்காகவே பலர் எதிர்க்கின்றனரே தவிர இதன் உள்ளர்த்தம் என்ன என்பதை எவரும் சிந்திப்பதில்லை.


ஆக பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது. · 60 ஆண்டு சுழற்சி வராது · தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம் · தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. · தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்கு நினைவாக அமையும் · தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச்சிறப்படையும் ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆதலால் தைப்பொங்கல் நாளான தைத்திங்கள் முதல் நாள் - திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டு நாளாகும் முதல்வர் ஜெயலலிதா சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டென்றோ இந்துக்களின் ஆண்டுப் பிறப்பு என்றோ கொண்டாடலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.

புவி தனது அச்சில் சுழலும் போது ஞாயிறு – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுப்பகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் (wobble) ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒரு நாள்) ஆகக் கூடிவிடும். இந்த பின்னேகலை (Precession of Equinoxes) நட்சத்திரத்தை வைத்து ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இந்தப் பின்னேகலைக் கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அயனாம்ச வேறுபாடு திருத்தப்படவில்லை. இதனால் பருவகாலங்கள் 24 நாள்களால் பிந்திப் போகின்றன. அயனாம்ச வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப் பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான காலங்களில் கொண்டாடப் படுகின்றன. ஒரு கதைக்கு ஜெயலலிதா இன்னும் 15,000 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் ஞாயிறு மேட இராசி அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாள் அய்ப்பசி 14/15 ஆக இருக்கும். பருவம் வேனில் காலத்துக்குப் பதில் கார் காலமாக இருக்கும். பழைய பஞ்சாங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சித்திரை முதல்நாள்த்தான் வேனில் காலத்தின் தொடக்கம், அதுதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று வாதாட முடியுமா?

சித்திரையில் வருடம் பிறப்பது என்பது ஏனோ மனதிற்கு மகிழ்வழிப்பதாக இல்லை.. காலம் காலமாக சித்திரையில் வருடப்பிறப்பு கொண்டாடப் படுகிறது.. அதை மாற்ற கூடாது என்றுதான் கூக்குரல் வருகிறதே தவிர.. ஏன் சித்திரையில் வருடம் பிறக்க வேண்டும் என்ற விளக்கம் "ஆஹா..அருமை" என்று சொல்லுமளவுக்கு எந்த வரலாற்று பதிவுமில்லை.. சித்திரை என்பது வேனிலின் வருகை... தமிழகத்து வேனில் சுகமா? அடுத்தது.. சித்திரையில் குழந்தை பிறக்க கூடாதாம்.. பிறந்தால் அந்த குழந்தைக்கும் பெற்றோருக்கும் உறவு சுமுகமாக இருக்காதாம் அல்லது பெற்றோரில் ஒருவர் உடல் நலம் ஏதாவது வகையில் குறை படுமாம்.. குழந்தை பிறந்தால் கேடு.. வருடம் பிறந்தால் சிறப்பா..? ஆனால் சித்திரையில் குழந்தை பிறக்க கூடாது என்ற முன்னோர்களின் ஐதீகம், தொடரப்போகும் மூன்று மாத வேனில் வெப்பத்தை புதிதாய் பிறக்கும் பிஞ்சு உடம்பு தாங்காது இறக்க நேரிடலாம் அல்லது உடல் நலம் குறை பட்டு பலவீனமான எதிர்காலத்தை அடைய நேரிடலாம் என்பதை கணித்துத்தான்.. இதை மருத்துவ ரீதியாக சொன்னால் நம்மவர்கள் நம்ப மாட்டார்களே.. அதனால்தான் ஐதீகமாக்கினார்கள்.... தம்பதிகளை ஆடி மாதம் "கூட" விடாமல் தடுத்தனர்.. ஏனெனில் ஆடியில் இருந்து பத்தாவது மாதம் சித்திரை.. சரி சித்திரையை விட்டால் வேறெந்த மாதம் வருட பிறப்பிற்கு சிறப்பு? பல இலக்கியங்கள் தை மாதம் சிறப்பு நிகழ்வுகளை சொல்லுகின்றன.. மேலும் நம் முக்கிய உணவான நெல் விளைந்து அறுவடை நடந்து புது நெல் வீட்டுக்கு வந்து சேரும் மாதம் தை மாதம்.. உழவர் திருநாள்.. அனேகமாக அனைத்து இல்லங்களிலும் வீடு கண்ட நெற்களை விற்று பணம் சேர்த்து மன மகிழ்வோடு இருக்கும் மாதம்.. தை மாதம் வருடப்பிறப்பாக இருக்க இன்னும் என்ன தகுதி வேண்டுமென்று புரிய வில்லை.. ஏன் சித்திரையில் வருடம் பிறக்க வேண்டும்? ஆண்டாண்டு காலம் கொண்டாடுகிறோம் என்ற வழக்கமான வாதத்தைத் தவிர, வேறேதும் வியத்தகு வரலாற்று அல்லது விஞ்ஞான ஆதாரத்தை யாரவது எனக்கு தெரிவித்தால் என்னுடைய இந்த குழப்பம் தீருமென எதிர் பார்க்கிறேன்....


Wednesday, April 11, 2012

வாழ்க்கை என்றால் என்ன ?

வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள மூன்று இளவரசர்கள் ஞானி ஒருவரைத் தேடிச்சென்றார்கள். அவர்களை நன்கு வரவேற்று அமரச் செய்த ஞானி மூன்று கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து வைத்தார்.
ஒன்று தங்கக்கோப்பை, இரண்டாவது வெள்ளிக்கோப்பை, மூன்றாவது களிமண் கோப்பை.

என்ன செய்வது என்று அறியாது திகைத்த இளவரசர்கள் ஞானியிடமே கேட்டார்கள். இப்படி மூன்று விதமாக வைத்தால் நாங்கள் என்ன செய்வோம் எல்லோரும் தங்கக் கோப்பையைத் தானே எடுக்க நினைப்போம். ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டனர்.


ஞானி சொன்னார்,

மூன்று கோப்பைகளும் தோற்றத்தில் வெவ்வேறாகத் தெரியலாம். ஆனால் மூன்று கோப்பைகளிலும் உள்ளிருப்பது ஒரே தேநீர்தான்.

அந்த தேநீர் போன்றதே வாழ்க்கை. புறத்தோற்றங்களுக்கு மயங்குவோர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது தவிக்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.

எனது வகுப்பில் வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு, எனது மாணவர்களில் மூவரை எழச்செய்து அவர்களிடம் கேட்டேன்,

எனது வீட்டுக்கு வரும் உங்களுக்கு தங்கம், வெள்ளி, களிமண் என வெவ்வேறு கோப்பைகளில் தேநீர் தந்தால் நீங்கள் எந்தக் கோப்பையை எடுப்பீர்கள் கேட்டேன் இரண்டு மாணவர்களும் நான் முதலில் எடுத்தால் தங்கக் கோப்பையைத் தான் எடுப்பேன் என்றனர். மூன்றாவது மாணவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்,

ஐயா நான் எந்தக் கோப்பையில் தேநீர் அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பேன் என்று எதிர்பாராத பதிலைச் சொன்னார். வியந்து போனேன்.

வாழ்க்கையின் உண்மையும் கூட அதுதான். வாழ்க்கைத் தேவைக்கு மட்டுமா செல்வம் சேர்க்கிறோம். நிறைவான செல்வத்தைத் தானே அனைவரும் விரும்புகிறோம்.


இழந்த நாட்கள்.

ஜகாங்கீர் – இளமையில் ஏறு போல் நடக்கும் இளையவர்கள் வயதானபின்னர் ஏன் கூனிக் குறுகி பூமியைப் பார்த்தவாறு நடக்கிறார்கள்?

நூர்ஜகான் – தாங்கள் இழந்த நாட்கள் பூமியில் எங்காவது புதைந்து கிடக்கிறதா என்று தேடவே அவ்வாறு நடக்கிறார்கள்.!

நீரே விழுந்தால் நான் என்ன செய்வேன்?

கம்பரும் சோழ மன்னரும் ஆற்று நீரில் கால் வைத்து நடந்தபோது கம்பர் ஆற்று நீரை அள்ளிக் குடித்தார். அப்போது,

சோழன் – கம்பரே.. என் காலில் விழுந்த நீரைத்தானே நீங்கள் அள்ளிக்குடிக்கிறீர்கள்?

கம்பர் – நீரே என்காலில் விழுந்தால் நான் என்ன செய்வேன் மன்னா?

(கம்பர் நீரே என்று சொன்ன சொல் இருபொருளுடையது. நீரே என்று நிலத்தில் செல்லும் நீரையும் நீரே என்று எதிரே இருக்கும் சோழனையும் குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும். கம்பர் சொன்ன எதிர் பாராத பதிலையும் தமிழின் நயத்தையும் எண்ணி மகிழ்ந்தான் சோழன்.)
===========================================
அறிஞர் ஆல்டன் குள்ளமானவர். அவரைப் பார்த்து அவருடைய வழக்கறிஞராக இருந்த நண்பர் ஒருவர் சொன்னார்.

“ உங்களை எனது கோட்பாக்கெட்டில் தூக்கி வைத்துக்கொள்ள முடியும்“ என்று.
அதற்கு ஆல்டன் அவரைப் பார்த்து,

” ஓ அப்படியென்றால் உங்கள் தலையைவிட கோட் பாக்கெட்டில் தான் மூளை அதிகமாக இருக்கும்” என்றார்.
====================================




விருந்தினர் மாளிகை என்ன விலை?
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய பெருமை வள்ளல் அழகப்பச்செட்டியாருக்கு உரியதாகும். அவர் ஒரு முறை மும்பை சென்றபோது, ரிட்சு என்னும் (ஓட்டலுக்கு) விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருக்கிறார்.

அதன் உரிமையாளர், அழகப்பச்செட்டியாரின் எளிய தோற்றத்தைப் பார்த்து இங்கு அறை காலியாக இல்லை என்றாராம். இவர் தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் இங்கு அறைகள் உள்ளன என்பதை உணர்ந்த அழகப்பச் செட்டியார். அந்த விருந்தினர் மாளிகை உரிமையாளரைப் பார்த்து,

இந்த மாளிகையில் எத்தனை அறைகள் உள்ளன? என்றாராம்.

உரிமையாளரோ,

நீர் என்ன இந்த ஓட்டலை விலைக்கு வாங்கப் போகிறீரோ? என்றாராம்.

அதற்கு ஆம் என்ன விலை என்று அழகப்பர் கேட்க. உரிமையாளர் சில லட்சங்கள் என்று சொல்ல, அடுத்த நிமிடமே தம் காசோலையைக் கிழித்துக் கொடுத்து அந்த விருந்தினர் மாளிகையை விலைக்கு வாங்கிவிட்டார் அழகப்பர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

நன்றி:- மல்லிகை

Monday, April 9, 2012

ஆண்டவன்-ஆள்பவன் - WHAT வேறுபாடு






..''.''ஆண்டவனா இருப்பதில் லாபம் தான். ஏனென்றால் எந்தக் குறையை மக்கள் சொன்னாலும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம், படுத்திருக்கலாம், தூங்கிக் கொண்டிருக்கலாம், திருவரங்கத்திலே போய் ஆண்டவனிடத்தில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் முறையிடுகிறார்களே, '' அங்கே ரங்கநாதர் எழுந்து என்ன செய்தார்?' என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? ஆண்டவனுக்குள்ள சவுகரியம் ஆள்பவனுக்குக் கிடையாது. அதனால் தான் ஆண்டவனாக இருக்க விரும்பவில்லை. ஆள்பவனாகவே இருந்து மக்களுக்கு அன்றாடம் பணியாற்றுவதற்கு, அவர்களுக்குச் சேவை செய்வதற்கு விரும்புகின்றேன். ஆண்டவன் என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற கூட்டம் இருக்கின்றது. அந்தக் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, வீழ்த்தி அதில் யாரும் ஏமாறாமல் இருக்கின்ற பகுத்தறிவுப் பிரச்சாரத்தை நாம் தொடர்ந்து செய்யவேண்டுமென்று இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''''


........முத்தமிழ் காவலர் டாக்டர். கலைஞர்.மு.கருணாநிதி

(வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் 27.11.2010 சனி மாலை மக்கள் வெள்ளமெனத் திரண்ட பொதுக் கூட்டத்தில் ''முதலமைச்சர்'' ''கலைஞர்'' அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை! யிலிருந்து ஒரு சிறு பகுதி..)


கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான். கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள். பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ? தெரியாது எந்த குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில் தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு ஒரு குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால் நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள் கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம் .இது அனைவருக்கும் தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள், என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி கொள்ளமுடிவதில்லை. கடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ! மனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ கடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான். மனிதர்கள் மிகவும் புத்திசாலிகளல்லவா. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை! நம்பிக்கை தான் கடவுள்! தன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை) தன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை… ஏமாறாதீர்கள்: நம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்! ஒ புரிந்து விட்டது. நீங்கள் கடவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்க வாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல காரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள். மனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, அன்பே சிவம் என புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை. காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் அன்பை உணரும் வெளிபடுத்தும் ஞான கண்களை மறைக்கிறது
நன்றி -யுவா 

Sunday, April 8, 2012

அப்பாவி மாணவர்களின் குற்றமா?

இது புதிய பராசக்தி வசனம் நான் மிகவும் ரசித்தது. ஈமெயிலில் வந்தது.எழுதியவருக்கு பாராட்டுக்கள்.

நான் ஏசி அறையில் படித்தாலும், ஓசிக்கு சாப்ட்வேர் வாங்கியிருக்கிறேன். விண்டோஸ் படிப்பதற்காக வீட்டை விற்றிருக்கிறேன். 
எனக்கு Linked list புரியவில்லை, 
ஆனால் என் பணத்தோடு மட்டும் லிங்க் செய்த listஐ சொல்கிறேன். இரவெல்லாம் படித்தாலும் யுனிக்ஸ புரியவில்லை, 
ஆனால் டக்கென்று புரிந்துகொண்டேன் டாஸையும்,
கம்ப்யூட்டர் பீல்டும் இப்பொழுது டக்(DUCK) எனப் புரிந்து கொண்டேன்.

கேளுங்கள் என் ஸ்டோரியை எம் எஸ் WORDல் டைப் செய்வதற்கு முன்....தயவுசெய்து கெளுங்கள். தமிழ் நாட்டில் இந்த திருநெல்வேலியில் படித்தவன் நான். படிக்க ஒரு ஊரு..........
ப்ராஜக்ட் செய்ய ஒரு ஊரு.......
கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்டின் தலையெழுத்துக்கு....
நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆம், நெல்லையில் படித்த நான்....
ஐ டி பீல்டு அமுங்கிப் போயிருக்கும் சென்னைக்கு ப்ராஜக்ட் செய்யப் போனேன். சென்னை என்னை ரீ சைக்கில் பின் போல ஆக்கியது.
டாஸ் படிக்க கூட வழியில்லாத எனக்கு ASP யில் ப்ராஜக்ட் செய்யச் சொன்னான் ஒருவன்!

இருக்கும் சைட்டையே ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை,
இந்த லட்சனத்தில் வெப்சைட் ப்ராஜக்ட் டாம்!
என் பெயரோ ராம், ஆம் ராம்(RAM), GB ஆதிகம் உள்ள பெயர்,
ஆனால் VB ப்ராஜக்ட் செய்யப் போய்ச் சென்னையில் ஓபி அடித்து திரிந்தேன். 

நான் நினைத்திருந்தால்.........
என் பாவாவிடம் சொல்லி ஜாவா ப்ராஜக்ட் வாங்கியிருக்கலாம் டம்மி ப்ராஜக்ட்டைக்கூட ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விட்டிருக்க முடியும்.ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஐ டி பீல்டு!
லைனக்ஸ் என்று டாசைக் கற்றுத்தந்தான் ஒரு கம்ப்யூட்டர் கடைக்காரன், ஓடினேன்...........

VB பழைய பதிப்பை பக்குவமாய் கற்று தந்தான் ஒரு FACULTY, ஓடினேன்..........
டம்மி ப்ராஜக்ட் தருவதற்காக சாப்ட்வேர் கம்பனிககாரன் விரட்டினான், ஓடினேன்...........

ஆடித் தள்ளுபடியில் CD வாங்கி தந்தான் ஒருவன் ஓடினேன்............
ப்ராஜக்ட் வாங்கலையொ ப்ராஜக்ட்னு கூவி கொன்டிருக்கும் கூட்டதை தாண்டி ஓடினேன்............

வெப்சைட்டில் விரித்து வைதித்ருக்கும் வலையைத் தாண்டி ஓடினேன்............, ஓடினேன்............ஓடினேன்............

மதர் போர்டை தாண்டி மணிக் காணக்காய் ஓடினேன்............
ஜாவா, வீபீ, ஒரக்கில் என்று ஏலம் விடுகின்ற கம்ப்யூட்டர் சென்ட்ர்களை கடந்து ஓடினேன்.........

எத்தனை சென்டரடா அதில் தான் எவ்வளவு தெண்டமடா, ஓடினேன்......,ஓடினேன்..........

இப்பொழுதுள்ள IT பீல்டை போலவே தடுமாறித் தடுமாறி ஓடினேன்..........
அங்கே, வைரஸ் இருந்ததால் திரும்பி விட்டேன்,
பாவம் என் வாழ்கை ஆனது ஒரு கூவம்,எனக்கு ஐடியா கொடுதிருக்க வேண்டும், ரியல் ப்ராஜக்ட் தந்திருக்க வேண்டும் இன்று சட்டதை நீட்டுவோர், இன்று IT பீல்டில் இருப்போர்.செய்தார்களா ...?

ப்ராஜக்ட் செய்ய விட்டார்களா இந்த ராமை(RAM)?எனக்கு டம்மி ப்ராஜக்ட் தந்தது யார் குற்றம் ?
செலவு செய்து சென்னை சென்ற என் குற்றமா? 
இல்லை டம்மிக்கும் ரியலுக்கும் வித்தியாசம் தெரியாத சாப்ட்வேர் கொள்ளையர்களின் குற்றமா?

வளர வேண்டிய வெப்சைட்டில் ஆபாசங்கள் காட்டுவது யார் குற்றம்..?
பில் கேட்ஸின் குற்றமா? 
இல்லை பில் போடத்தெரியாதவர்கள் எல்லம் ப்ராஜ்க்ட் செய்கிறார்களே அவர்களின் குற்றமா?

ஒரு மொழியையும் ஒழுஙகாய்ப் படிக்காமல் பயோடேட்டாவில் நிரப்புவதற்காக C,C++,ஜாவா, வீபீ,ஒராக்கில், ASP, என்று அடுக்கிகொன்டே செல்வது யார் குற்றம்? 
அப்பாவி மானவர்களின் குற்றமா?

இல்லை எங்கள் அப்பாவின் பனத்தை அந்நியாயமாய்ப்பிடுங்கிக் கொண்டு  FACTORIAL,FIBONACCI,QUADRATIC EQUATION, PRIME NO,POLYNDROME இது தான் ப்ரோகிராம் என்று சொன்ன கம்ப்யூட்டர் சென்டர்களின் குற்றமா?

இந்த குற்றங்கள் களையப்படும் வரை என்னை போன்ற ராம்கள்(RAM) டம்மி ப்ராஜக்ட்டைதான் ரியல் ப்ராஜக்ட் என்று ரீல் விடுவார்கள்