தொகுப்புகள்

Search This Blog

Saturday, July 21, 2018

கடலில் விழும் காவிரியை கையப் பிடிச்சு இழுக்காதே...

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'

- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.

இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.

மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள்  கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.

ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.

சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.

இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?

'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?

முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு  சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.

ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.

காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.

முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.

பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து  உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை.  காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.

“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை

மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"

என்கிறது அகநானூறு (126 : 4-5)

- நம்பிக்கை ராஜ்.

Thursday, June 21, 2018

இல்லும்னாட்டி பெரியார்

1964-ஆண்டு கரூர் வந்த #பெரியார் அவர்களை காண ஒரு அய்யர் பூணூலை மறைக்க ஒரு துண்டை போர்த்தி கொண்டு வந்தார்.

இதை கண்ட தொண்டர்கள் ஆவேசப்பட்டு, 'உனகென்னையா இங்கே வேலை' என்று கேட்க..

'நான் ராமசாமி நாயக்கரை பார்க்கணும். அதுதான் வேலை.' என்றவுடன்,

'அதெல்லாம் பார்க்கமுடியாது நீங்கள் திரும்பிப்போங்கள்' என்று சொன்ன சொல் அய்யாவின் காதில் விழுந்தது.

வெகுண்டு  வெளியே வந்த அய்யா,  நடந்ததைப் புரிந்து கொண்டு, தன் தோழர்களை அழைத்து..

"ஏனப்பா நீங்கள் எல்லாம் சுயமரியாதை காரர்கள்தானா? ஒருவர் நம்மைத் தேடிவந்தால் அவரை அழைத்து உபசரிக்க வேண்டாமா? இப்படி நீங்கள் செய்வதால் நம் கொள்கைக்கு எவ்வளவு பெரிய இழுக்கு தெரியுமா? தனிப்பட்ட எந்த ஒரு பார்பனரும் நமக்கு எதிரி கிடையாது" என கண்டிப்பு காட்டிவிட்டு..

அய்யா அந்த அய்யரிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு, உள்ளே அழைத்து விவரம்  கேட்டார்.

வந்தவர் "நாயக்கர்வாள் எனக்கு வயது 65. மனைவி இறந்து விட்டாள். பிள்ளைகள் கிடையாது. எங்கள் வீடு அகலம் 64 அடி. அதில் என் அண்ணன் பங்கு 32 அடி..

அதை அவன் உங்கள் கட்சிக்காரருக்கு விற்றுவிட்டான். வாங்கிய உங்கள் தொண்டர் கொல்லைப்பக்கம் வேலியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, இப்போது எனக்கு வெறும் 2 அடி மட்டுமே  உள்ளது.

வயதான இந்தக் காலத்தில் அவசரமாக என்னால் கழிவரைக்குக்கூட போகமுடியவில்லை.

நான் ஓய்வுபெற்ற ஆசிரியன். எனக்கு பென்ஷன் மாதம் 6 ரூபாய்தான் கிடைக்கிறது.

உங்களிடம் சொன்னால் நல்லது செய்வீர்கள் என்று என் உறவினர் சொன்னார்.. அதுதான் வந்தேன்" என்றார்..

இதைக்கேட்டு வேதனைப்பட்ட அய்யா, தொண்டர்களிடம் 'யாரப்பா அந்த அயோக்கியன்' என்று கேட்டார்..

'அய்யா இன்று இந்த கூட்டமே அவர் எற்பாடுதான்.'

-என்றவுடன்.. கூட்டிவாருங்கள் அவரை என்றார்...

அந்த தோழர் வந்து நின்றவுடன் அய்யா அவரிடம்...

"நீங்க நாளைக்கே வேலியை அவிழ்த்துக்கட்டி, அவருக்கு 32 அடி கொடுக்கணும். அதிலுள்ள மரம் எதையும் வெட்டக்கூடாது. அவருக்கு ஒரு பைசாகூட செலவு வைக்கக்கூடாது.

எந்த ஒரு சாக்குபோக்கு  சொல்லியும் இந்த காரியத்தை தள்ளிப் போடக் கூடாது.போ.."
-என்றார்..

10 நாட்கள் கழித்து அந்த அய்யர் சென்னை சென்று அய்யா அவர்களுக்கு கூடை நிறையபழங்கள் வாங்கிக்கொண்டு, நேரில் பார்த்து நன்றி கூறினார்..

பழங்களைவாங்க மறுத்த பெரியார்,

"நீங்கள் செய்தது தவறு. தப்பு செஞ்சவன் என் கட்சிக்காரன். அதற்கு ஏன் நீங்கள் எனக்குப்பழம் தரனும்? இதுபோன்ற செயல்களால்தான் லஞ்சம் ஆரம்பமாகிறது.

நீங்கள் நன்றி சொல்ல ஒரு அஞ்சலட்டை போதுமே? உங்கள் 6 ரூபாய் வருமானத்தில் ரயில் வண்டிக்கு 3 ரூபாய், இந்தப் பழங்கள்  20 ரூபாய் இருக்கும் இப்படிசெய்யலாமா?"

-என்று சொல்லி அவருக்கு 30 ரூபாய் கொடுத்து, வாசல் வரை வந்து அனுப்பியவர்தான் வந்தேறி.. இல்லுமணிட்டி என்று புகழப்பட்ட எம் திரவிட முப்பாட்டன் அய்யா தந்தை பெரியார் அவர்கள்..

#அவர்தான்_பெரியார்..

நன்றி: துரை வேலுமணி

Sunday, June 3, 2018

கலைஞரை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக படியுங்கள்

இப்பதிவை எழுத உடன்பிறப்பு #பா.அருண்குமார்,பொள்ளாச்சிArun Kumar அவர்களுக்கு 90 நிமிடங்கள் ஆனது.. ஆனால் நீங்கள் இரண்டு நிமிடங்களில் படித்துவிடலாம்.. கலைஞரைப் பிடிக்கும் என்பவர்கள் விருப்பமிருப்பின் படியுங்கள்.. பிடிக்காது என்பவர்கள் கட்டாயம் படியுங்கள்...

இன்று கலைஞரின் 95ஆவது பிறந்தநாள் என்ன சொல்லி வாழ்த்த? எப்படி வாழ்த்த? எப்படி வாழ்த்தினாலும் அது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.. கலைஞர் ஓர அரசியல்வாதி மட்டுமே என்றால் அவர் மேற்கொண்ட சாதனைகளை மட்டும் கூறி வாழ்த்தலாம்.. கலைஞர் ஒரு கதாசிரியர் மட்டுமே என்றால் அவரின் திரைப்படங்களை புகழ்ந்து வாழ்த்தலாம்.. கலைஞர் ஒரு நூலாசிரியர் மட்டுமே என்றால் அவரின் வரிகளை மேற்கோளிட்டு வாழ்த்தலாம்.. ஆனால் இவை மட்டும் தான் கலைஞர்? கலைஞர் ஓர் அரசியல்வாதி, முற்போக்குவாதி, கதாசிரியர், முதல்வர், கட்சித்தலைவர், நூலாசிரியர், முத்தமிழ் அறிஞர், பாடலாசிரியர், கவிஞர், நல்ல ரசிகர், இவற்றையெல்லாம் விட அவரே அடையாளப்படுத்திக் கொள்வதைப் போல ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் கலைஞர்..

வசனகர்த்தாவாக கலைஞர் :

வசனகர்த்தாவாக புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர்.. அந்தக் காலத்திலேயே மிகத் துணிச்சலாக வசனம் வைத்தவர் அவர்.. கடவுளையும் பூசாரியையும் மக்கள் மிகவும் வணங்கி வந்த காலகட்டத்தில் "அடேய் பூசாரி" என்றும் "அம்பாள் என்றைக்கடா பேசினாள்" என்றும் அன்றே பகுத்தறிவை ஊட்டியவர் அவர்

கதாசிரியராக கலைஞர் :

கலைஞரின் கதைகள் என்றுமே புரட்சியின் விதைகளாகவே இருந்துள்ளன.. புராண படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமத்த காலத்தில் சமூகப் படங்களை கொடுத்தவர் கலைஞர்...

பாடலாசிரியராகக் கலைஞர்:

பாடல் எழுதுவதிலும் வல்லவர் கலைஞர்.. "காகித ஓடம்" பாடல் அவர் மெட்டுக்கு எழுதிய பாடல்.. எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதுகையில் வாலி முதல் வரியை இப்படி எழுதினார் "நான் அளவோடு ரசிப்பவன்" இரண்டாவது வரி வரவில்லை.. அதிக நேரம் யோசித்த வேளையில் பாடல் எழுதும் தளத்திற்கு வந்த கலைஞர் இரண்டாவது வரியைச் சொன்னார் "எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று.. ஆக வாலிக்கே வரி கொடுத்தவர் கலைஞர்.. இவை எல்லாவற்றையும் விட 87 வயதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு "செம்மொழி" பாடல் எழுதினார் பாருங்கள் அது தான் சாதனை..

முத்தமிழ் அறிஞர் கலைஞர் :

இயல்,இசை, நாடகம் என மூன்றிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் கலைஞர்.. இதென்ன பெரிய அதிசயம் என்போர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.. வைரமுத்து, வாலிக்கு இசை தெரியும் நாடகம் வராது, ரஜினிக்கு நடிப்பு வரும்(😂😂😂) இசை வராது.. ஆனால் கலைஞர் இம்மூன்றிலும் வல்லவர்

நகைச்சுவை மன்னன் கலைஞர்:

ஒரு முறை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது , தண்ணீர் கூட அவருக்கு கொடுக்கக் கூடாது என்ற நிலை.. அந்நிலையில் கலைஞர் தண்ணீர் கேட்க ஒரு செவிலியர் ஸ்பூனில் சிறிதளவே தண்ணீர் கொடுக்க "ஏம்மா உன் பேரு காவிரியா கொஞ்சூண்டு குடுக்கற" என்று இயலாமையிலும் ரவுசு விடுபவர் கலைஞர்..

தன்னை கைது செய்ததைக் குறித்து இப்படி சொன்னார் "என்னை கைது செய்யும் போது என் கையை முறுக்கு முறுக்கென முறுக்கினார் ஒரு காவலர்.. அவர் பேர் பின்னர் தான் தெரிந்தது.. அவர் பேர் முருகேசன்"..

கலைஞர் ஓர் ஆகச் சிறந்த தத்துவவாதி :

கலைஞரின் சில தத்துவங்கள் உலகில் எவராலுமே சொல்ல முடியாதவை ..

"மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றத் தொடங்குகிறது"

என்ற அவரின் தத்துவத்தை உளவியலின் தந்தை எனப்படும் சிக்மண்ட் ஃபிராய்டால் கூட சொல்ல இயலாது என்பதே உண்மை..
அதே போல் "உண்மையை மறைப்பது என்பது விதையை மண்ணினுள் புதைப்பதைப் போன்றது" என்று எளிமையாக அதே நேரம் மிகச் சிறப்பாக சொல்லும் ஒரே தலைவர் கலைஞர் தான்..

பத்திரிகையாளர் கலைஞர்:

80 வருடங்களாக பத்திரிகைத் துறையில் இருக்கும் ஒரே மனிதர் கலைஞர்.. முரசொலி தன் மூத்த பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பத்திரிகைத் துறையை நேசிப்பவர்..

அப்டேட் கிங் கலைஞர்:

காலமாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்பவர் கலைஞர்.. முகநூலில் சேர்ந்தவுடன் "முகநூலை கண்டறிந்த மார்க்குக்க நன்றி" என்று ஸ்டேட்டஸ் போட்டு ரகளை செய்தார்..
சச்சின் சுயசரிதை புத்தகத்தை படித்து அதைப் பற்றி ஸ்டேட்டஸ் போட்டு சச்சினுக்கே டேக் செய்து மிரள வைத்தார்..
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில்  264 ரன்கள் சாதனை புரிந்தபோது அவருக்கு வாழ்த்து செய்தி போட்டு அவருக்கு டேக் செய்து டிரெண்ட் செய்தார்.. இப்படி தன் வாழ்நாள் முழுவதிலும் தன்னை அப்டேட் கிங்காகவே தன்னை வைத்துக் கொண்டவர் கலைஞர்...

கட்சித்தலைவராகக் கலைஞர்:

கலைஞரைப் போல் கட்சியை நடத்தியவன் உலகில் எவனுமே இல்லை.. சினிமாவில் வில்லனை அடிப்பதையும், நல்லது செய்வதையும் உண்மை என்று நம்பி ஒரு நடிகனைத் தொடர்ந்து முதலமைச்சராக்கும் முட்டாள் மக்கள்.. முதலமைச்சராகியும் எந்த நன்மையும் செய்யாத ஒரு நடிகர் என பல இக்கட்டத்தான நிலையிலும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் கலைஞர்.. எதிர்கட்சியிலிருந்து ஆட்களை இழப்பதற்கே பல வேலைகளை செய்தார் எம்.ஜி.ஆர்.. அதையெல்லாம் முறியடித்து இன்றுவரை கட்சியை நடத்தி வருகிறார் கலைஞர்.. உலக வரலாற்றிலேயே 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்த/ இருக்கின்ற ஒரே தலைவர் நம் கலைஞர் மட்டுமே...

ஊழல்வாதியா கலைஞர்? :

பொதுவௌியில் சிலரும், சமூக வலைதளத்தில் பலரும் வைக்கக்கூடிய ஒரு விமர்சனம் கலைஞர் ஓர் ஊழல்வாதி என்பது.. இது உண்மையா? கலைஞர் திருட்டு ரயிலில் சென்னை சென்றவர் தான் அதற்காக டிக்கெட் எடுக்கும் அளவிற்குக் கூட அவரிடம் வசதியில்லை என்பது பொய்.. வீட்டை விட்டு ஓடி வருபவர்கள் திருட்டு இரயில் பிடிப்பது எல்லா காலங்களிலும் நிகழ்வது.. திருவாரூரில் கலைஞரின் குடும்பம் மிக வசதியான குடும்பங்களில் ஒன்று.. சிறுவயதிலேயே மாணவர் பத்திரிகை என்று ஒன்றை ஆரம்பித்து அதை நடத்தும் அளவிற்கு வசதி உள்ளவரே கலைஞர்.. சென்னைக்கு வந்து திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியதன் மூலமும் சம்பாதித்தார்.. அவர் குடியிருக்கும் கோபாலபுரம் வீடு அவர் முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.. 75 ஆண்டுகால பொதுவாழ்வில் எந்தவித முறைகேடு/ ஊழல் வழக்கிற்காகவும் தண்டிக்கப்படாத ஒரே இந்தியத் தலைவர் கலைஞர்..

சாதனையாளர் கலைஞர்:

1. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்டை பெற்றுத் தந்தவர் கலைஞர்
2. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு
3. கை ரிக்ஷா முறையை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவை அறிமுகம் செய்தது
4. பெண்களுக்கு திருமண நிதியுதவி
5. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
6. மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு பயணக் கட்டண சலுகை
7. இலவச பஸ் பாஸ்
8. சத்துணவில் முட்டை
9. விவசாயக்கடன் ரத்து
10. அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி
11. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அறிமுகம்
12. பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு
13. இலவச எரிவாயு
14. 108 ஆம்புலன்ஸ்
15. உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
என எக்கச்சக்க திட்டங்களை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

முதலமைச்சராக கலைஞர் :

1969ல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை கலைஞர்.. அண்ணா மறைவால் தான் கலைஞர் முதல்வரானார் .. ஆனால் 1971ல் 234ல் 184ல் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வரானார் கலைஞர்.. ஒரு ஆளுங்கட்சி அவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்றது அதற்கு முன்பும் இல்லை அதற்கு பின்பும் இல்லை.. இன்று வரை அதுவே சாதனை.. ஆக மக்கள் அங்கீகரித்த முதல்வர் அவர்.. தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் (ஏறக்குறைய 19 ஆண்டுகள்)...

நல்ல போராளி கலைஞர்:

கலைஞர் ஒரு நல்ல போராளி.. இந்தி எதிர்ப்பு ஆகட்டும், கல்லக்குடி இரயில் மறியல் ஆகட்டும், நெருக்கடி நிலை ஆகட்டும் அவரின் சீரிய  போராட்டத்திற்கு வெற்றியே கிடைத்துள்ளது...

நடுநிலை என்ற பெயரில் திரியும் சிலருக்கு:

1. கலைஞரை எதிர்க்கும் நீங்கள், நான் மேலே சாதனைகள் என்ற தலைப்பில் குறிப்பிட்டதைப் போல மற்ற முதல்வர் செய்ததைப் பட்டியலிட முடியுமா?

2. காவிரி விஷயத்தில் குறை கூறுபவர்களே நீங்கள் சொல்லுங்கள்... காவிரி நீர் யார் ஆட்சியில் அதிகநாள் வந்தது என்று?

3. ஈழத்தமிழர்களை கைவிட்டார் என்று குற்றம் சாட்டுபவர்களே, இரண்டு முறை ஈழத் தமிழர்களுக்காக பதவியையும் ஆட்சியையும் தூக்கியெறிந்தவர்கள் யாரென்று? (பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானமும், போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது இயல்பான ஒன்று தான் என்று ஈழ மக்கள் சாவதைப் பற்றி கூறியவரும் உங்களுக்கு ஈழத்தாயாக இருக்கும் பட்சத்தில் கலைஞர் தமிழன துரோகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..)

4. கலைஞர் ஆட்சியில் ஒருமுறையாவது பேருந்துக் கட்டணம் உயர்ந்து மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதா?

5. எந்த அரசு ஊழியர்களையாவது கலைஞர் தன் ஆட்சியில் டிஸ்மிஸ் செய்துள்ளாரா? (சாலைப் பணியாளர்கள் கலைஞர் ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரே கையெழுத்தில் 10000 பேரை வீட்டிற்கு அனுப்பியது யார்?)

கலைஞரின் எதிர்ப்பாளர்கள் யார்?

கலைஞர் பல்துறை வித்தகர்.. அவரை ஒரு தறையில் வெறுத்தாலும் மற்றொரு துறையில் தன்னை விரும்ப வைப்பவர்.. அப்படியிருந்தும் அவரை வெறுக்கிறார்கள் என்றால் அவர்கள் கீழ்க்கண்டவர்களுள் யாரேனும் ஒருவராய் இருப்பர்.
1. வரலாறு தெரியாதவர்கள்
2. எந்தவொரு விஷயத்தையும் அரைகுறையாய் புரிந்து கொள்பவர்கள்
3. தான் தான் பெரிய புடுங்கி என்று நினைத்துக் கொள்பவர்கள்
4. பிற்போக்குவாதிகள்
5. சுய சிந்தனை அற்றவர்கள்
6. முட்டாள்கள்
7. பகுத்தறிவு அற்றவர்கள்
8. கெட்டவர்கள்
9. உளவியல் கோளாறு உள்ளவர்கள்

முதுமையில் கலைஞர்:

தன் வாழ்நாளில் பல சாதனைகளை செய்து இன்று உடல்நிலை ஒத்துழைக்காததால் ஓயவில் உள்ளார் கலைஞர்.. இனி அவர் செய்ய வேண்டிய வேலை என்று எதுவும் இல்லை.. தன் கல்லறையில் "ஓய்வின்றி உழைத்தவன் இங்கே ஓய்வெடுக்கிறான்" என்று எழுத வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கு அதில் கூட வேலை வைக்காதவர் கலைஞர்.. இனி எத்தனை காலம் இருக்க  முடியுமோ தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும் அவர் பெயரை எழுதாமல் தமிழக வரலாறு, தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு, ஏன் எந்த அரசியல் கட்சித் தலைவர்களின் வரலாறும் கூட எழுத முடியாது.. காரணம் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே கலைஞர்...
#கலைஞர்95
#HBDKalaingar95