தொகுப்புகள்

Search This Blog

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, February 10, 2021

நாத்திகர்களின் தெளிவான பார்வை!

* நாத்திகர்களின் தெளிவான பார்வை!
கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். ஆக நாத்திகன் நேர்மையாளனாகவும் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.

நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக அவர்கள் சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் மத புத்தகங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.

நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?

“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது

ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.

மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.

பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.

பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவேம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்..

:- மகி

Thursday, June 6, 2019

இந்தி திணிப்பு - நம் வாழ்வாதார பிரச்சனை

இந்திப் படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?

பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?

இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?

பெற்றோர் எல்லாரும் இந்தி வேண்டுமென்று சொல்லும்போது அதைத் தடுக்க நீங்கள் யார் ?

தமிழ் மொழி, தமிழ் மொழினு சொல்லி, சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?

இந்திக்கு ஆதரவாக பேசுபவர்கள் முன்வைக்கும் வாதங்களே இவை. நியாயமாக தெரியும் வாதங்கள். உணர்வுப்பூர்வமான வாதங்கள்.

நாம் உணர்வுப்பூர்வமாக இதனை அணுகாமல், தமிழ் மொழி என் உயிர் என்ற நிலையில் இருந்து அணுகாமல், பொருளாதாரம் (வரவு - செலவு), யதார்த்தம் என்றளவில் இந்தி மொழி பயன்பாட்டை ஆராய்வோம்.

நாடு என்பது உண்மையில் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே குறிக்கும். நாடுகள் தோன்றுவதற்கு முன் சிறு, சிறு மக்கள் குழுக்கள் தங்கள் இடத்தில் தங்களுக்கான பொருளாதாரத்தை நிறுவிக் கொண்டனர். அவர்கள் செழிப்படைந்தவுடன், பக்கத்தில் உள்ள குழு படையெடுத்து வந்து செழிப்பான பொருளாதாரத்தைப் பிடித்துக்கொள்வார்கள். இது ஒரு இயல்பான சுழற்சி. மனிதக் கூட்டம் மட்டுமின்றி மிருகங்களின் எல்லையுமே இப்படித்தான் வரையறுக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிவோம். வலுத்த மிருகமே பொருளாதாரத்தை ஆளும்.

பொருளாதாரமே நாடு என்பதால், நாடு பிடிப்பதிலும் வரவு - செலவுக் கணக்குகள் உண்டு. போர் தொடுக்க 1000 ரூபாய் செலவாகும் என்றால், போரில் வெற்றி பெற்றால் அந்த நாட்டில் இருந்து 2000 ரூபாய் கிடைக்கும் என்றால் மட்டுமே போர் தொடுக்கப்படும். லாபம் இருந்தால் மட்டுமே போர் நடக்கும். அதைப் போல அந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கும், எதிரிகளை எதிர்த்து போரிடலாமா? சரணடையலாமா? என்பதும் இந்த வரவு - செலவை வைத்தே கணக்கிடப்படும். இராஜராஜன் சோழன் வடக்கே செல்லாமல், கிழக்காசியவிற்கு சென்றதற்கும் இந்த கணக்குகளே காரணமாக இருந்திருக்ககூடும். மொத்தத்தில், பொருளாதார கணக்குகள், பொருளாதாரத்தைப் பிடிப்பதற்காக நாடு பிடிப்பதாகும்.

ஆக, மனிதனோ, மிருகமோ, பொருளாதாரமே நாடு.
நாட்டுப் பற்று, தேசிய உணர்வு, மொழி, பண்பாடு, வரலாறு இவையெல்லாம் அந்த பொருளாதாரத்தைக் காத்து நிற்பவைகள் மட்டுமே. ஒரு நாட்டின் தலையாய கடமை, ஒரு அரசின் தலையாய கடமை தம் நாட்டின் பொருளாதாரத்தை அன்னிய சக்திகளிடம் இருந்து காப்பதே ஆகும்.

இந்நிலையில், இந்தி என்பது மக்கள் பயன்பாட்டிற்கும், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது என்று எண்ணுகிறிர்களா? சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டுப் போராடியவர்களை வாயிலேயே சுட்டுக் கொன்ற அரசுகளுக்கு, மக்கள் நலன் மேல் அவ்வளவு அக்கறையா என்ன?

நிச்சயம் கிடையாது. இந்தியா என்பது ஒரு நாடு கிடையாது, நாடுகளின் ஒன்றியம். அதாவது, இந்தியா என்பது ஒரு பொருளாதாரம் கிடையாது, பொருளாதாரங்களின் கூட்டமைப்பு. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கரான்சி இருந்தால் (டாலர் என்று வைத்துக்கொள்வோம்), 1 தமிழ் நாடு டாலர் 30 இந்தியா ரூபாய்க்கு  ஈடாக இருக்கக்கூடும். ஏனெனில், தற்பொழுது பிகாரில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும், தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பும் வெவ்வேறு. இரண்டும் வெவ்வேறு பொருளாதாரங்கள். இந்தியை அனுமதித்தால், தமிழர் வேலையெல்லாம் மற்றவர்களுக்கு செல்வது இந்த வேறுப்பாட்டால்தான். உதாரணம் - கார் ஒட்டுவதற்கு குறைந்த சம்பளத்திற்கு மற்ற மாநிலத்தில் இருந்து ஆள்கள் கிடைப்பார்கள். தமிழர்களும் அந்த குறைந்த சம்பளத்திற்கே வேலை செய்ய வேண்டும் அல்லது வேறு துறைக்குச் செல்ல வேண்டும். இப்படி எல்லாத் துறையிலும் நடக்கும் பொழுது நம் பொருளாதாரமே கிழ் இறங்கும், நம் வசதி வாய்ப்புகள் குறையும். பிகாரின் குறைந்த பொருளாதாரம் தம் லாபத்திற்காக, தமிழர் பொருளாதாரத்தைக் காவு கேட்கும்.

இப்பொழுது ஆரம்ப பத்திகளை மீண்டும் படிக்கவும். பொருளாதாரங்களைப் பிடிப்பதே, நாடு பிடிப்பதாகும்.

இந்தி படிச்சா இப்போ என்ன கெட்டுப்போய்டும்?

தமிழ் நாட்டின் பொருளாதாரம் கெட்டுப் போய்விடும். கைவிட்டுப் போய்விடும்.

பணக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள், ஏன் ஏழை அரசு மாணவனை மட்டும் தடுக்கிறார்கள்?

இந்தியை அனுமதிப்பதால் தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திற்கு நேரடி ஆபத்து என்கின்ற பொழுது தமிழ் நாடு அரசு தம் பள்ளிகளிலேயே இந்தியை அனுமதிக்க இயலாது. தேவையும், விருப்பமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

இந்தி படித்தால் இந்தியா முழுவதும் எங்களால் வியாபாரம் செய்ய முடியும், வேலை செய்ய முடியும், அதை ஏன் தடுக்கிறிங்க?

நீங்கள் ஒருவர் இந்தி படித்து வெளிமாநிலங்களுக்கு செல்லலாம் என்று நினைத்தால், அங்கிருந்து அதே இந்தி முலம் 10 பேர் உள்ளே வருவார்கள் (நாம் 8 கோடி, அவர்கள் 100 கோடிக்கு மெல்). உதாரணத்திற்கு, தற்பொழுது தனியார் துறையில் மேலாளர் பதவி தவிர்த்து பெரும்பாலும் வேலையில் இருப்பவர்கள் தமிழர்கள், முக்கியமாக தென் மாவட்டங்களைச் சார்ந்தோர். இதற்கு முக்கிய காரணம் சென்னையில் இந்தி இல்லை என்பதால் வட நாட்டினர் சென்னைக்கு வர கடைசி முக்கியத்துவமே தருவர், ஆகையால், அதிகளவு போட்டி கிடையாது. 10 பேருக்குள் மட்டுமே போட்டி. 10 பேருமே தமிழர்கள். இந்தி படித்தால் 100 பேருக்குள் போட்டி. 90 பேர் தமிழர் அல்லாதவர்.போட்டிக்கு நாம் தயங்கவில்லை.  யதார்த்தத்தைப் பேசுவோம்.

இந்த உதாரணம் வியாபாரத்திற்கும் பொருந்தும்.

மொத்தத்தில் இந்தி படித்தால் வெளி மாநிலத்திற்கு சென்று வியாபாரம், வேலை செய்வது நடக்குமா என்பது தெரியாது, ஆனால், தமிழ்நாட்டில் வேலை, வியாபாரம் தமிழர்களுக்கு இல்லாமல் போகும்.

பெற்றோர் எல்லாரும் இந்தி வேணும்னு சொல்லும் பொழுது அதைத் தடுக்க நீங்க யார்?

8 கோடி மக்களும் விரும்பினாலும், தமிழ் நாட்டுப் பொருளாதாரத்தை காப்பதற்காக தமிழ் நாடு அரசு இந்தியை அனுமதிக்கக் கூடாது. அரசின் தலையாயக் கடமை இது. தமிழ் நாட்டு அரசு மட்டுமின்றி, உலகில் எந்தவொரு அரசும் இதையே செய்யும்.

தமிழ் மொழி, தமிழ் மொழியென்று சொல்லிச் சொல்லியே தமிழர் வளர்ச்சியை ஏன் தடுக்கிறீங்க?

தமிழ் மொழி என்பது வெறும் மொழி மட்டுமின்றி பல்லாயிரம் வருடங்களின் பொருளாதார ஆளுமைகளை உள்ளடங்கியது. தமிழர்கள் பல பொருளாதாரங்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். வலிமையாக இருந்துள்ளனர். தற்பொழுது, தமிழ் மொழி, தமிழ் மொழி என்றுரைப்பது மீண்டும் நம் வலிமையைப் பெற்றுச் சக்தி மிக்க பொருளாதாரமாக மாறுவதற்குத்தான். அதன் வழி நம் சரியாகவே பயணிக்கிறோம் என்பது கண்கூடு.

மொத்தத்தில், போரிட்டு நம் பொருளாதாரத்தைப் பிடிக்காமல், இந்தி திணிப்பு முலம் நம் பொருளாதாரத்தை, நம் வாழ்வாதாரத்தை, நம் வளத்தை கைப்பற்றப் பார்க்கிறார்கள். அதாவது, செலவே இல்லாமல் வரவை எளிதாக இந்திய ஒன்றியம் பெயரில் அடையப் பார்க்கிறார்கள்.

சில கேள்விகள் இயல்பு,

இந்தியப் பொருளாதாரத்துடன் தமிழர் பொருளாதாரம் இணைந்தால், தமிழருக்கு தீங்கு என்று எப்படி நிச்சயமாக சொல்றிங்க?

இரு பொருளாதாரங்கள் இயல்பாக இணையலாம். கட்டாயப்படுத்தினால், இரண்டில் ஒரு பொருளாதாரத்திற்கு நட்டம். அப்படி நட்டம் என்பதால்தான், கட்டாயம் உள்வருகிறது. உலகளவில், இரு பொருளாதாரங்கள் பரிவர்த்தனைக்கு Trade treaties போடுவார்கள். அதாவது, தொழில் ஒப்பந்தங்கள். இரு நாட்டு அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆலோசித்துப் போடப்படும். இரு தரப்புக்கும் நட்டமின்றி பார்த்துக் கொள்ளப்படும். ஆனால், இந்தியாவில் தன்தோன்றித்தனமாக ஜி.எஸ்.டி, சாகர்மாலா, ஹட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்றவைகள் கட்டாயமாக தமிழர் பொருளாதரத்தில் திணிக்கப்படுகிறது. இதில் எப்படி தமிழருக்கு நன்மை நடந்திட முடியும்?

ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்கள் இந்தியை அனுமதித்த பின் ஏன் தமிழ்நாடு மட்டும் முரண்டுப்பிடிக்கிறது?

அவர்கள் பொருளாதாரத்திற்கு இந்தி மொழி நன்மை செய்கிறது. ஆகையால் அனுமதித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, கேரளா பொருளாதாரத்தில்  படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு. இந்நிலையில், தங்கள் மக்களுக்காக அடுத்தவர் பொருளாதாரத்தை அண்டி வாழ வேண்டி உள்ளதால், அவர்கள் இந்தி படிக்க வேண்டியுள்ளது. கர்நாடகம், ஆந்திராவிலும் இதே நிலைதான். ஏன் மொழிக்காக உயிரே தரும், மொழியால் தம் பாதியில்ஒரு நாடே உருவான மேற்கு வங்காளத்திலும் இந்திக்கு கடுமையான எதிர்ப்பு இல்லை. ஏனெனில், அவர்கள் பொருளாதாரத்திற்கும் அது நன்மை செய்வதாக உள்ளது.

மொத்தத்தில், இந்தித் திணிப்பு என்பது மொழிப் பிரச்சனை இல்லை, பொருளாதாரப் பிரச்சனை. நம் வாழ்வாதாரப் பிரச்சனை.

எதிர்ப்போம்...

எழுத்து,
பா.ச. பாலசிங்

சரிபார்ப்பு
ப. உதயகுமார்

Thursday, February 7, 2019

*யார் இந்துக்களுக்கு எதிரி?*

*யார் இந்துக்களுக்கு எதிரி?*

இதுவரை வழங்கப்பட்டிருக்கும் 48 பாரத் ரத்னா விருதுகளில் 23 விருதுகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் பிராமணர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை விருதுகள். பிற சாதி இந்துக்களுக்கு யார் எதிரி?

தமிழகத்திலிருந்து கிரிக்கெட் விளையாடச் சென்றவர்களில் பிராமணர்கள் அல்லாதவர்கள் எத்தனை பேர்?

ஹெச்.ராஜா பாஜகவின் தேசியச் செயலாளர் ஆனால் தி.நகரில் இருக்கும் பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு எத்தனை முறை சென்றிருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா? நாடார் பெண்ணான தமிழிசை தலைவராக இருக்கும் வரை அந்த அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன் என்று அவர் பிடிவாதம் பிடிப்பது உண்மையா இல்லையா? விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டால் புரியும் யார் இந்துக்களுக்கு எதிரி என்று.

தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது கூட அமர்ந்திருந்த சங்கராச்சாரியார் தமிழர்களுக்கு எதிரி இல்லையா?

கி.பி. 1650 வரை தமிழ் பண்டாரங்கள் பூசை செய்த பழநி ஆண்டவருக்கு ராமப்ப அய்யர் என்ற திருமலை நாய்க்கரின் படைத்தளபதி ‘பிராமணரில்லாதவரிடம் பிரசாதம் வாங்க மாட்டேன்’ என்று சொல்லி பார்ப்பனர்களைக் கோவிலுக்குள் கொண்டு வந்து பண்டாரங்களை வெளியில் அனுப்பினார். தமிழர்களுக்கு யார் எதிரி?

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மட்டும் சுமார் 5000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. குடமுழுக்குக்கு என திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட தொகை 550 கோடி ரூபாய்கள். அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 140 கோடி ரூபாய். யார் இந்துக்களுக்கு எதிரி?

மணமகளிடம் திருமணத்தின் போது ‘நீ முதலில்சந்திரனுக்கு உரியவள்; பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான்; அவனுக்குப் பிறகு அக்னி உன்னை அடைந்தான்; இனி நான்காவதாக இவன் உனக்குக் கணவன் என்று மந்திரம் சொல்லி அதைத் திருமணத்தில் ஓதி இந்துப் பெண்களை விபச்சாரிகளாக மாற்றி வைப்பது யார்? யார் இந்துக்களுக்கு எதிரி? (இந்த விளக்கத்தைக் கொடுத்தவர் சங்கராச்சாரியார்)

காலங்காலமாக தமிழர்களின் மரபு சார்ந்த கோவில்களில் ஆடு கிடா வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்து தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க முயன்றது யார்?

இந்துக்களுக்கு எதிரி யார் என்று புரிகிறதா? காலங்காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த கூட்டம் இன்றைக்கு தமிழக அரசையும் அடிமைப்படுத்தியிருக்கிறது.

தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு நெடுகவும் தமிழர்களுக்கும், சாதி இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்டர்வர்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து, ஏமாந்தவர்களை அடிமைகளாக்கி, , தமிழர்களின் உரிமைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த அதே சிறு பிராமணக் குழுதான் ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று குரல் எழுப்பி, ஏமாற்றி ஓட்டு வாங்கும் வித்தையைச் செய்து கொண்டிருக்கிறது. இதனைச் சுட்டிக் காட்டுகிறவர்களையெல்லாம் ‘இந்துக்களின் எதிரி’ என்று முத்திரை குத்துகிற பார்ப்பனர்களும், அவர்களது பாஜகவும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் கட்சிகளும்தான் தமிழர்களுக்கும் தமிழகத்தைச் சார்ந்த இந்துக்களுக்கும் எதிரி.

தமிழர்களே விழிப்பாக இருங்கள்.
#கோவைகவிதா

Sunday, August 5, 2018

பாரம்பரிய பிரசவம் எப்படி நடந்தது ?

இந்திய மாதா - காதரீன் மேயோ

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து , தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத்  துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது. இந்தியாவில் அந்த புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது...

1. பிரசவம் என்பது ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வு. வழக்கம் போல தீட்டால் ஏற்ப்படும் கொடுமைகள் அனைத்தும் நடந்தன.

2. பிரசவம் பார்ப்பது மருத்தவச்சி என்ற ஒரு தனி சாதி பெண்கள். தீண்டப்படாத சாதியினர்.

3. பிரசவம் ஒரு தீட்டான நிகழ்வாய் இருப்பதால், அது ஒரு தனியான, ஒதுக்குப்புறமான, உபயோகமற்ற, வெளிச்சமும் காற்று வசதியும் அற்ற ஒரு அறையில் தான் நடக்கும். தீட்டு காரணமாய் பெரும்பாலும் பழைய அழுக்கான துணிகளே பயன்படுத்தப் படும்.

4. பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள் பாரம்பரியமாக  தாங்கள் கேள்விப்பட்ட முறைகளையும், அப்போது தங்களுக்கு உதிக்கும் திடீர் யோசனைகளையும் பயன்படுத்தியே பிரசவம் பார்த்தனர்.

5. வலி வந்து நேரமாகி விட்டால் தங்கள் கைகளை உள்ளே விட்டு சிசுவின் கையோ காலோ எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து வெளியில் இழுப்பர். ஒருவரால் முடியாவிட்டால் இரண்டு மருத்துவச்சிகள் முயல்வர். நிச்சயம் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒன்றாவது போய் விடும்.

6. வலி வந்து தாமதமாகி விட்டால் பெண்ணை சுவர் ஓரமாய் நிறுத்தி வைத்து மருத்துவச்சி  ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் முட்டுவர். அல்லது கைகளால் குத்துவர்.

7. பிரசவம் முடியும் வரையிலும் பெண்ணுக்கு எந்த ஆகாரமும் இல்லை. வலி நான்கு நாட்கள் இருந்தாலும் ஆகாரம் இல்லை.

8. பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக்  காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

9. தீட்டு காரணமாய் பிரசவம் அன்னியர் கண் படாமல் இருட்டறையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் நடக்கும். மூடிய அறையில் புகை நிறைந்திருக்கும் சமயத்தில் அன்னியர் யாராவது பார்த்து விட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவச்சி உடனே சில துர்நாற்றம் தரும் புகையை உண்டாக்குவாள். துர்நாற்றம் தீட்டை போக்கி விடும்.

10. பிரசவத்தில் பெண்ணின்  உயிர் போய் விடும் என்ற சந்தேகம் வந்தால் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூள் நிரப்பப்படும். இறந்த பின் அவள் பேயாக மாறி வழி கண்டுபிடித்து வந்து பழி வாங்கலைத் தடுக்கவே இந்த முறை.

11. அதே போன்று பேயாய் மாறி பழி வாங்கலைத் தடுக்க பெண்ணின் கைகளை தரையில் வைத்து ஆணியடித்தலும் உண்டு. சற்று பிழைக்க வாய்ப்புள்ள பெண்களும் இதனால் இறந்து போயிருப்பார்.

12. தொப்புள் கொடி அறுக்க இரும்புத் தகடோ, கண்ணாடித் துண்டோ , மூங்கில் கழியோ உபயோகப் படுத்தப்படும்.

13. அறுபட்ட தொப்புள் மீது சாம்பலோ, சாணியோ, மண்ணோ தடவப்படும்.

மருத்துவம் வளர்ச்சியுறாத காலத்தில் உலகம் முழுதும் பிரசவங்கள் பாதுகாப்பாய் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரை குறை வைத்தியங்களே நடந்திருக்கும். ஆனால் இந்தியாவில் பிரசவம் ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வாய் இருந்ததால் உலகில் எந்த பகுதியிலும் அனுபவிக்காத கொடுமைகளை இங்கே பெண்கள் அனுபவித்துள்ளனர்.

இதில் தீட்டு இல்லாதிருந்திருந்தால் , சமூகத்தின் பொது அக்கறை இதில் இருந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு வெளிச்சமுள்ள காற்றோட்டமுள்ள இடத்திலாவது பிரசவம் நடக்க வேண்டும் என்ற அறிவாவது பெற்றிருப்பர். தீட்டு பிரசவம் குறித்த ஒரு பொது அறிவை வளர விடாமல் தடுத்துவிட்டது.

சாதியத்தையும், பார்ப்பனியத்தையும், தீட்டையும், இந்து மதத்தையும் பிரித்துப் பார்ப்பது முடியாத ஒன்று.

Sunday, June 3, 2018

கலைஞரை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக படியுங்கள்

இப்பதிவை எழுத உடன்பிறப்பு #பா.அருண்குமார்,பொள்ளாச்சிArun Kumar அவர்களுக்கு 90 நிமிடங்கள் ஆனது.. ஆனால் நீங்கள் இரண்டு நிமிடங்களில் படித்துவிடலாம்.. கலைஞரைப் பிடிக்கும் என்பவர்கள் விருப்பமிருப்பின் படியுங்கள்.. பிடிக்காது என்பவர்கள் கட்டாயம் படியுங்கள்...

இன்று கலைஞரின் 95ஆவது பிறந்தநாள் என்ன சொல்லி வாழ்த்த? எப்படி வாழ்த்த? எப்படி வாழ்த்தினாலும் அது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.. கலைஞர் ஓர அரசியல்வாதி மட்டுமே என்றால் அவர் மேற்கொண்ட சாதனைகளை மட்டும் கூறி வாழ்த்தலாம்.. கலைஞர் ஒரு கதாசிரியர் மட்டுமே என்றால் அவரின் திரைப்படங்களை புகழ்ந்து வாழ்த்தலாம்.. கலைஞர் ஒரு நூலாசிரியர் மட்டுமே என்றால் அவரின் வரிகளை மேற்கோளிட்டு வாழ்த்தலாம்.. ஆனால் இவை மட்டும் தான் கலைஞர்? கலைஞர் ஓர் அரசியல்வாதி, முற்போக்குவாதி, கதாசிரியர், முதல்வர், கட்சித்தலைவர், நூலாசிரியர், முத்தமிழ் அறிஞர், பாடலாசிரியர், கவிஞர், நல்ல ரசிகர், இவற்றையெல்லாம் விட அவரே அடையாளப்படுத்திக் கொள்வதைப் போல ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் கலைஞர்..

வசனகர்த்தாவாக கலைஞர் :

வசனகர்த்தாவாக புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர்.. அந்தக் காலத்திலேயே மிகத் துணிச்சலாக வசனம் வைத்தவர் அவர்.. கடவுளையும் பூசாரியையும் மக்கள் மிகவும் வணங்கி வந்த காலகட்டத்தில் "அடேய் பூசாரி" என்றும் "அம்பாள் என்றைக்கடா பேசினாள்" என்றும் அன்றே பகுத்தறிவை ஊட்டியவர் அவர்

கதாசிரியராக கலைஞர் :

கலைஞரின் கதைகள் என்றுமே புரட்சியின் விதைகளாகவே இருந்துள்ளன.. புராண படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமத்த காலத்தில் சமூகப் படங்களை கொடுத்தவர் கலைஞர்...

பாடலாசிரியராகக் கலைஞர்:

பாடல் எழுதுவதிலும் வல்லவர் கலைஞர்.. "காகித ஓடம்" பாடல் அவர் மெட்டுக்கு எழுதிய பாடல்.. எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதுகையில் வாலி முதல் வரியை இப்படி எழுதினார் "நான் அளவோடு ரசிப்பவன்" இரண்டாவது வரி வரவில்லை.. அதிக நேரம் யோசித்த வேளையில் பாடல் எழுதும் தளத்திற்கு வந்த கலைஞர் இரண்டாவது வரியைச் சொன்னார் "எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று.. ஆக வாலிக்கே வரி கொடுத்தவர் கலைஞர்.. இவை எல்லாவற்றையும் விட 87 வயதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு "செம்மொழி" பாடல் எழுதினார் பாருங்கள் அது தான் சாதனை..

முத்தமிழ் அறிஞர் கலைஞர் :

இயல்,இசை, நாடகம் என மூன்றிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் கலைஞர்.. இதென்ன பெரிய அதிசயம் என்போர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.. வைரமுத்து, வாலிக்கு இசை தெரியும் நாடகம் வராது, ரஜினிக்கு நடிப்பு வரும்(😂😂😂) இசை வராது.. ஆனால் கலைஞர் இம்மூன்றிலும் வல்லவர்

நகைச்சுவை மன்னன் கலைஞர்:

ஒரு முறை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது , தண்ணீர் கூட அவருக்கு கொடுக்கக் கூடாது என்ற நிலை.. அந்நிலையில் கலைஞர் தண்ணீர் கேட்க ஒரு செவிலியர் ஸ்பூனில் சிறிதளவே தண்ணீர் கொடுக்க "ஏம்மா உன் பேரு காவிரியா கொஞ்சூண்டு குடுக்கற" என்று இயலாமையிலும் ரவுசு விடுபவர் கலைஞர்..

தன்னை கைது செய்ததைக் குறித்து இப்படி சொன்னார் "என்னை கைது செய்யும் போது என் கையை முறுக்கு முறுக்கென முறுக்கினார் ஒரு காவலர்.. அவர் பேர் பின்னர் தான் தெரிந்தது.. அவர் பேர் முருகேசன்"..

கலைஞர் ஓர் ஆகச் சிறந்த தத்துவவாதி :

கலைஞரின் சில தத்துவங்கள் உலகில் எவராலுமே சொல்ல முடியாதவை ..

"மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றத் தொடங்குகிறது"

என்ற அவரின் தத்துவத்தை உளவியலின் தந்தை எனப்படும் சிக்மண்ட் ஃபிராய்டால் கூட சொல்ல இயலாது என்பதே உண்மை..
அதே போல் "உண்மையை மறைப்பது என்பது விதையை மண்ணினுள் புதைப்பதைப் போன்றது" என்று எளிமையாக அதே நேரம் மிகச் சிறப்பாக சொல்லும் ஒரே தலைவர் கலைஞர் தான்..

பத்திரிகையாளர் கலைஞர்:

80 வருடங்களாக பத்திரிகைத் துறையில் இருக்கும் ஒரே மனிதர் கலைஞர்.. முரசொலி தன் மூத்த பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பத்திரிகைத் துறையை நேசிப்பவர்..

அப்டேட் கிங் கலைஞர்:

காலமாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்பவர் கலைஞர்.. முகநூலில் சேர்ந்தவுடன் "முகநூலை கண்டறிந்த மார்க்குக்க நன்றி" என்று ஸ்டேட்டஸ் போட்டு ரகளை செய்தார்..
சச்சின் சுயசரிதை புத்தகத்தை படித்து அதைப் பற்றி ஸ்டேட்டஸ் போட்டு சச்சினுக்கே டேக் செய்து மிரள வைத்தார்..
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில்  264 ரன்கள் சாதனை புரிந்தபோது அவருக்கு வாழ்த்து செய்தி போட்டு அவருக்கு டேக் செய்து டிரெண்ட் செய்தார்.. இப்படி தன் வாழ்நாள் முழுவதிலும் தன்னை அப்டேட் கிங்காகவே தன்னை வைத்துக் கொண்டவர் கலைஞர்...

கட்சித்தலைவராகக் கலைஞர்:

கலைஞரைப் போல் கட்சியை நடத்தியவன் உலகில் எவனுமே இல்லை.. சினிமாவில் வில்லனை அடிப்பதையும், நல்லது செய்வதையும் உண்மை என்று நம்பி ஒரு நடிகனைத் தொடர்ந்து முதலமைச்சராக்கும் முட்டாள் மக்கள்.. முதலமைச்சராகியும் எந்த நன்மையும் செய்யாத ஒரு நடிகர் என பல இக்கட்டத்தான நிலையிலும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் கலைஞர்.. எதிர்கட்சியிலிருந்து ஆட்களை இழப்பதற்கே பல வேலைகளை செய்தார் எம்.ஜி.ஆர்.. அதையெல்லாம் முறியடித்து இன்றுவரை கட்சியை நடத்தி வருகிறார் கலைஞர்.. உலக வரலாற்றிலேயே 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்த/ இருக்கின்ற ஒரே தலைவர் நம் கலைஞர் மட்டுமே...

ஊழல்வாதியா கலைஞர்? :

பொதுவௌியில் சிலரும், சமூக வலைதளத்தில் பலரும் வைக்கக்கூடிய ஒரு விமர்சனம் கலைஞர் ஓர் ஊழல்வாதி என்பது.. இது உண்மையா? கலைஞர் திருட்டு ரயிலில் சென்னை சென்றவர் தான் அதற்காக டிக்கெட் எடுக்கும் அளவிற்குக் கூட அவரிடம் வசதியில்லை என்பது பொய்.. வீட்டை விட்டு ஓடி வருபவர்கள் திருட்டு இரயில் பிடிப்பது எல்லா காலங்களிலும் நிகழ்வது.. திருவாரூரில் கலைஞரின் குடும்பம் மிக வசதியான குடும்பங்களில் ஒன்று.. சிறுவயதிலேயே மாணவர் பத்திரிகை என்று ஒன்றை ஆரம்பித்து அதை நடத்தும் அளவிற்கு வசதி உள்ளவரே கலைஞர்.. சென்னைக்கு வந்து திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியதன் மூலமும் சம்பாதித்தார்.. அவர் குடியிருக்கும் கோபாலபுரம் வீடு அவர் முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.. 75 ஆண்டுகால பொதுவாழ்வில் எந்தவித முறைகேடு/ ஊழல் வழக்கிற்காகவும் தண்டிக்கப்படாத ஒரே இந்தியத் தலைவர் கலைஞர்..

சாதனையாளர் கலைஞர்:

1. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்டை பெற்றுத் தந்தவர் கலைஞர்
2. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு
3. கை ரிக்ஷா முறையை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவை அறிமுகம் செய்தது
4. பெண்களுக்கு திருமண நிதியுதவி
5. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
6. மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு பயணக் கட்டண சலுகை
7. இலவச பஸ் பாஸ்
8. சத்துணவில் முட்டை
9. விவசாயக்கடன் ரத்து
10. அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி
11. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அறிமுகம்
12. பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு
13. இலவச எரிவாயு
14. 108 ஆம்புலன்ஸ்
15. உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
என எக்கச்சக்க திட்டங்களை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

முதலமைச்சராக கலைஞர் :

1969ல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை கலைஞர்.. அண்ணா மறைவால் தான் கலைஞர் முதல்வரானார் .. ஆனால் 1971ல் 234ல் 184ல் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வரானார் கலைஞர்.. ஒரு ஆளுங்கட்சி அவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றது அதற்கு முன்பும் இல்லை அதற்கு பின்பும் இல்லை.. இன்று வரை அதுவே சாதனை.. ஆக மக்கள் அங்கீகரித்த முதல்வர் அவர்.. தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் (ஏறக்குறைய 19 ஆண்டுகள்)...

நல்ல போராளி கலைஞர்:

கலைஞர் ஒரு நல்ல போராளி.. இந்தி எதிர்ப்பு ஆகட்டும், கல்லக்குடி இரயில் மறியல் ஆகட்டும், நெருக்கடி நிலை ஆகட்டும் அவரின் சீரிய  போராட்டத்திற்கு வெற்றியே கிடைத்துள்ளது...

நடுநிலை என்ற பெயரில் திரியும் சிலருக்கு:

1. கலைஞரை எதிர்க்கும் நீங்கள், நான் மேலே சாதனைகள் என்ற தலைப்பில் குறிப்பிட்டதைப் போல மற்ற முதல்வர் செய்ததைப் பட்டியலிட முடியுமா?

2. காவிரி விஷயத்தில் குறை கூறுபவர்களே நீங்கள் சொல்லுங்கள்... காவிரி நீர் யார் ஆட்சியில் அதிகநாள் வந்தது என்று?

3. ஈழத்தமிழர்களை கைவிட்டார் என்று குற்றம் சாட்டுபவர்களே, இரண்டு முறை ஈழத் தமிழர்களுக்காக பதவியையும் ஆட்சியையும் தூக்கியெறிந்தவர்கள் யாரென்று? (பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானமும், போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது இயல்பான ஒன்று தான் என்று ஈழ மக்கள் சாவதைப் பற்றி கூறியவரும் உங்களுக்கு ஈழத்தாயாக இருக்கும் பட்சத்தில் கலைஞர் தமிழன துரோகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..)

4. கலைஞர் ஆட்சியில் ஒருமுறையாவது பேருந்துக் கட்டணம் உயர்ந்து மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதா?

5. எந்த அரசு ஊழியர்களையாவது கலைஞர் தன் ஆட்சியில் டிஸ்மிஸ் செய்துள்ளாரா? (சாலைப் பணியாளர்கள் கலைஞர் ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரே கையெழுத்தில் 10000 பேரை வீட்டிற்கு அனுப்பியது யார்?)

கலைஞரின் எதிர்ப்பாளர்கள் யார்?

கலைஞர் பல்துறை வித்தகர்.. அவரை ஒரு தறையில் வெறுத்தாலும் மற்றொரு துறையில் தன்னை விரும்ப வைப்பவர்.. அப்படியிருந்தும் அவரை வெறுக்கிறார்கள் என்றால் அவர்கள் கீழ்க்கண்டவர்களுள் யாரேனும் ஒருவராய் இருப்பர்.
1. வரலாறு தெரியாதவர்கள்
2. எந்தவொரு விஷயத்தையும் அரைகுறையாய் புரிந்து கொள்பவர்கள்
3. தான் தான் பெரிய புடுங்கி என்று நினைத்துக் கொள்பவர்கள்
4. பிற்போக்குவாதிகள்
5. சுய சிந்தனை அற்றவர்கள்
6. முட்டாள்கள்
7. பகுத்தறிவு அற்றவர்கள்
8. கெட்டவர்கள்
9. உளவியல் கோளாறு உள்ளவர்கள்

முதுமையில் கலைஞர்:

தன் வாழ்நாளில் பல சாதனைகளை செய்து இன்று உடல்நிலை ஒத்துழைக்காததால் ஓயவில் உள்ளார் கலைஞர்.. இனி அவர் செய்ய வேண்டிய வேலை என்று எதுவும் இல்லை.. தன் கல்லறையில் "ஓய்வின்றி உழைத்தவன் இங்கே ஓய்வெடுக்கிறான்" என்று எழுத வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கு அதில் கூட வேலை வைக்காதவர் கலைஞர்.. இனி எத்தனை காலம் இருக்க  முடியுமோ தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும் அவர் பெயரை எழுதாமல் தமிழக வரலாறு, தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு, ஏன் எந்த அரசியல் கட்சித் தலைவர்களின் வரலாறும் கூட எழுத முடியாது.. காரணம் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே கலைஞர்...
#கலைஞர்95
#HBDKalaingar95