Sunday, August 5, 2018

பாரம்பரிய பிரசவம் எப்படி நடந்தது ?

இந்திய மாதா - காதரீன் மேயோ

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து , தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத்  துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது. இந்தியாவில் அந்த புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது...

1. பிரசவம் என்பது ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வு. வழக்கம் போல தீட்டால் ஏற்ப்படும் கொடுமைகள் அனைத்தும் நடந்தன.

2. பிரசவம் பார்ப்பது மருத்தவச்சி என்ற ஒரு தனி சாதி பெண்கள். தீண்டப்படாத சாதியினர்.

3. பிரசவம் ஒரு தீட்டான நிகழ்வாய் இருப்பதால், அது ஒரு தனியான, ஒதுக்குப்புறமான, உபயோகமற்ற, வெளிச்சமும் காற்று வசதியும் அற்ற ஒரு அறையில் தான் நடக்கும். தீட்டு காரணமாய் பெரும்பாலும் பழைய அழுக்கான துணிகளே பயன்படுத்தப் படும்.

4. பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள் பாரம்பரியமாக  தாங்கள் கேள்விப்பட்ட முறைகளையும், அப்போது தங்களுக்கு உதிக்கும் திடீர் யோசனைகளையும் பயன்படுத்தியே பிரசவம் பார்த்தனர்.

5. வலி வந்து நேரமாகி விட்டால் தங்கள் கைகளை உள்ளே விட்டு சிசுவின் கையோ காலோ எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து வெளியில் இழுப்பர். ஒருவரால் முடியாவிட்டால் இரண்டு மருத்துவச்சிகள் முயல்வர். நிச்சயம் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒன்றாவது போய் விடும்.

6. வலி வந்து தாமதமாகி விட்டால் பெண்ணை சுவர் ஓரமாய் நிறுத்தி வைத்து மருத்துவச்சி  ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் முட்டுவர். அல்லது கைகளால் குத்துவர்.

7. பிரசவம் முடியும் வரையிலும் பெண்ணுக்கு எந்த ஆகாரமும் இல்லை. வலி நான்கு நாட்கள் இருந்தாலும் ஆகாரம் இல்லை.

8. பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக்  காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

9. தீட்டு காரணமாய் பிரசவம் அன்னியர் கண் படாமல் இருட்டறையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் நடக்கும். மூடிய அறையில் புகை நிறைந்திருக்கும் சமயத்தில் அன்னியர் யாராவது பார்த்து விட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவச்சி உடனே சில துர்நாற்றம் தரும் புகையை உண்டாக்குவாள். துர்நாற்றம் தீட்டை போக்கி விடும்.

10. பிரசவத்தில் பெண்ணின்  உயிர் போய் விடும் என்ற சந்தேகம் வந்தால் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூள் நிரப்பப்படும். இறந்த பின் அவள் பேயாக மாறி வழி கண்டுபிடித்து வந்து பழி வாங்கலைத் தடுக்கவே இந்த முறை.

11. அதே போன்று பேயாய் மாறி பழி வாங்கலைத் தடுக்க பெண்ணின் கைகளை தரையில் வைத்து ஆணியடித்தலும் உண்டு. சற்று பிழைக்க வாய்ப்புள்ள பெண்களும் இதனால் இறந்து போயிருப்பார்.

12. தொப்புள் கொடி அறுக்க இரும்புத் தகடோ, கண்ணாடித் துண்டோ , மூங்கில் கழியோ உபயோகப் படுத்தப்படும்.

13. அறுபட்ட தொப்புள் மீது சாம்பலோ, சாணியோ, மண்ணோ தடவப்படும்.

மருத்துவம் வளர்ச்சியுறாத காலத்தில் உலகம் முழுதும் பிரசவங்கள் பாதுகாப்பாய் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரை குறை வைத்தியங்களே நடந்திருக்கும். ஆனால் இந்தியாவில் பிரசவம் ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வாய் இருந்ததால் உலகில் எந்த பகுதியிலும் அனுபவிக்காத கொடுமைகளை இங்கே பெண்கள் அனுபவித்துள்ளனர்.

இதில் தீட்டு இல்லாதிருந்திருந்தால் , சமூகத்தின் பொது அக்கறை இதில் இருந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு வெளிச்சமுள்ள காற்றோட்டமுள்ள இடத்திலாவது பிரசவம் நடக்க வேண்டும் என்ற அறிவாவது பெற்றிருப்பர். தீட்டு பிரசவம் குறித்த ஒரு பொது அறிவை வளர விடாமல் தடுத்துவிட்டது.

சாதியத்தையும், பார்ப்பனியத்தையும், தீட்டையும், இந்து மதத்தையும் பிரித்துப் பார்ப்பது முடியாத ஒன்று.

No comments:

Post a Comment