தொகுப்புகள்

Search This Blog

Monday, December 6, 2010

த த த தண்ணீர் வேண்டும் தாகமாயிருக்கு.......


தண்ணீர் பிரச்சனை என்றதும் சட்டென நம் நினைவுக்கு காவேரியும், முல்லைப் பெரியாறும், சேது சமுத்திரமும் வரக் கூடும். விவசாயத் தோழர்கள் எனில் சில்லென வயல் நனைக்கும் மழையோ, நகர்ப்புற வாசிகள் எனில் தெருமுனையில் நிற்கும் மாநகர தண்ணீர் தொட்டியோ, எப்போதேனும் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரோ, தண்ணீர் லாரியோ நினைவுக்கு வரலாம். எதைப்பற்றியும் கவலைப்படாத கண்ணாடிக் கட்டிட வாசிகளுக்குக் குறைந்தபட்சம் மினரல் வாட்டராவது நினைவு வரும்.
காவேரியோ, முல்லைப்பெரியாறோ முற்றிலுமாக வற்றிப் போய்விட்டால் என்ன செய்வார்கள் என குதர்க்கமாய் சிந்திப்பவர்களுக்கு அப்படி ஒரு காலம் விரைவில் வரக் கூடும் என எச்சரிக்கை செய்கிறது ஐக்கிய நாடுகளின் சபை.
உலகில் தண்ணீருக்காக மக்கள் தவிக்கப் போகின்றனர். தேவையான அளவு நல்ல தண்ணீர் கிடைக்காமல் உலகம் பாலைவனமாகப் போகிறது. என அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போதைய உலகின் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால், உலக மக்கள் தொகை தற்போதைய ஆறு பில்லியன் எனும் அளவிலிருந்து எட்டரை பில்லியன் எனுமளவுக்கு இன்னும் இருபதே ஆண்டுகளில் அதிகரிக்கப் போகிறதாம். இந்த அதிகப்படியான மக்கள் தொகை தண்ணீரின் தேவையை உலக அளவில் அதிகரிக்கப் போகிறது.
ஒரு ஆண்டுக்கு மூவாயிரம் லிட்டர் எனுமளவில் வளர்ந்த நாடுகளிலுள்ள மக்கள் நல்ல தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். அதாவது தினமும் சுமார் எட்டே கால் லிட்டர் தண்ணீர். இந்த அளவை வைத்துப் பார்த்தால், இன்னும் ஒரு இரண்டரை மில்லியன் மக்களுக்குத் தேவையான தண்ணீர் எவ்வளவு தெரியுமா ? சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்  நீளமும், இரண்டாயிரம் கிலோமீட்டர் ஆழமும், இரண்டாயிரம் கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு மிகப்பெரிய தண்ணீர் கடல்.
கடந்த நூறு ஆண்டுகளில் உலக அளவில் தண்ணீரின் தேவை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறது. இனி வரும் காலம் இந்த அளவு வெகு விரைவாக பல மடங்கு உயர்ந்து விடும், காரணம் தேவை அதிகரிப்பு. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் இந்த தேவை 2050 களில் இப்போதைய தேவையிலிருந்து இரண்டு மடங்கு அதிகரிக்கும்.
உலகின் பல பகுதிகளில் இன்றைக்கே தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. குறிப்பாக விவசாயத் தேவைக்கான தண்ணீரோ, வளரும் நாடுகளிலுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீரோ கூட தேவையை விட குறைவாகவே கிடைக்கிறது. இத்தகைய சூழலில் தேவையும் அதிகரிக்கும் போது மனுக்குலம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிவரும் என எச்சரிக்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிராங்க் ரிஜர்ஸ்பன்.
காடுகளை அழிப்பதும், நகர்ப்புறங்களை விரிவுபடுத்தி இயற்கை வளங்களை விலக்குவதும் இன்றைய சூழலை இன்னும் அதிகமாய் சிக்கலுக்குள் ஆளாக்கி விடுகின்றன என்பது நாம் அறிந்ததே. ஒருபுறம் தேவை அதிகரிக்க, மறுபுறம் வரத்தும் குறைவாய் இருக்குமானால் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகமில்லை.


இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் தண்ணீருக்கான மிகப்பெரிய சிக்கல் உலக அளவில் உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதால், அரசுகள் அதற்குரிய நடவடிக்கையில் இறங்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் குழு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுகளில் தண்ணீர் சேமிப்பு, மழை நீர் சேமிப்பு, கடல்நீரை குடிநீராக்குதல், இயற்கை வளங்களை சேமித்தல் என பல்வேறு உயர் நிலை அறிவுறுத்தல்கள் அரசுகளை நோக்கி நீட்டப்படுகையில்,
சிக்கனமாய் தண்ணீரைச் செலவு செய்யுங்கள் என்பதும், தண்ணீரை மாசு படுத்தாதிருங்கள் என்பதும், நீர் வளங்களை அழிக்காதீர்கள் என்பதும் பொதுமக்களை நோக்கி உலகம் நீட்டும் கோரிக்கையாய் இருக்கிறது.
உலக அளவில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது இன்றைக்கு எண்ணைக்காகவும், வளங்களுக்காகவும் நடக்கும் போர் தண்ணீருக்காகவும் நடக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். உதாரணமாக துருக்கியிலிருந்து சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும் திக்ரிஸ், யூப்பிரட்டீஸ் போன்ற நதிகள் கர்நாடகாவின் கைங்கர்யம் போல துருக்கியிலேயே அணைகளுக்குள் அடைக்கப்பட்டால் சிரியாவும், ஈராக்கும் தண்ணீருக்காக தவிக்க வேண்டியிருக்கும்.
இப்போது இஸ்ரேலும், ஜோர்தான் பகுதியும் இணைந்து ஜோர்தான் நதியைப் பாதுகாத்து பயன்படுத்தி வருகின்றனர். எதிர்கால தண்ணீர் சிக்கல் அரசியலாக்கப்பட்டாலோ, சுயநலமாக்கப்பட்டாலோ சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. எத்தியோப்பியாவும், எகிப்தும் வருடம் ஒருமுறை கலந்து பேசி தங்கள் தண்ணீர் தேவைகளைக் குறித்தும், பயன்பாடு குறித்தும் விவாதிக்கின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
போர்களுக்கு முன்பாகவே, தண்ணீர் உலக அளவில் விலையேற்றத்துக்கான முக்கிய காரணமாகப் போகிறது என்பது இன்னோர் கணிப்பு. வறட்சியின் காரணமாக பட்டினியையும், எலிக்கறி உண்ணும் அவலத்தையும் கண்ட நமக்கு அதன் விஸ்வரூப வெளிப்பாட்டை கற்பனை செய்வதே நடுங்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிலும் குறிப்பாக ஆசியா-பசிபிக் பகுதியில் வாழும் மக்களில் சுமார் ஒரு நூற்று பத்து கோடி பேர் சரியான இப்போதே சரியான தண்ணீர் வசதி இல்லாமல் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கைப் படி உலகில் சுமார் ஐம்பது இலட்சம் மக்கள் ஆண்டுதோறும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததால் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலான நாடுகள் தண்ணீர் நிர்வாகத்தைச் சரியாக நிர்வகிக்கவில்லை எனவும் ஏனோ தானோவெனும் போக்கையே பல நாடுகளும் தண்ணீர் விஷயத்தில் கடைபிடிக்கின்றன எனவும் உலக நாடுகளின் தண்ணீர் வள ஆலோசகர் பிரிஸ்கோ குற்றம் சாட்டுகிறார்.
இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவில் நிகழும் காடு அழிப்பு, நாடு விரிவாக்கம், ஏரிகள் அழிப்பு போன்றவை அந்தப் பகுதிகளை வெகு விரைவிலேயே வறட்சிக்குள் தள்ளி பாலை நிலமாக்கி விடுகின்றன.
உலக மக்கள் தொகை அளவின் படி முதலிடத்தில் இருக்கும் சீனா தனது முன்னூறு நகரங்களில் தேவையான குடிநீர் வசதிகள் இல்லை என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறது. இருக்கின்ற நீர் நிலைகளும் பெரிதும் மாசுபட்டுள்ள நிலையில் சீனாவின் தண்ணீர் சிக்கல் எந்நேரமும் பெரிய அளவில் வெடிக்கலாம் எனும் சூழலே அங்கும் நிலவுகிறது.
மழை கைவிடாத நாடுகளில் நிலமையே இப்படி இருக்கையில் நைல் நதியை மட்டுமே நம்பியிருக்கும் எகிப்தின் நிலமை இன்னும் பரிதாபம். நைல் நதியின் அளவு குறைவதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் எகிப்திய மக்கள்.
தண்ணீரின் தேவை உலகின் மாசு அதிகரித்தலுக்கு முக்கிய காரணமாகி விடும். குடிநீரைத் தவிர சுத்தமான வாழ்க்கைக்கும், கழிவுப் பொருட்களை அகற்றவும் தேவையான தண்ணீர் இல்லாத சூழல் சுகாதாரமற்ற வாழ்க்கையையே வலுக்கட்டாயமாய் திணிக்கும்.
வழக்கம் போலவே வறுமையானாலும், தண்ணீர் பற்றாக்குறையானாலும் முதலில் பாதிக்கப்படுவது வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் நமது சகோதரர்களே. தண்ணீருக்காய் அதிகமான பணம் செலவிட வேண்டிய சூழல் தண்ணீரே இல்லாமல் தவிக்கும் நிலைக்கோ, சுகாதாரமற்ற சூழலுக்கோ இவர்கள் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
ஏற்கனவே சுகாதாரமற்ற வாழ்க்கை வாழும் நாடுகளில் இது இன்னும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் சுமார் நான்காயிரம் குழந்தைகள் தினம்தோறும் கக்கல், கழிச்சல் போன்ற நோய்களால் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த சிக்கல் இன்னும் பெருமளவு அதிகரிக்க இந்த தண்ணீர் சிக்கல் காரணமாகிவிடக் கூடும்.
பாலையில் நடப்பவனுக்குத் தான் தெரியும் தண்ணீரின் மகத்துவம். தாகத்தில் தவிக்கும் போது நமக்கு தங்கத்தை விட மதிப்பானது தண்ணீரே. நம்மால் முடிந்த அளவு தண்ணீரைச் சேமிக்கவும், மிச்சப்படுத்தவும் முயல்வது நமது வருங்கால சந்ததிக்கு நாம் வழங்கும் வரமெனக் கொள்ளப்படும்.
சரி… நாம் ஏதேனும் செய்யமுடியுமா ?

1. வீட்டுக் குழாய்களில் எங்கேனும் தண்ணீர் சொட்டுச் சொட்டாய் வழிகிறதா எனப் பாருங்கள். சிறு துளி பெருவெள்ளம். ஏராளமான தண்ணீர், கசிவுகளின் வழியாகத் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஒரு வினாடிக்கு ஒரு துளி தண்ணீர் என கணக்கிட்டால் வருடத்துக்கு சுமார் எட்டாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.
.

2. முகச் சவரம் செய்யும்போதோ, பல் துலக்கும்போதோ, பாத்திரம் கழுவும் போதோ குழாயைத் திறந்து விடாமல் ஒரு பாத்திரத்தைப் பயன்படுத்துவதும், ஷவரை சரியான முறையில் பயன்படுத்துவதும் வீடுகளில் நிறைய தண்ணீரை மிச்சப்படுத்தும்.

.

3. தேவையானபோது மட்டும் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுங்கள். தேவையான அளவு. செடிகளின் வேரருகே தண்ணீர் விடுவது அதிக பயன் தரும்.

.

4. செடிகளுக்குத் தண்ணீர் விடும்போது காலையில் விடவேண்டும். அப்படிச் செய்தால் செடிகள் குறைந்த தண்ணீரிலேயே அதிக பயனடையும்.

.

5. வாகனங்களை சுத்தம் செய்யும் போது குழாயிலிருந்து தண்ணீரை மழைபோல அடிக்காமல் இருப்பது தண்ணீரை மிச்சப்படுத்தும். ஒரு பக்கெட் பயன்படுத்தலாம்.

.

6. குழாயைத் திறந்து விட்டுக்கொண்டே காய்கறிகளைக் கழுவுதலைத் தவிருங்கள்.

.

7. வீடுகளில் தண்ணீரைச் சிக்கனமாய் பயன்படுத்துவதைப் போலவே பொது தண்ணீரையும் பயன்படுத்துங்கள். உதாரணமாக பூங்காக்கள், உணவகங்கள், தெருவோர தண்ணீர் குழாய்கள், அலுவலகங்கள்.

.

8. மறுபடியும் பயன்படுத்தக் கூடிய தண்ணீரை வீணாக்காதீர்கள். உதாரணமாக மீன் தொட்டியைக் கழுவும் தண்ணீர் கூட செடிக்கு ஊற்றப்படலாம்.

.

9. வாஷிங் மெஷின் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் சரியான அளவு துணிகள் சேர்ந்தபின் பயன்படுத்துங்கள்.

.

10. மிக முக்கியமாக, குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


இனி நம்ம ஊர் பற்றி பார்போம் ,
                          நான் தலைவரான பிறகு இதுவரை சுமார் 120 போர் போட்டாச்சு இருத்தும் நாற்பது சதவித போர்லிதான் தண்ணீர் உள்ளது . அவினாசியில் சுமார் 1200 அடி வரை நிலத்தடிநீர் சென்றுவிட்டது . அகவேதான் நம் மக்களை அழைத்து நாளை ஓர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தவுள்ளோம் . அனைவரும் வாரீர் ..  

No comments:

Post a Comment