தொகுப்புகள்

Search This Blog

Saturday, May 23, 2020

இவர் இல்லாமல் இருந்திருந்தால்...

பாக்யராஜூம்  அவரது நண்பரும் எல்டாம்ஸ் ரோடு 92 c ரூமில் தங்கி இருந்தார்கள். அந்த நடிகர் நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார்.

பாக்யராஜ் அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். பாக்யராஜின் நண்பர் அப்போது சின்னச்சின்ன கேரக்டர்களில் சினிமாவிலும் தலைகாட்டிக் கொண்டிருந்தார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை பாரதிராஜா ஆரம்பிக்கிறார். அதில் ஹீரோயின் ராதிகா. ஹீரோ சுதாகர். ராதிகாவின் அக்காவாக நடிக்கும் காந்திமதி, அன்றைக்கு மிகவும் பிஸியான நடிகை. காந்தமதிக்கு கணவனாக யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு எழுந்தது.

அது மிகவும் முக்கியமான கேரக்டர். படத்தின் வில்லன் கேரக்டர். தன்னுடைய ரூம் மேட் அந்த கேரக்டரில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பாக்யராஜ் முடிவு செய்கிறார். இயக்குநர் பாரதிராஜாவிடம் சொல்கிறார். அந்தப் படத்தின் வினியோகஸ்தர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண். அவரும் பாரதிராஜாவிடம் அந்த நடிகரையே சிபாரிசு பண்ணியிருக்கிறார். 

யாரு சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளாத பாரதிராஜா, “போய்யா.. அந்தாளுக்கு தலையில முடியே இல்லை. ஆளும் நல்லாயில்ல” என்று மறுத்துவிட்டார். இத்தனைக்கும் பாரதிராஜாவின் முதல் படம் ‘16 வயதினிலே‘வில் அந்த நடிகர் நடிச்சிருந்தார்.

பாக்யராஜ், “விக்கு வச்சிக்கலாம்” என்று சமாதானம்  சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா, அந்த நடிகரை காந்திமதி உடன்  நடிக்க வைத்து  டெஸ்ட் சூட் பண்ணி காட்ட சொல்லியிருக்கிறார். பாக்யராஜ் தன் நண்பரை அழைத்து அவர் தலைக்கு தோதான விக் வைத்து, டைலாக் சொல்லி குடுத்து, டெஸ்ட் சூட் எடுத்திருக்கிறார்கள். அதை ப்ரிவியூ தியேட்டரில் பாரதிராஜாவுக்கு போட்டும் காண்பித்திருக்கிறார்கள்.

ஷோ முடிந்து பாக்யராஜ் நேராக  ரூமுக்கு சென்றிருக்கிறார். ரூமுக்கு வெளியிலே தெரு முக்கில் பாக்யராஜ்க்காக அவரது நண்பர் காத்துக் கொண்டிருந்தார். பாக்யராஜைப் பாத்ததும் ஓடி வந்து கையைப் பிடிச்சிக்கிட்ட அவர், “என்ன ஆச்சு, டைரக்டர் என்ன சொன்னாரு?”  என்று படபடவென கேட்டிருக்கிறார். 

பாக்யராஜ், “டைரக்டர் ஒத்துக்கிட்டாரு. நீதான் காந்திமதிக்கு புருஷனா நடிக்கப் போற’’ என்று சொல்லியிருக்கார். உடனே,  அந்த நடிகர் தன் கையோட வைத்திருந்த கற்பூரத்தை எடுத்து பூட்டியிருந்த தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் வாசலில்  கொளுத்தி, கீழே விழுந்து கும்பிட்டிருக்காரு. கும்பிட்டு எழுந்தவர் கண்களில்  தாரை தாரையாகக் கண்ணீர்.

அதன் பின்பு அந்தப் படத்தில் காந்திமதிக்கு புருஷனாக வில்லனாக நடித்த கவுண்டமணிக்கு அந்தப் படத்திலிருந்து நட்சத்திர அந்தஸ்து கிடைக்கத் தொடங்கியது.  பெரிய ஸ்டார் ஆனார். இதெல்லாம் அம்மன் அருளாலதான் நடந்தது என்று கவுண்டமணி இன்று வரை நம்புகிறார். 
கோவை மாவட்டம் வல்லக்குண்டாபுரம் கிராமத்தில் திருமூர்த்தி மலைச்சாரலின் பிறந்த சுப்பிரமணி சின்ன வயதில் வாய்ப் பேச முடியாதவராக இருந்திருக்கிறார். ‘வீட்டுக்கு ஒரே ஆம்பளப் பையன் இப்படி ஆகிப்போச்சே’ என்று அப்பா அம்மா கவலைப்பட்டிருக்கிறார்கள்.

சுப்பிரமணியின் அக்கா மயிலாத்தாள் தம்பி மேல் இருந்த பாசத்தால் போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. சகோதரியின் வேண்டுதல் சுப்பிரமணியை பேச வைத்தது. அது மட்டும் நடக்காமல் போயிருந்தால் நமக்கு கவுண்டமணி என்ற மகா கலைஞன் கிடைக்காமலேயே போயிருப்பார்.

கிராமத்தில் எல்லோரும் நாடகம் பார்க்க ஆசைப்பட்ட காலத்தில் சுப்பிரமணி மட்டும் நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்டான். சின்ன வயதிலேயே சென்னை வந்துவிட்ட கவுண்டமணிக்கு இங்கே பாக்யராஜின் நட்பு கிடைத்தது.  அதன் மூலமாக பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்தில், “பத்த வச்சிட்டீயே பரட்டை” என்ற வசனம் பேசி, எல்லாரையும் திரும்பிப் பாக்க வைத்தார்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா வருகைக்கு முன்பு வரை எல்லோரும் உரைநடைத் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.  பேச்சு வழக்கு மொழி தமிழ்ப் படங்களில் ஒலிக்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே கொங்கு வட்டார வழக்கைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்தவர், கவுண்டமணிதான். கோவையைச் சேர்ந்த இயக்குநர் சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்‘ படத்தில் “அடேய் கப்லிங் தலையா? இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா ஒரு நல்லவரு, ஒரு வல்லவருனு ஊருக்குள்ள இருக்கற அம்மணி அக்காகிட்டேல்லாம் போய் சொல்லோணும்” என்று பேசி, கொங்கு வட்டார வழக்கை சினிமாவுக்குள் கொண்டு வந்தார். 

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பேசப்பட்ட வட்டார வழக்கும் கொங்கு மண்டல வழக்காகத் தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அதற்கு அச்சாரம் போட்டவர்கள் இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர்தான். ‘நாட்டாமை‘ படத்தில் அவரது கொங்கு தமிழ் உச்சத்தைத் தொட்டது.  பெண் வேடத்தில் கவுண்டமணி , “யேங்கோ, நம்ம ரெண்டு பேர்த்துக்குப் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?”  என்று கேட்கும்போது கோயமுத்தூரையே நம் கண் முன்னால் வந்து நிறுத்தியிருப்பார்.

பாக்கியராஜ் சாரோட ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில், “சரோஜா குப்பையால கொட்ற? கொட்டு, கொட்டு” என்று வழிந்து கொண்டே பேசி அடுத்த கட்டத்துக்கு போயிட்டாரு. அதன்பின்பு இயக்குநர் சுந்தர்ராஜன் வந்தார். அவர் கவுண்டமணியை அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டுப் போனார் என்று  சொல்வதைவிட, தூக்கிக் கொண்டு போனார் என்றுதான் சொல்ல வேண்டும். 

இன்று நடித்துக் கொண்டிருக்கிற எல்லா நடிகர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டப் பெயர் வைத்துக் கொல்(ள்)கிறார்கள். புதுசா நடிக்க வருகிறவர்கள் கூட முதல் படத்துலயே அடைமொழி வைத்து அட்ராசிட்டி செய்கிறார்கள். காமெடி நடிகர்கள் கூட பட்டப் பெயர் வைத்துக் கொள்வது வழக்கமாவிட்டது. ஆனால், கவுண்டமணிக்கு இதுவரைக்கும் எந்தப் பட்டமும் கிடையாது. அவரிடம்  பட்டப் பெயர் வைப்பது பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், “ஏன்டா சார்லி சாப்ளினுக்கே பட்டப் பெயர் கிடையாது. நடிப்புல நாம என்ன அவரை விடவா சாதிச்சிட்டோம். போங்கப்பா” என்று சொல்லியிருக்கிறார். அதுதான் கவுண்டமணி!

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமலுடன் நடிக்கும் போதும் கூட  கவுண்டர் தனக்குரிய பாணியை மாற்றிக்கொண்டது இல்லை. ‘மன்னன்‘, ‘பாபா‘ படங்களில் ரஜினியை கவுண்டர் சகட்டுமேனிக்குக் கலாய்ச்சிருப்பார். 

‘சிங்காரவேலன்‘, ‘இந்தியன்‘ படங்களில் கமலையும், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் என உடன் நடித்த எல்லோரையும் கலாய்ப்பதில் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். கவுண்டமணியைத் தவிர வேறு யாரும் இதுபோல் கலாய்த்திருந்தால் அந்த ஹீரோக்களின் ரசிகர்கள் ‘காண்டா‘கி இருப்பார்கள். அதுதான் கவுண்டமணியின் சக்சஸ்.

கவுண்டமணியின் காமெடி இல்லாம இருந்திருந்தால் நிறைய ஹீரோக்கள் அப்போதே காணாமப் போயிருப்பார்கள். அது சம்பந்தப்பட்ட அந்த நடிகர்களுக்கும் நன்றாகத் தெரியும்.  

கவுண்டமணி பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்துல நிறையப் படங்கள் இளையராஜாவின் இசைக்காகவும், கவுண்டமணி-செந்தில் காமெடிக்காகவும் ஓடியிருக்கிறது. ‘கரகாட்டக்காரன்‘, ‘சின்னத் தம்பி‘ படங்கள் அதற்கு நல்ல உதாரணங்கள். தமிழ்ச் சினிமா வரலாற்றில் வசூலில் சாதனை படைச்ச இந்த இரண்டு படங்களிலும் இளையராஜாவும் கவுண்டரும் முழு திறமையைக் காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருபபார்கள். மணிரத்னத்தின் ‘பகல்நிலவு‘, ‘இதயக்கோயில்‘, ஷங்கரின் ‘ஜென்டில்மேன்‘, ‘இந்தியன்‘ படங்களின் காமெடி இன்றைக்கும் ‘வைரலா‘கிக் கொண்டிருக்கிறது.

பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களுடைய ஆரம்ப காலப் படங்களில் கவுண்டமணியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தப் பிறகு கவுண்டமணியை தவிர்க்கவே செய்திருக்கிறார்கள்.

இதற்கு, படத்தின் கதைக்கு முக்கியத்துவம் தராமல் தன் பாணியிலேயே இவர் நடிப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் நடிகர்கள் ராமராஜன், சத்யராஜ்,  அர்ஜூன் ஆகியோர் தொடர்ந்து கவுண்டமணியைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தன்னைப் பார்க்க வேண்டும் என்றால், ரசிகர்கள் தியேட்டருக்குத்தான் வர வேண்டும் என்பதில் கவுண்ட மணி எப்பவும் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால்தான் மீடியாவில் பேட்டி கொடுப்பதையோ தலைகாட்டுவதையோ அவர் விரும்பவில்லை. நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டதில்லை. இந்த விஷயத்தில் இவர் பாணியைத்தான் தல அஜித் இப்போது பின்பற்றி வருகிறார்.

கவுண்டமணி நகைச்சுவை என்ற பெயரில் சக மனிதர்களின் உருவத்தை கேலி செய்வதையும், பெண்களை இழிவுப்படுத்துவதையும் இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் கவுண்டமணி என்ற மகா கலைஞனை பயன்படுத்திக் கொள்ள தமிழ்ச் சினிமா தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும்.  இயக்குநர் வி.சேகரின் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்‘, ‘பொறந்த வீடா புகுந்த வீடா‘ போன்ற படங்களில் கவுண்டமணி ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்திருப்பார். 

கேரளாவில் இப்படியொரு கலைஞன் பிறந்திருந்தால், அவர்கள் இவரை வெறும் காமெடி நடிகராக மட்டுமே பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை ஆதங்கத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

கவுண்டமணியின் பெரும்பாலான படங்களுக்கு வீரப்பன் என்பவர் டிராக் எழுதியிருப்பார். நிச்சயமாக கவுண்டமணியின் வெற்றியில் இவருக்கும் பெரும் பங்குண்டு. ‘உதயகீதம்’ படத்தில கவுண்டமணிக்கு மாமனார் கேரக்டரில் போலீஸாக வீரப்பன் நடித்திருப்பார். 

 -ஊ இஸ் த டிஸ்டபென்ஸ்?  
-நான் ரொம்ப பிஸி
-காந்த கண்ணழகி
-அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 
 -நாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா 
 -அய்யோ ராமா! ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் சேர வைக்குற
-பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா, லிவருக்கு ரொம்ப நல்லது
-இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துடு. உனக்குப் பின்னால வர சந்ததிகள் அதைப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும்.

இப்படி கவுண்டமணியின் பஞ்ச் டைலாக்குகளை சொல்லிக்  கொண்டே போகலாம். 

இந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் கூட பஞ்ச் டைலாக்குகள் பேசி இருக்க மாட்டார்கள்.

கவுண்டமணியின் புகழ் பாடும் இந்தக் கட்டுரையை யாராவது அவரிடம் சென்று காட்டினால், 
அவர் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி!‘

Vetri

No comments:

Post a Comment