தொகுப்புகள்

Search This Blog

Thursday, May 28, 2020

இந்தியைத் தடுத்த திராவிடத்தால் வீழ்ந்தோம்..

50 வருடம் ஹிந்தி தெரியாமல் திராவிட ஆட்சி நடை பெற்றதால் பின்னோக்கி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் கதை.....

1.உயர் கல்வி :

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்… அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்..

தமிழ் நாடு –       38.2%..♥
பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 
குஜராத் –            17.6% ; 
மபி –                    17.4% ; 
உபி –                   16.8% ; 
ராஜஸ்தான் –    18.0% ;

இந்திய சராசரி : 20.4%♥
-----------------------------------------------------
2.கல்வி நிலையங்களின் தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 
♦37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் ♦மூன்றுதான்.. 

இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……
------------------------------------------------------------
3.முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், 
தமிழ் நாடு – 22 ;♥
குஜராத் –        5 ; 
மபி –                3 ; 
உபி –               6 ; 
பிகார் –           1 ; 
ராஜஸ்தான் –3
----------------------------------------------------------
4.முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ;♥
குஜராத் –         2 ; 
மபி –                 0 ; 
உபி –                7 ; 
பிகார் –             0 ; 
ராஜஸ்தான் – 4
-------------------------------------------------------
5.பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-

இந்தியாவில் இருக்கும் 
♦29 மாநிலங்களில், 
♦20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை #தமிழ்நாடு, #கர்நாடகா, #மகாராஷ்டிரா ஆகிய ♦3 மாநிலங்கள் அளிக்கிறது.. 

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

தமிழ் நாடு – ₹18.80 lakh crore ♥
                                                       (2nd Place) ; 
பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

உபி –             ₹12.37 lakh crore (4th) ; 
குஜராத் –      ₹10.94 lakh crore (5th) ; 
ராஜஸ்தான்  ₹07.67 lakh crore (7th) ;
மபி –              ₹07.35 lakh crore (10th) ; 
சத்தீஸ்கர் –  ₹02.77 lakh crore (17th)
-------------------------------------------------------------
6.Infant Mortality Rate 
(IMR சிசு மரண விகிதம் 1000
 பிறப்புக்கு) :-

தமிழ் நாடு –          21 ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –               36 ; 
மபி –                       54 ; 
உபி –                      50 ; 
ராஜஸ்தான் –       47 ; 
சத்தீஸ்கர் –           46 ; 
இந்திய சராசரி :   40 ♥
----------------------------------------------------------
7.Maternal Mortality Rate 
(MMR – ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) :-

தமிழ் நாடு –         79 ; ♥
பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 
குஜராத் –            112 ; 
மபி –                     221 ; 
உபி –                    285 ;
ராஜஸ்தான் –     244 ; 
சத்தீஸ்கர் –         221 ; 
இந்திய சராசரி : 167♥
------------------------------------------------------
8..தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :

தமிழ் நாடு –         86.7% ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –             55.2% ; 
மபி –                     48.9% ; 
உபி –                    29.9% ; 
ராஜஸ்தான் –     31.9% ; 
சத்தீஸ்கர் –         54.0% ; 
இந்திய சராசரி : 51.2% ♥
--------------------------------------------------------
9.கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-

தமிழ் நாடு –       80.33% ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –            79.00% ; 
மபி –                    70.00% ; 
உபி –                    69.00% ; 
ராஜஸ்தான் –     67.00% ; 
சத்தீஸ்கர் –         71.00% ; 
இந்திய சராசரி : 74.00% ♥
-------------------------------------------------------------
10.ஆண் – பெண் விகிதாசாரம் 
(ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) 
இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு –         943 ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –              890 ; 
மபி –                      918 ; 
உபி –                     902 ;
ராஜஸ்தான் –      888 ; 
இந்திய சராசரி :  919 ♥
------------------------------------------------------------
11.தனி நபர் வருமானம் 
     (Per Capita Income – ரூபாயில்)

தமிழ் நாடு –           1,28,366 ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –                1,06,831; 
மபி –                           59,770 ; 
உபி –                          40,373 ; 
ராஜஸ்தான் –           65,974 ; 
சத்தீஸ்கர் –               64,442 ; 
இந்திய சராசரி :       93,293 ♥
-----------------------------------------------------------
12.மனித வள குறியீடு 
(Human Development Index)

தமிழ் நாடு –          0.6663 ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –               0.6164 ; 
மபி –                       0.5567 ; 
உபி –                      0.5415 ; 
ராஜஸ்தான் –       0.5768 ; 
சத்தீஸ்கர் –           0.3580 ; 
இந்திய சராசரி :   0.6087 ♥
-----------------------------------------------------------
13.ஏழ்மை சதவீதம் 
(Poverty  -% of people below poverty line)

தமிழ் நாடு –              11.28% ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள்

குஜராத் –                   16.63% ; 
மபி –                            31.65%;
உபி –                           29.43% ; 
ராஜஸ்தான் –            14.71% ; 
சத்தீஸ்கர் –                39.93% ; 
இந்திய சராசரி :        21.92% ♥
------------------------------------------------------
14.ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகள் (Malnutrition)

தமிழ் நாடு –               18.0% ; ♥

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –                     33.5% ; 
மபி –                             40.0% ; 
உபி –                            45.0% ; 
ராஜஸ்தான் –             32.0% ; 
சத்தீஸ்கர் –                 35.0% ; 
இந்திய சராசரி :         28.0% ♥
---------------------------------------------------------
15.மருத்துவர்களின் எண்ணிக்கை 
(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு –               149 ; ♥
பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 
குஜராத் –                      87 ; 
மபி –                               41 ; 
உபி –                              31; 
ராஜஸ்தான் –               48 ;
 சத்தீஸ்கர் –                  23 ; 
இந்திய சராசரி :           36 ♥
----------------------------------------------------------------
       இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, 
மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது…. இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..

மேலும்,

1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.

4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..

5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்….

Source from Tamil inyan 

Saturday, May 23, 2020

இவர் இல்லாமல் இருந்திருந்தால்...

பாக்யராஜூம்  அவரது நண்பரும் எல்டாம்ஸ் ரோடு 92 c ரூமில் தங்கி இருந்தார்கள். அந்த நடிகர் நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார்.

பாக்யராஜ் அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். பாக்யராஜின் நண்பர் அப்போது சின்னச்சின்ன கேரக்டர்களில் சினிமாவிலும் தலைகாட்டிக் கொண்டிருந்தார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை பாரதிராஜா ஆரம்பிக்கிறார். அதில் ஹீரோயின் ராதிகா. ஹீரோ சுதாகர். ராதிகாவின் அக்காவாக நடிக்கும் காந்திமதி, அன்றைக்கு மிகவும் பிஸியான நடிகை. காந்தமதிக்கு கணவனாக யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு எழுந்தது.

அது மிகவும் முக்கியமான கேரக்டர். படத்தின் வில்லன் கேரக்டர். தன்னுடைய ரூம் மேட் அந்த கேரக்டரில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பாக்யராஜ் முடிவு செய்கிறார். இயக்குநர் பாரதிராஜாவிடம் சொல்கிறார். அந்தப் படத்தின் வினியோகஸ்தர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண். அவரும் பாரதிராஜாவிடம் அந்த நடிகரையே சிபாரிசு பண்ணியிருக்கிறார். 

யாரு சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளாத பாரதிராஜா, “போய்யா.. அந்தாளுக்கு தலையில முடியே இல்லை. ஆளும் நல்லாயில்ல” என்று மறுத்துவிட்டார். இத்தனைக்கும் பாரதிராஜாவின் முதல் படம் ‘16 வயதினிலே‘வில் அந்த நடிகர் நடிச்சிருந்தார்.

பாக்யராஜ், “விக்கு வச்சிக்கலாம்” என்று சமாதானம்  சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா, அந்த நடிகரை காந்திமதி உடன்  நடிக்க வைத்து  டெஸ்ட் சூட் பண்ணி காட்ட சொல்லியிருக்கிறார். பாக்யராஜ் தன் நண்பரை அழைத்து அவர் தலைக்கு தோதான விக் வைத்து, டைலாக் சொல்லி குடுத்து, டெஸ்ட் சூட் எடுத்திருக்கிறார்கள். அதை ப்ரிவியூ தியேட்டரில் பாரதிராஜாவுக்கு போட்டும் காண்பித்திருக்கிறார்கள்.

ஷோ முடிந்து பாக்யராஜ் நேராக  ரூமுக்கு சென்றிருக்கிறார். ரூமுக்கு வெளியிலே தெரு முக்கில் பாக்யராஜ்க்காக அவரது நண்பர் காத்துக் கொண்டிருந்தார். பாக்யராஜைப் பாத்ததும் ஓடி வந்து கையைப் பிடிச்சிக்கிட்ட அவர், “என்ன ஆச்சு, டைரக்டர் என்ன சொன்னாரு?”  என்று படபடவென கேட்டிருக்கிறார். 

பாக்யராஜ், “டைரக்டர் ஒத்துக்கிட்டாரு. நீதான் காந்திமதிக்கு புருஷனா நடிக்கப் போற’’ என்று சொல்லியிருக்கார். உடனே,  அந்த நடிகர் தன் கையோட வைத்திருந்த கற்பூரத்தை எடுத்து பூட்டியிருந்த தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் வாசலில்  கொளுத்தி, கீழே விழுந்து கும்பிட்டிருக்காரு. கும்பிட்டு எழுந்தவர் கண்களில்  தாரை தாரையாகக் கண்ணீர்.

அதன் பின்பு அந்தப் படத்தில் காந்திமதிக்கு புருஷனாக வில்லனாக நடித்த கவுண்டமணிக்கு அந்தப் படத்திலிருந்து நட்சத்திர அந்தஸ்து கிடைக்கத் தொடங்கியது.  பெரிய ஸ்டார் ஆனார். இதெல்லாம் அம்மன் அருளாலதான் நடந்தது என்று கவுண்டமணி இன்று வரை நம்புகிறார். 
கோவை மாவட்டம் வல்லக்குண்டாபுரம் கிராமத்தில் திருமூர்த்தி மலைச்சாரலின் பிறந்த சுப்பிரமணி சின்ன வயதில் வாய்ப் பேச முடியாதவராக இருந்திருக்கிறார். ‘வீட்டுக்கு ஒரே ஆம்பளப் பையன் இப்படி ஆகிப்போச்சே’ என்று அப்பா அம்மா கவலைப்பட்டிருக்கிறார்கள்.

சுப்பிரமணியின் அக்கா மயிலாத்தாள் தம்பி மேல் இருந்த பாசத்தால் போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. சகோதரியின் வேண்டுதல் சுப்பிரமணியை பேச வைத்தது. அது மட்டும் நடக்காமல் போயிருந்தால் நமக்கு கவுண்டமணி என்ற மகா கலைஞன் கிடைக்காமலேயே போயிருப்பார்.

கிராமத்தில் எல்லோரும் நாடகம் பார்க்க ஆசைப்பட்ட காலத்தில் சுப்பிரமணி மட்டும் நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்டான். சின்ன வயதிலேயே சென்னை வந்துவிட்ட கவுண்டமணிக்கு இங்கே பாக்யராஜின் நட்பு கிடைத்தது.  அதன் மூலமாக பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்தில், “பத்த வச்சிட்டீயே பரட்டை” என்ற வசனம் பேசி, எல்லாரையும் திரும்பிப் பாக்க வைத்தார்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா வருகைக்கு முன்பு வரை எல்லோரும் உரைநடைத் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.  பேச்சு வழக்கு மொழி தமிழ்ப் படங்களில் ஒலிக்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே கொங்கு வட்டார வழக்கைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்தவர், கவுண்டமணிதான். கோவையைச் சேர்ந்த இயக்குநர் சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்‘ படத்தில் “அடேய் கப்லிங் தலையா? இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா ஒரு நல்லவரு, ஒரு வல்லவருனு ஊருக்குள்ள இருக்கற அம்மணி அக்காகிட்டேல்லாம் போய் சொல்லோணும்” என்று பேசி, கொங்கு வட்டார வழக்கை சினிமாவுக்குள் கொண்டு வந்தார். 

தமிழ் சினிமாவில் முதல் முதலில் பேசப்பட்ட வட்டார வழக்கும் கொங்கு மண்டல வழக்காகத் தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அதற்கு அச்சாரம் போட்டவர்கள் இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர்தான். ‘நாட்டாமை‘ படத்தில் அவரது கொங்கு தமிழ் உச்சத்தைத் தொட்டது.  பெண் வேடத்தில் கவுண்டமணி , “யேங்கோ, நம்ம ரெண்டு பேர்த்துக்குப் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?”  என்று கேட்கும்போது கோயமுத்தூரையே நம் கண் முன்னால் வந்து நிறுத்தியிருப்பார்.

பாக்கியராஜ் சாரோட ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில், “சரோஜா குப்பையால கொட்ற? கொட்டு, கொட்டு” என்று வழிந்து கொண்டே பேசி அடுத்த கட்டத்துக்கு போயிட்டாரு. அதன்பின்பு இயக்குநர் சுந்தர்ராஜன் வந்தார். அவர் கவுண்டமணியை அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டுப் போனார் என்று  சொல்வதைவிட, தூக்கிக் கொண்டு போனார் என்றுதான் சொல்ல வேண்டும். 

இன்று நடித்துக் கொண்டிருக்கிற எல்லா நடிகர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டப் பெயர் வைத்துக் கொல்(ள்)கிறார்கள். புதுசா நடிக்க வருகிறவர்கள் கூட முதல் படத்துலயே அடைமொழி வைத்து அட்ராசிட்டி செய்கிறார்கள். காமெடி நடிகர்கள் கூட பட்டப் பெயர் வைத்துக் கொள்வது வழக்கமாவிட்டது. ஆனால், கவுண்டமணிக்கு இதுவரைக்கும் எந்தப் பட்டமும் கிடையாது. அவரிடம்  பட்டப் பெயர் வைப்பது பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், “ஏன்டா சார்லி சாப்ளினுக்கே பட்டப் பெயர் கிடையாது. நடிப்புல நாம என்ன அவரை விடவா சாதிச்சிட்டோம். போங்கப்பா” என்று சொல்லியிருக்கிறார். அதுதான் கவுண்டமணி!

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமலுடன் நடிக்கும் போதும் கூட  கவுண்டர் தனக்குரிய பாணியை மாற்றிக்கொண்டது இல்லை. ‘மன்னன்‘, ‘பாபா‘ படங்களில் ரஜினியை கவுண்டர் சகட்டுமேனிக்குக் கலாய்ச்சிருப்பார். 

‘சிங்காரவேலன்‘, ‘இந்தியன்‘ படங்களில் கமலையும், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் என உடன் நடித்த எல்லோரையும் கலாய்ப்பதில் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். கவுண்டமணியைத் தவிர வேறு யாரும் இதுபோல் கலாய்த்திருந்தால் அந்த ஹீரோக்களின் ரசிகர்கள் ‘காண்டா‘கி இருப்பார்கள். அதுதான் கவுண்டமணியின் சக்சஸ்.

கவுண்டமணியின் காமெடி இல்லாம இருந்திருந்தால் நிறைய ஹீரோக்கள் அப்போதே காணாமப் போயிருப்பார்கள். அது சம்பந்தப்பட்ட அந்த நடிகர்களுக்கும் நன்றாகத் தெரியும்.  

கவுண்டமணி பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்துல நிறையப் படங்கள் இளையராஜாவின் இசைக்காகவும், கவுண்டமணி-செந்தில் காமெடிக்காகவும் ஓடியிருக்கிறது. ‘கரகாட்டக்காரன்‘, ‘சின்னத் தம்பி‘ படங்கள் அதற்கு நல்ல உதாரணங்கள். தமிழ்ச் சினிமா வரலாற்றில் வசூலில் சாதனை படைச்ச இந்த இரண்டு படங்களிலும் இளையராஜாவும் கவுண்டரும் முழு திறமையைக் காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருபபார்கள். மணிரத்னத்தின் ‘பகல்நிலவு‘, ‘இதயக்கோயில்‘, ஷங்கரின் ‘ஜென்டில்மேன்‘, ‘இந்தியன்‘ படங்களின் காமெடி இன்றைக்கும் ‘வைரலா‘கிக் கொண்டிருக்கிறது.

பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களுடைய ஆரம்ப காலப் படங்களில் கவுண்டமணியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தப் பிறகு கவுண்டமணியை தவிர்க்கவே செய்திருக்கிறார்கள்.

இதற்கு, படத்தின் கதைக்கு முக்கியத்துவம் தராமல் தன் பாணியிலேயே இவர் நடிப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் நடிகர்கள் ராமராஜன், சத்யராஜ்,  அர்ஜூன் ஆகியோர் தொடர்ந்து கவுண்டமணியைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தன்னைப் பார்க்க வேண்டும் என்றால், ரசிகர்கள் தியேட்டருக்குத்தான் வர வேண்டும் என்பதில் கவுண்ட மணி எப்பவும் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால்தான் மீடியாவில் பேட்டி கொடுப்பதையோ தலைகாட்டுவதையோ அவர் விரும்பவில்லை. நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டதில்லை. இந்த விஷயத்தில் இவர் பாணியைத்தான் தல அஜித் இப்போது பின்பற்றி வருகிறார்.

கவுண்டமணி நகைச்சுவை என்ற பெயரில் சக மனிதர்களின் உருவத்தை கேலி செய்வதையும், பெண்களை இழிவுப்படுத்துவதையும் இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் கவுண்டமணி என்ற மகா கலைஞனை பயன்படுத்திக் கொள்ள தமிழ்ச் சினிமா தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும்.  இயக்குநர் வி.சேகரின் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்‘, ‘பொறந்த வீடா புகுந்த வீடா‘ போன்ற படங்களில் கவுண்டமணி ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்திருப்பார். 

கேரளாவில் இப்படியொரு கலைஞன் பிறந்திருந்தால், அவர்கள் இவரை வெறும் காமெடி நடிகராக மட்டுமே பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை ஆதங்கத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

கவுண்டமணியின் பெரும்பாலான படங்களுக்கு வீரப்பன் என்பவர் டிராக் எழுதியிருப்பார். நிச்சயமாக கவுண்டமணியின் வெற்றியில் இவருக்கும் பெரும் பங்குண்டு. ‘உதயகீதம்’ படத்தில கவுண்டமணிக்கு மாமனார் கேரக்டரில் போலீஸாக வீரப்பன் நடித்திருப்பார். 

 -ஊ இஸ் த டிஸ்டபென்ஸ்?  
-நான் ரொம்ப பிஸி
-காந்த கண்ணழகி
-அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 
 -நாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா 
 -அய்யோ ராமா! ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் சேர வைக்குற
-பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா, லிவருக்கு ரொம்ப நல்லது
-இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துடு. உனக்குப் பின்னால வர சந்ததிகள் அதைப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும்.

இப்படி கவுண்டமணியின் பஞ்ச் டைலாக்குகளை சொல்லிக்  கொண்டே போகலாம். 

இந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் கூட பஞ்ச் டைலாக்குகள் பேசி இருக்க மாட்டார்கள்.

கவுண்டமணியின் புகழ் பாடும் இந்தக் கட்டுரையை யாராவது அவரிடம் சென்று காட்டினால், 
அவர் என்ன சொல்லுவார் தெரியுமா?

‘நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி!‘

Vetri

Thursday, April 16, 2020

வேப்பிலை மஞ்சள் கோமியம் கிருமிநாசினியா?

வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாண  கலவை கிருமிநாசினியா?


தமிழ் உலகின் மூத்த மொழி. இலக்கியங்களில் செழித்த  மொழி. கணிதத்தின் தரத்தையும் மிஞ்சும் திருக்குறளைத் தந்த மொழி. எத்தனை  கலைகள்,  எத்தனை மர, கருங்கல், உலோக  சிலைகள், வானுயர கோபுரங்களைக் கொண்ட கோயில்கள், என் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் அங்குக் காணலாம். கோயில்கள் பல தொழில் நுட்பத்தின் கண்காட்சி. ஆனால் கோவிலைச் சரியாகப் பார்ப்பவர்கள் நம்மில் சிலர் தான்.   மஞ்சள் காமாலை போன்ற கொடிய நோய்களுக்கு மருந்து  தந்து உலகைக் காத்த என் முன்னோர்களை நினைத்துப்   பெருமையடைந்த  நான், 

"வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாணம் கலந்த கலவை ஒரு கிருமிநாசினி" என ஏன் மக்கள் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மூடநம்பிக்கையாகத்தான் இதனைப் பார்க்கின்றேன். 

கிருமிநாசினிகள் பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்ல வல்லது. எப்படி இவற்றைக் கொல்கின்றது என்பதைப் பார்ப்போம்.

சில   பாக்டீரியாக்கள்  வெளிப் புறத்தில் ஒருவகையான  சவ்வைக் கொண்டது.  சில   பாக்டீரியாக்கள் மற்றும்   பூஞ்சைகள்   வெளிப் புறத்தில் நல்ல தடிமனான  சுவரைக் கொண்டது.  வைரஸ் வெளிப்புறத்தில் பல புரத கட்டமைப்பைக் கொண்டது. 

கோடி கோடியாகப்   பாக்டீரியாக்கள் உள்ளன.     கோடி கோடியாகப்  பூஞ்சைகள் மற்றும்  வைரஸ்களும் உள்ளன.  இவை அனைத்தையும் கொல்ல வல்லமை படைத்தது 
இந்த கிருமிநாசினிகள். கிருமிநாசினிகள் பல வகைகள் உள்ளது. உங்கள் வசதிக்காக இவற்றை இரண்டாகப் பிரித்து விளக்குகின்றேன். 

ஒன்று சாராயத்தை அடிப்படையாகக்  கொண்டது.. இரண்டு சோப்பை அடிப்படையாகக்  கொண்டது.... இவை இரண்டிலும் OH-, H+, போன்ற அயினிகளை உமிழவல்ல பொருட்களை அல்லது குளோரின், அயோடின்,  புரோமின், அல்லது குளோரோகெசிடின் (chlorhexidine) போன்ற வேதிப்பொருட்களில் ஒன்றே அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையே இருக்கும்.  

இவை பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் வெளிப்புற மற்றும் உட்புற அமைப்புக்களை ஒரு நிமிடத்தில் குலைக்கவல்லது.   இந்த வேதிப்பொருட்களால் உருக்குலைக்கப்பட்ட நுண்ணுயிரிகளால் உயிர்வாழமுடியாது. காரணம்  இந்த நுண்ணுயிரிகளில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் மரபணுக்களை இந்த வேதிப்பொருட்கள் சிதைக்கின்றன. நம் கைகளில் மேல் உள்ளது  தோல். இந்த தோலின் மேல் அடுக்கு இறந்த செற்களின் தொகுப்பு. எனவே இந்த வேதிப் பொருட்களால் நமக்குப் பாதிப்பில்லை. இவை  நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

வேப்பிலை, மஞ்சள், கோமியம், நாட்டு மாட்டுச் சாணம் கலந்த கலவை ஒரு கிருமிநாசினி   இல்லை. இதனைப் பயன்படுத்துவதால் பயன் எதுவும் இல்லை. கரோனாவைரஸ் பரவிவரும் இந்த வேளையில் இதனை நம்பி உயிரைப் பணயம் வைக்கக்கூடாது.

மாறாக மாட்டுச் சாணம் டெட்டனஸ் என்ற நோயை உண்டுபண்ணும் பக்டிரியாவின்  இருப்பிடம். இதனை கையால் தொடுவதையே அபாயம் என்பதை உணரவேண்டும். 

ஆனால் நுண்ணுயிரியால் படித்தவர்களில் பலரும் கூட மாட்டுச் சாணத்தைக் கிருமிநாசினி என வாதாடுவதைப்  பார்த்திருக்கிறேன்.  என்னத்த சொல்ல... படித்த மற்றும் நிரூபிக்கப்பட்ட  உண்மைகளைவிட  இந்த வகை மூடநம்பிக்கைகளைப் படித்த அறிவாளிகளும் நம்புகின்றனர். 

மாட்டுச் சாணத்தில் கோடான கோடி பூஞ்சைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து உங்களைக் காப்பாற்றாது. நிச்சயம் உங்களுக்குப் பல தொல்லைகளைத்தான் தரும். 

தெளிந்த தமிழ் சமுதாயத்தில் இப்படி ஒரு மூடநம்பிக்கையை எந்த கயவர்கள் எற்றிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. நம்மை வாழவைக்க இதனை அவர்கள் செய்யவில்லை.. நம்மை அழிக்கவே இந்த மூடநம்பிக்கையை நம்மிடம் ஏற்றியுள்ளார்கள் அந்த அற்பர்கள்.

மேலும் மஞ்சள் மற்றும் வேப்பிலையில்  கிருமிநாசினிகளின் பண்பு சற்றுள்ளது  என்பதில் ஐயமில்லை. ஆனால். இதனை        வைத்து கை கழுவினால் அனைத்து நுண்ணுயிரிகளும் அழிக்கப்படுமா? எனப் பார்ப்போமா?

மஞ்சளில்  கர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருளும்; வேப்பிலையில் அசாடைரடின்   (Azadirachtin) என்ற வேதிப்பொருளும் 
 கிருமிநாசினிகளின் பண்பு சற்றுள்ளது  என்பது உண்மை. இவை இரண்டும் அனைத்து நுண்ணுயிரிகளையும் அழிக்கும் வல்லமை படைத்ததா என்றால் இல்லை என்பது என் பதில்.

சில பாட்டிரியாக்களையும் ஒரு சில பூஞ்சைகளையும் தான் இந்த அசாடைரடின் மற்றும் கர்குமின்-களால் அழிக்கமுடியும். பெரும்பாலான வைரஸ்களில் இந்த பொருட்களின் ஆற்றல் அறியப்படவில்லை. நான் சொல்லுவது என்னவென்றால் மிகச் சில நுண்ணுயிரிகளை மட்டுமே இந்த பொருட்களால் அழிக்கமுடியும். அனைத்து நுண்ணுயிரிகளையும் இதனால் அழிக்கமுடியாது. மேலும் இந்த பொருட்கள் நுண்ணுயிரிகளை அழிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. ஒரு நிமிடத்தில் அத்தனை நுண்ணுயிரிகளையும் அழிக்கவேண்டும். ஒரு முறை கை கழுவ அதிக நேரம்  எடுத்துக் கொள்ள முடியாது. விரைவாகச் செயல்படும் பொருட்களையே கிருமிநாசினிகளாகப் பயன் படுத்தமுடியும். 

 மஞ்சளில் உள்ள கர்குமின்  புற்றுநோய்க்கான  நல்ல  மருந்து.  வேப்பிலையில் உள்ள   அசாடைரடின் ஒரு சிறந்த பூச்சிக் கொல்லி என்பதில்  மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவை நல்ல கிருமிநாசினிகள் என்பது உண்மையில்லை.

வேப்பிலை ஒரு சிறந்த பூச்சிக் கொல்லி எனத் தூத்துக்குடியைச் சார்ந்த ஒருவருக்குத் தெரிய, அவர் வேப்பிலையை நிரைய பறித்து பின்  அரைத்து ஒரு பெரிய சொம்பு நிறையக் குடிக்க, அவர் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது..  வேப்பிலை நல்லது தான். அதைச் சரியாகத் தெரிந்து  பயன்படுத்தவேண்டும்.

- Dr. Sudhakar Sivasubramaniam 
Professor at Biotechnology Department, 
Manonmaniam Sundaranar University, Tamilnadu

Wednesday, April 1, 2020

இந்து மதம் எங்கே போகிறது ?

இந்து மதம் எங்கே போகிறது? 
“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது?","சடங்குகளின் கதை" இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்துமதம் இந்திய மதமா? தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள். 

 இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை. 

இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?

இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.
27.8.2010 அன்று தினத்தந்தியில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. மராட்டியம், அய்தராபாத் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு குண்டு வெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பேசும்போது, நாட்டில் சமீபகாலமாக நடக்கும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் புதுவகையான காவிதீவிரவாதம் சம்பந்தப்பட்டுள்ளது. என்று உண்மையைப் பேசி இருக்கின்றார்.

உடனே சிவசேனா கட்சி எம்.பிக்கள் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஒரு கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். 
அது என்ன என்றால் இந்துக்களின் நாட்டில் ஓர் இந்து எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்.

இதைப் போலவே காஷ்மீர் பிரச்சினை விவாதம் வரும்போது, முரளி மனோகர் ஜோஷி சிதம்பரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவரும் ஒரு கேள்வி கேட்டு இருக்கின்றார். 

அது என்ன என்றால்,காவி என்பது அமைதியின் சின்னம். அதைத் தீவிரவாதத்துடன் ஒப்பிட முடியாது. இதுபோன்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அதற்கேற்ற எதிர்விளைவுகள் ஏற்படும். பிறகு ஏன் அப்படிக் கூறவேண்டும்?என்று மிரட்டும் தொனியில் கேட்டு இருக்கின்றார். 

இதற்கு மேலும் அவர்களை வளரவிட்டால் நாடு என்ன கெதிக்கு ஆளாகும் என்று, நாட்டின் வளர்ச்சியின் மேல் அக்கறை உள்ளவர்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர்.

இந்த போலி மதவாதிகளின் பொய்த்திரையை கிழிக்கும் காலம் வந்துவிட்டது. பல்வேறு மதத்தை, மொழியை, இனத்தை, கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மக்களைக் கொண்டு பரந்து விரிந்து கிடக்கும் இந்திய நாட்டை, ஆரிய சாங்பரிவார் கும்பல் எதற்கு எடுத்தாலும் இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, 

இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?

முதலில் இந்து என்ற மதம் உண்டா?

இந்தக் கேள்விக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேரேந்திர சரஸ்வதி அவர்கள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் 125,126 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கின்றார் என்றால், 

இந்து என்பது நமது பூர்வீகப் பெயரல்ல. வைதீக மதம், சனாதன மதம், என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவுமில்லை. 

நமது ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை.

இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று சங்கராச்சாரியே சொல்லிவிட்டார்.

சங்கராச்சாரியைப் போலவே இந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பே இருக்கின்றது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மைக்கேல் X எதிர் வெங்கடேஸ்வரன் (65 லிகீ 108) என்ற வழக்கில் நீதிபதி பி.வி. ராஜமன்னார் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்றார்.

அந்தத் தீர்ப்பில், இந்து மதம் என்று (நான்) குறிப்பிடும்போது அச்சொல்லின் பொருள் தெளிவற்ற ஒன்றாக இருப்பதை உண்மையில் உணர்ந்தே இருக்கின்றேன். 

நாம் புரிந்துகொண்டுள்ள பொருளில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. அது (அச் சொல்) இந்தியாவில் தோன்றியதுமன்று. 

இந்துக்கள் தங்கள் மதத்திற்கு அப்பெயரை எப்பொழுதும் பயன்படுத்தியதுமில்லை. ஆனால் அச்சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டது. 

மதம் மற்றும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் குறிப்பிட அச்சொல் வசதியின் காரணமாகப் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றது என்று உயர்நீதிமன்றமே தீர்ப்புச் சொல்லிவிட்டது இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று. 

இந்தத் தகவலை புத்தர் ஓர் இந்துவா? என்ற புத்தகத்தில் டாக்டர் சுரேந்திர அஜ்நாத் என்பவர் மேற்கோளுக்காக கையாண்டுள்ளார்.

அதே புத்தகத்தில் பக்கம் 11 இல் இந்து என்ற சொல்லுக்கான பொருளையும், இந்துத்வாவாதிகள் அதைப் பயன்படுத்திய விதத்தையும் விவரித்துள்ளார்.

இந்து என்றால் திருடன் என்று சொன்னால்; நாக்கை அறுப்பேன் மூக்கை அறுப்பேன் என்று சொல்லும் வேதாந்திகள் முக்கியமாக இதைக் கவனிக்க வேண்டும். அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள சங்கதி இதுதான்.

இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.

19ஆம் நூற்றாண்டின் இந்துத் தலைவர்கள், குறிப்பாக ஆரிய சமாஜத்தினர் இச்சொல்லைப் பயன்படுத்தவில்லை. 

இந்த நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் கூட, போரில் வென்றவன் தோற்றவரை இழித்துப் பழிப்பது போல் அமைந்துள்ளதாகக் கருதியதால், பயன்பாட்டில் இச்சொல் அவர்களால் தவிர்க்கப்பட்டது. 

அதற்குப் பதிலாக ஆரியர் என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தினர். ஹிந்தி என்ற சொல்லையே கூட அவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர். 

ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த் ஹிந்தி என்பதற்குப் பதிலாக ஆரிய மொழி என்ற சொல்லையே பயன்படுத்தினார். 

ஆனால் இன்று கண்மூடித்தனமான இந்து மயமாக்கல் நடைபெற்று வருவதால் இச்சொல்லைப் பயன்படுத்த எவரொருவரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. என்கிறார் சுரேந்திர அஜ்நாத். 

பாருங்கள் இந்து என்ற சொல்லின் பொருள் அசிங்கமாக இருப்பதால் அந்தச் சொல்லையே பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கின்றார்கள். 

நியாயப்படி இந்து என்ற சொல் திருடர்களையும், வழிப்பறி செய்பவர்களையும் குறிக்கின்ற சொல். 

ஆனால் சட்டப்படி அந்தச் சொல் யாரை யாரை எல்லாம் குறிக்கின்றது?

இந்திய அரசியல் சட்டம் 25 ஆவது விதி 2 ஆவது பிரிவு, விளக்கம் 2 இல் இந்து என்ற சொல் எவற்றைக் குறிப்பதாக சொல்லப்பட்டிருப்பதாவது;

விளக்கம் 2. (2) ஆவது கூறின் (6) கிளைக்கூறின் படி உள்ள இந்து என்ற சொல், சீக்கிய, ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் குறிப்பதோடு இந்துக் கோயில், மதச்சார்பற்ற இடங்கள் என்பதும், அத்தகைய சீக்கிய, ஜைன, புத்த சமயக் கோயில்களையும் மற்ற மதச்சார்பற்ற இடங்களையும் குறிப்பதாகும்

இந்த சட்ட விளக்கத்தில் இந்து என்ற சொல் சீக்கிய, ஜைன, புத்த மதங்களைச் சார்ந்தவர்களையும் என்று வரும் வரிகளைக் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

நல்லவேளை இந்த மூன்று மதங்களையும் உருவாக்கியவர்கள் முன்னமே செத்துப்போய்விட்டார்கள்.

இந்து மதம் என்றால் இதுதான் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட தெளிவாக இல்லை. 

இருக்கும் விளக்கத்தில்கூட சீக்கிய, ஜைன, மற்ற மதங்கள் எல்லாம் அரசமைப்புச் சட்டம் எழுதுவதற்கு முன்பு இருந்ததைப்போல தனித் தனியே பிரிந்து விட்டால், இந்து மதத்தில் என்ன இருக்கும்? 

வெறும் சைபர்தானே இருக்கும்?

இந்த இலட்சணத்தில் இந்து நாடு, இந்து நாடு என்கிறார்களே காவிகள். இந்த மதமே இல்லை பிறகு எங்கே இந்து நாடு?

இதை எல்லாம் கொஞ்சம் ஆழமாக யோசிக்கும் போது ஓர் அய்யம் இயல்பாகவே எழுகிறது. அந்த அய்யம் என்ன என்றால், இந்து மதம் இந்தியாவில் பெரும்பான்மை மதமா? சிறுபான்மை மதமா? என்பதுதான்.

இந்த அய்யம் எழக்காரணமும் உள்ளது. இந்து என்ற வார்த்தை இந்திய வார்த்தை அல்ல, இந்து என்று ஒரு தனி மதம் இல்லவே இல்லை. 

அப்படி இவர்கள் கூறும் மதக் கூட்டணியும் ஒன்றுக் கொன்று முரண்பாடானது. இவையும் போக அய்யத்திற்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது. 

அது என்ன என்றால், இந்து மதத்தின் முதன்மையாமான அம்சம் ஜாதி முறை. நான்கு வர்ணங்களை நான்தான் படைத்தேன் ஆனால் அவற்றை நான் நினைத்தால்கூட மாற்ற முடியாது என்று கீதையில் கண்ணன் சொல்கிறான. 

இந்த நான்கு வருணங்களில் அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வருணங்களில் உயர்வானவன் பிராமணன். 

மற்ற மூன்று வருணத்தாரும் அவனுக்குக் கீழானவர்கள். அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவர்கள் என்கிறது இந்து மதம், இதுதான் கீதை, இதுதான் மனுதர்ம சட்டம்.

இதுவரை இந்து மதத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு கீதையும் மனுதர்ம சட்டமும் பிராமணர்களின் உயர்வுக்காகவே படைக்கப்பட்டவை; இந்து மதம் என்று சொல்லப்பட்டது கூட பிராமணர்களால் படைக்கப்பட்டது என்பதாகும்.

இந்திய வரலாற்றுப்படி இந்து மதத்தில் மிக உயர்வாகக் கருதப்படும் பிராமணர்கள் யார் என்றால், மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். எல்லா வரலாற்று ஆசிரியர்களும் இக்கூற்றை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

ஆக, நமக்கு அய்யம் வரக் காரணம் என்னவென்றால், இந்தியாவில் பிறக்காத, இந்திய நாடும் அல்லாத, நாடோடிகளாய் இந்தியாவிற்குப் பஞ்சம் பிழைக்க வந்த பிராமணர்கள், இந்தியாவில் உள்ள மதத்தில் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்? 

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த மக்களை இழிவுபடுத்தி இந்தியர் அல்லாதவர்களை உயர்வு படுத்தும் ஒரு மதம் எப்படி இந்திய மதமாக இருக்க முடியும்? 

அன்னியர்களுடைய மதம் இந்தியாவில் எப்படி பெரும்பான்மை மதமாக இருக்க முடியும்?

இவற்றுக்கெல்லாம் சங்பரிவார்கள் எப்படி பதில் சொல்ல முடியும்? 

இந்துத் தீவிரவாதம் என்று சிதம்பரம் சொல்லி விட்டாராம் அதற்காக குதிக்கிறார்கள். நாம் ஒன்று கேட்கலாம்_முஸ்லிம் காரன் மதானி குண்டு வைத்தால் அது முஸ்லீம் தீவிர வாதம், சரி, பிரக்யாசிங் குண்டு வைத்தால் அது எந்தத் தீவிரவாதம். தயவு செய்து சொல்லுங்கள்.

காவி புனிதமானதாம்! யாருக்கு புனிதமானது? 

கோவிலுக்குள்ளேயே சங்கரராமனை கொலை செய்த சங்கராச்சாரி உட்பட கொலைகாரர்களுக்கும் நடிகை ஒருவரோடு உல்லாசமாய் இருந்து மாட்டிக் கொண்டதால் நாட்டு மக்களால் செருப்படிபட்ட நித்தியானந்தாக்களைப் போன்ற காமவெறியர்களுக்கும் தான் காவி புனிதமானது.

எதற்கு எடுத்தாலும் இந்துநாடு, இந்து நாடு என்கிறீர்களே இந்திய மக்களாகிய எங்களின் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தால் வெளியிடப்பட்ட ஸ்ரீமத் பகவத் கீதையில், அத்யாயம் 9, 32 ஆவது சுலோகமான,
பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சுயமாகப் பரகதியடைகின்றனர் என்று சொல்லப்பட்ட சுலோகத்திற்கு சுவாமி சித்பவானந்தர் சொல்லியிருக்கின்ற வியாக்கியானமாவது, மனபரிபாகத்திற்கு ஏற்றாற்போல் பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. 

ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர். 

பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லாம். 

ஆகப் பொதுவாக பெண்மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும் இழிச்சொல் அல்ல.

இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசியர்கள். 

அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர்களது போக்கு. 

ஜடப் பொருளை எண்ணுகின்றளவு ஜடப் புத்தியே அவர்களிடத்து வலுக்கிறது. 

அத்தகைய பிரவிருத்தியை உடையவர்கள் எல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.
அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத் தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட்டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக்கின்றனரோ அவரே சூத்திரர். 

இவ்வுலகம் ஒன்றை மட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை என்று இருக்கின்றது. 

உழைக்கும் மக்களாகிய, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய எங்களை, இழிந்த பிறவிகள் என்று சொல்லும் இந்து மதம் எங்கள் மதமா? இதற்குப் பெயர்தான் புனிதமான மதமா?

ஆனால் இந்து மதம் இந்தியாவின் மதம், அது புனிதமானது என்று காட்டுவதன் மூலமும், கிறித்துவ, முஸ்லிம் அல்லாத பிற எல்லா மதமும் இந்து மதம் என்று காட்டுவதன் மூலமும், அன்னியப் பார்ப்பனர்கள் உயர்வானவர்கள் என்றும், அவர்களும் இந்தியர்கள் என்று காட்டும் மோசடிதானே இந்தத் தீவிர வாதம்?

இதைக் கண்டித்தது, இந்தப் போலி பொய்த்திரையைக் கிழித்து இவர்கள் யார் என்று இந்தியர்களுக்குத் தெரிவிப்பது தவறா?

இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை. இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! - 

ஆக்கம்:- திருப்பூர் நா. சுதன்ராஜ். கட்டுரை "விடுதலை" 04-09-2010 நாளிதழில் பிரசுரமானது.

Saturday, March 21, 2020

கோவிட்-19 என்னும் கொடுந்துகள்!!

கோவிட்-19 என்னும் கொடுந்துகள்!!

அவ்வப்போது சொல்லமுடியாத வேதனைகளை மனிதகுலத்துக்குக் கொடுத்துவிட்டு தன்னைவிட இப்பேரண்டத்தில் மிக்காரும் தக்காரும் இலர் என்று காட்டிவிடுகிறது இப்பேரியற்கை. கொரானாவைரஸ் துகள்களால் பல்லாயிரம் உயிர்கள் அரவமேயின்றிக் கொலையுண்டு போயிருக்கின்றன. முகநூலுக்கு முழுக்குப்போட்டுவிட விரும்பினேன். இன்னமும் உயிருடன் இருப்பதாலும், அறிவியலைப் படித்துக்கொண்டிருப்பவனென்பதாலும், கொரானாவின் கோரத்தை என் சிற்றறிவுக்கு எட்டியவற்றை விளக்கிவிட முயல்கிறேன். 

பொதுவாக, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் நோய்களை உண்டாக்கவல்ல, பன்றிகள், ஒட்டகங்கள், வௌவால்கள் மற்றும் பூனைகள் போன்ற விலங்கினங்களில் பரவலாகக் காணப்படும் வைரஸ் நுண்துகள்களை கொரானாவைரஸ்கள் என்றழைக்கிறார்கள். விலங்கினங்களின் குருதியில் வளர்ந்து பல்கிப்பெருகும் இந்த கொரானாவைரஸ்கள் சில சமயங்களில் மனிதனின் மூச்சுக்குழாயிலும், நுரையீரலிலும் தொற்றிக்கொண்டுவிடுகின்றன. அவ்வாறு கொரானா வகை வைரஸ்கள் தொற்றுவதால், சளி, இருமல் உள்ளிட்ட சாதாரண சுவாசநோய்கள் மனிதனுக்கு உண்டாகின்றன என்றுதான் மருத்துவ உலகம் கடந்த 2002 ஆண்டுவரை நம்பிக்கொண்டிருந்தது. 

ஆனால், 2003 இல் (சீனாவில்) வௌவால்களில் தோன்றிய வைரஸொன்று எப்படியோ, மனிதவுடலுக்குள் புகுந்து கொண்டு கடுமையான நுரையீரல் நோய்களை உண்டாக்கியதோடு,  ஒட்டுவாரொட்டியாகப் பரவி நூற்றுக்கணக்கானவரை கொன்றொழித்தது. அதற்கு, சார்ஸ் (SARS-Cov-Severe Acute Respiratory Syndrome-Corona virus) வைரஸ் என்று பெயரிட்டதோடு, அது கொரானா குடும்பத்தைச் சார்ந்தது என்று ஆய்ந்து அறிந்துகொண்டபோதில் உலகமே விக்கித்துப்போனது. 'விடாது கறுப்பு' என்பது போல, 2012 ஆம் ஆண்டில் இதே குடும்பத்தைச் சார்ந்த இன்னொரு வைரஸ் ஐரோப்பிய கிழக்கத்திய நாடுகளில் உருவாகித் தொலைத்தது. அந்தவேளையில், வர்த்தகப்பயணமாக அந்நாடுகளுக்கு வந்த தென்கொரியப் பெருவணிகரொருவரைத் தொற்றிக்கொண்டு அவருடன் தென்கொரியா பயணித்தது. ஊர்திரும்பிய அவருக்கு வந்திருப்பது கொரானா வைரஸ்த்தொற்றுதான் என்று கண்டுபிடிப்பதற்குள், மருத்துவர், செவிலியர் தொடங்கி நாடு முழுவதும் பரவிவிட்டது. மெர்ஸ் (MERS- CoV- Middle East Respiratory Syndrome- Corona virus) கொரானா என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸைக் கண்டறிந்து அழிக்க தென்கொரிய நாடு கொடுத்த விலை நூற்றுக்கணக்கான மனிதவுயிர்கள்.

கடந்த டிசம்பர் 2019 இல், தெற்கு சீனாவின் வுஹாங் மாநகரத்தின் கடலுணவுச் சந்தையொன்றில் உருவானதாகக் கருதப்படும் இந்தப் புதுவகை (Novel) வைரஸும் கொரானா குடும்பத்தைச் சார்ந்தது என்று கடந்தகாலப் படிப்பினைகள் மூலமாக அறிந்திருந்தும் அதிதீவிர முயற்சிகள் எடுக்காமல் விட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாயினர். முன்னெடுப்பு நடவடிக்கைகளை விட வேகமாக வைரஸ் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. எனினும்,  முழுமுயற்சிகள் எடுக்கப்பட்டு நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தபட்டது. உலகமே அரண்டுபோய், ஆராய்ச்சிகளை வேகவேகமாக முடுக்கிவிட்டுக்கொண்டிருந்தன. இதுவரைக்கும் நாற்பது ஆராய்ச்சிக்கட்டுரைகள், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து Science, Nature உள்ளிட்ட அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளன. 

ஆனால், நாமோ, வைரஸைக் கட்டுப்படுத்த வாட்சாப் வாயர்களின் புரளிகளை, பஞ்சாங்கத்தில் அன்றே வைரஸ் வருமென்று கணித்திருக்கிறாரென்று புழுகிணிகள் அவிழ்த்து விடுவதை வாய்பிளக்கக் கேட்டுக்கொண்டும், உடலெங்கும் பசுஞ்சாணம் பூசிக்கொள்ள, கோமியம் குடிக்கச்சொல்லும் பக்தப்பதர்களின் பரிந்துரைகளைப் பரந்து உலகெலாம் பரப்பி நம் அறிவியலறிவை உலகமே காறித்துப்பினாலும் கவலையின்றிப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். வைரஸ் துகளின் உள்ளும் புறமும் இருக்கும் புரதங்கள் யாவை? அவற்றை எவ்விதம், எவ்வகை மருந்தைச் செலுத்தினால் துகளைச்சிதைக்கலாம்? கொரானா குடும்பத்தில் இருக்கும் மற்ற வைரஸ்களுடன் இந்த கோவிட்-19 வைரஸின் மரபணு மட்டும் எவ்வாறு மாறுபடுகிறது என்றெல்லாம் சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதை விடுத்து, பவளமல்லிச்சாற்றுக்கு வைரஸ் கட்டுப்படுமென்று ஆருடம்கூறும் டுபாக்கூர் ஹீலர்களை வளர்த்துவிடுகின்றன நம்மூர் ஊடகங்கள். இப்போது, தம்முடைய பப்பெல்லாம் கொரானாவிடம் வேகாது என்று தெரிந்தவுடன், சந்துபொந்தெல்லாம் ஓடியொளியச் சொல்கின்றன.

உலகச்சுகாதார நிறுவனம் (WHO) என்றுமில்லாதவாறு, அவசரநிலையை அறிவித்திருக்கிறது. 2012 இல் 
MERS-CoV தொற்றினால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட தென்கொரியா, COVID-19 என்னும் வைரஸ் பேரரக்கன் ஆயிரக்கணக்கானோரைத் தாக்கியபோதும், "கேட்டினும் உண்டோர் உறுதி" என்று உறுதியுடன் அதிவிரைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, தம் மக்களை வெகுவிரைவாக பேரழிவிலிருந்துக்காத்தது. 

சரி இப்போது நாம் என்ன செய்யலாம்?

கோவிட்-19 வைரஸ் பற்றியும், அதன் பண்புகள் மற்றும், மேலும் பரவாமல் தடுக்க எடுக்கவேண்டிய முன்னெடுப்புகள் பற்றியும் நானறிந்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

கோவிட்-19 வைரஸ் என்பதொரு உயிரற்ற மிக நுண்ணிய துகளாகும். உருண்டை வடிவில் இருக்கும் இந்தத்துகள்களின் விட்டம் 0.1 முதல் 0.2 மைக்ரான். அதாவது, புகையில் இருக்கும் கரித்துகள்களின் விட்டத்தை விட நூறுமடங்கும், ஏனைய நுண்ணுயிரிகளில் ஒன்றான பாக்டீரியாவின் விட்டத்தைவிட பத்துமடங்கு சிறியது என்பதால், சாதாரண முகவுறை அணிவதால் வைரஸ் பரவலையோ, தொற்றையோத் தடுக்கமுடியாது. உலக உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு (FDA) பரிந்துரைக்கும் N-95 வகை முகவுறைகள் மட்டுமே, கோவிட்-19 வைரஸ்களை வடிகட்டவல்லவை.

நம்முடைய உடல்மீதோ, அணிந்திருக்கும் துணிகள் மீதோ வந்துசேரும் கோவிட்-19 வைரஸ்கள் குறைந்தது ஆறுமணி நேரமாவது அவ்விடத்தில் சிதைபடாமல் இருக்கும். ஆனால், மரம், நெகிழி அல்லது மாழைப்பரப்புகளின் மீது மூன்று நாள்கள் வரை சிதைபடுவதில்லை. அதனால்தான், வீட்டுக்குள் இருக்கும்போதும் சோப்புப்போட்டுக் கைகழுவச் சொல்கிறார்கள். 

ஏன் சோப்புப்போட்டுக் கைகழுவ வேண்டும்? 

கோவிட்-19 வைரஸின் மேற்சுவரானது, கொழுப்பு அமிலங்களால் ஆனது என்பதால், சோப்பிலிருக்கும் கொழுப்பு, மேற்சுவரைக் கரைத்து வைரஸ் துகளை உடைத்துச்சிதைத்துவிடும். ஆகவே, அடிக்கடி சோப்புப்போட்டுக் கழுவும்போது கையிடுக்குகளில் பரவியிருக்கும் வைரஸ் துகள்கள் சிதைந்துவிடும்.

ஏன் அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும்?

கோவிட்-19 வைரஸ்கள் நேரடியாக நுரையீரலைத் தாக்குபவை என்பதால், கால் மணிக்கொருமுறை (வாய்/தொண்டை வறண்டுபோகாமல்) நீர்ம உணவு அல்லது தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது, அவை நுரையீரலுக்கு பதிலாக வயிற்றுக்குச்செல்லும். உணவுச்செரிமானத்திற்காக அங்கே ஊறும் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம், கோவிட்-19 வைரஸ்களைச் சிதைத்தழிக்கும். 

ஏன் வீட்டுக்குள் தனித்திருப்பது நல்லது. 

இதுவரை, பெரும்பாலும் சுவாசநோய்களால் அவதியுறும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்தாம் கோவிட்-19 வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமியர் மற்றும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆகவே, பேரச்சம் தேவையில்லை. அதே சமயத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நலன்கருதி தற்காலிக சமூக விலக்கம் செய்துகொள்வது நமக்கும் நல்லது. நம் சுற்றத்துக்கும் நல்லது. 

செ. அன்புச்செல்வன்
21/03/2020

Saturday, February 22, 2020

ஆன்மீக அறிவியல்

இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.

சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும்.
இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.

மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான். 

பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை  நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.

போலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர்.  ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.

மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும், நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக "இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.

இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓதுவது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண்டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.

இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.

அமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம் என்பார்கள். இல்லையென்றால் திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்துவிட்டு போய்விட்டார் என்பார்கள்.

ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப்போடுவார்கள். ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டுபோகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம்.

எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச்சுற்றி  இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.

மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

எடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.

அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் இந்த ஆன்மீகத்தில் அறிவியல் உள்ளது என்று ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. 

நன்றி:- வேணுகோபால சங்கர்

Monday, February 10, 2020

தமிழரின் மதம் என்ன?

தமிழரின் மதம் என்ன? 

தமிழர்தான் இந்து, இந்துதான் தமிழர் என்று சில பிதற்றல்கள் அதிகமாகிவரும் நிலையில் இந்த பதிவு அவசியமாகிறது.

தமிழர் நாகரிகம் என்பது மிக பழமையானதும், மேம்பட்ட பண்பாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்த இனமாக இருந்துள்ளது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளது.

ஆனால் தமிழர்களின் உண்மையான மதம் எது என்பது பற்றி பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை அல்லது புரிந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ள கடவுள் பாசம் அவர்களிற்கு இடங்கொடுப்பதில்லை. பலர் இந்துமதம் என்றும் குறிப்பாக சைவம் தான் தமிழர்களது மதம் என்று நம்புகிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அரைகுறை புரிதல் உடையவர்கள் என்பதுதான் உண்மையாகும். கருத்தில் முரண்படுபவர்கள் ஆதாரபூர்வமாக விவாதிக்க வரலாம். 

உண்மையில் இந்து மதம்(வைதீகம்/சண்மதம்/சனாதனம்) என்பது தமிழர் மதம் இல்லை. இது ஆரிய பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டு தமிழர்களிடம் இடைகாலத்தில் திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. எடுத்துக்கூறியும் புரியாதவர்கள் இந்து வழிபாட்டில் சமஸ்கிருதம் ஏன் என்பதற்கு விடையை கூறட்டும். 

சிவனை முழுமுதற் கடவுளாக கொண்ட சிவவழிபாடு ஏறத்தாழ கி.பி ஏழாம் நூற்றாண்டில் தான் மதமாக உருவாக்கப்பட்டது. நாயன்மார்கள் சமய குரவர்கள் சைவ புராணங்கள் எல்லாம் தோன்றியது இந்த காலப்பகுதிகளில்தான். அதற்கு முன்பு இருந்தே ருத்ரன் என்று ஆரியர்கள் வழிபட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழர்களிற்கு மதமாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த காலப்பகுதியில்தான். கி.மு 7ம் நூற்றாண்டுகளிற்குபிறகு தென்னிந்தியா வந்த பார்ப்பனர்கள் கி.பி 4ம் நூற்றாண்டில் வடக்கில் குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தும்வரை பெரிதாக தமிழகத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. குப்தர்கள் காலத்தில்தான் புராண இதிகாசங்கள் சமஸ்கிருதத்தில் எழுத்துரு பெறுகின்றது.. அதன்பின்புதான் இந்துமதம் வேகமாக வளர்கின்றது.

தமிழரின் சங்க இலக்கியங்களில் (கி.மு 4ம் நூற்றாண்டிற்குமுன்) எங்கேயும் சிவனையோ மற்ற இந்து கடவுள்களையோ தமிழர் வழிபட்டதாக எந்த செய்தியும் இல்லை. வேண்டுமானால் இன்னொரு பெயரை இன்னொரு பெயரோடு தொடர்புபடுத்த வேண்டுமானால் செய்வார்கள். உதாரணமாக மாயோன்தான் கிருஷ்ணன் என்றும் சேயோன்தான் முருகன் என்பதுபோன்றும். இன்றைக்கு திருக்குறளில்கூட இந்துக்கடவுளரின் பெயர்களை முடிச்சுப்போட ஆரம்பித்துவிட்டார்கள்.

சங்க காலத்திற்கு பின்பு சங்கம் மருவிய காலம் கி.மு 100 - கி.பி 600 நூற்றாண்டளவில் ஆசிவகம், சமணம், பௌத்தம் போன்றவை தமிழகதில் செழிப்புடன் வளருகின்றது. இவையும் வடக்கில் இருந்துதான் வந்ததாக இருந்தாலும் இம்மதங்கள் தோன்ற மூலவேராக இருந்த மெய்யியல் கருத்துக்களில் பெரும்பாலும் தமிழர்களின் மெய்யியல் சிந்தனையே ஆகும். (ஆசீவகம் வடக்கில் இருந்துதான் வந்ததா அல்லது இங்கேயே உருவாகியதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. தெரிந்தவர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் உதவியாக இருக்கும்)
இருப்பினும் இம் மதங்கள் வலியுறுத்தும் கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் தமிழர்களிடம் திணிக்கப்பட்ட ஒன்று.

தமிழர்கள் ஏதாவது ஒரு வகையில் புலால் உண்ணுபவர்களே, தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்கும் (அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) ஏற்றவாறு மாமிசம் சாப்பிடும் பலி கொடுத்தும் வந்துள்ளனர் என்பதும் இலக்கிய நூல்களில் உள்ளது, இவை பாவத்திற்குறிய செயல்களாக கருதப்படவில்லை.

தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான தொல்காப்பியத்தில் நடுகல் வழிபாடு மற்றும் திணை நிலம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய சங்க கால நூலாகும். 

நடுகல் வழிபாடு என்பது முன்னோர்களின் (வீரமரணம் அல்லது முன்னோர்களில் சிறந்தவர்கள்) நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. இவையே பின்நாட்களில் குலதெய்வ வழிபாடாகவும் மாறியது.

மேலும் தொல்காப்பித்தில்..

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

என்று அக்கால தமிழர்கள் மதசார்பற்று இயற்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்று கூறுகிறது. இதைதவிர மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இதுவே பின்நாட்களில் ஆரிய புராண இதிகாசக்களில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற மூதாதையர்களை முருகன், விஷ்ணு, இந்திரன், வருண பகவான் என்பதுபோல் ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப்போட்டு மாற்றப்பட்டுள்ளது. ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போட்டு தமிழரை அழிக்க தமிழரின் கலாச்சாரத்தையே பயன்படுத்தும் ஆரிய முறை. இதுதான் உள்வாங்கி செரித்துக்கொள்ளும் ஆரிய முறை. சங்ககால தமிழ் மக்கள் வாழ்விற்கும் இன்றுள்ள இந்து கடவுள்களிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உள்ளது என்பவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து இந்த கடவுளர்களின் பெயரை ஒருமுறை காட்டிவிடவும். சேயோன்தான் ஸ்கந்தன் மாயோன்தான் விஷ்ணு எனும்வேலை வேண்டாம். 

இதுமட்டுமின்றி தொல்காப்பியத்தில் பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்களும் உள்ளது.
இவ்வாறு மெய்யியலை உணர்ந்து, இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் மெய்யியல் தேடலில் உருவானதே பல கண்டுபிடிப்புகளான மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும் பல. ஆனால் இன்று ஆரிய மதம் எனும் வலையில் சிக்கி மெய்யியலை மறந்து சாதிகளாக பிரிந்துகிடக்கிறோம். சாதி வைத்திருந்தால்தான் அவன் தமிழன் என்பதுபோல் சில அரசியல் வியாதிகள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக உருவாகியுள்ளார்கள். இது மீண்டும் ஆரிய மாயைக்குள் சிக்கும்செயல்.

மீண்டும் பழந்தமிழரின் மெய்யியல் வாழ்கையை பின்பற்றி வந்தால் அறிவையும், மனதையும், உடலையும் செழுமைபடுத்தி இவ்வையுலகம் வியக்கும் வகையில் சாதி மதம் கடவுள் அற்று வாழ்வோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதற்கு தமிழருக்கு தமிழர் என்றால் யார் அவன் உண்மையான அடையாளம் என்ன என்பது புரியவேண்டும். 

ஆரியர்கள் எவ்வாறு தமிழரை உள்வாங்கி செரித்துக்கொண்டார்கள் என்பதுபற்றிய விரிவான பதிவு ஏற்கனவே எமது குழுவில் இட்டுள்ளேன். அதையும் பாருங்கள்.

 நன்றி :- வேணுகோபால் சங்கர்